![](pmdr0.gif)
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம்
பாலகாண்டம் /பாகம் 2, படலங்கள் 11-22
rAmAyaNam
of kampar /canto 1, part 2 (paTalams 11-22)
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for
providing us with a romanized transliterated version of this work and for permissions
to publish the equivalent Tamil script version in Unicode encoding
We also thank Mr. S. Govindarajan for proof-reading the Tamil script version
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2012.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய
இராமாயணம் - பாகம் 1
காண்டம் 1 (பாலகாண்டம்) /படலங்கள் 11-22
1.11. குலமுறை கிளத்து படலம் (721 - 749)
'ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்
சோதித் தன் வரி சிலையால் நிலம் மடந்தை முலை சுரப்பச்
சாதித்த பெருந்தகையும் இவர் குலத்து ஓர் தராபதி காண். - 1.11.1
722 - இட்சுவாகு
'பிணி அரங்க வினை அகலப், பெருங்காலம் தவம் பேணி,
மணி அரங்கு அம் நெடும் முடியாய்! மலர் அயனை வழிபட்டுப்,
பணி அரங்கப் பெரும் பாயல் பரம் சுடரை யாம் காண
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்.' - 1.11.2
723 - ககுத்தன்
"தான் தனக்கு வெலற்கு அரிய
'தானவரைத் தலை, துமித்து என்
வான் தரக்கிற்றி கொல்?' என்று
குறை இரப்ப, வரம் கொடுத்து ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினனாய்
இகல்புரிந்த இவர் குலம் அத்து ஓர்
தோன்றலைப் பண்டு இந்திரன்காண்
விடை ஏறு ஆய் சுமந்தானும்!" - 1.11.3
724 - கடல் கடைந்த காவலன்
'அரச! அவன் பின்னோரை என்னானும் அளப்ப அரிது ஆல்:
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன் காண்,
நரை திரை மூப்பு இவை மாற்றி, இந்திரனும் நந்தாமல்,
குரை கடலை நெடும் வரை ஆல் கடைந்து அமுது கொடுத்தானும்.' - 1.11.4
725 - மாந்தாதா
'கருதல் அரும் பெரும் குணத்தோர்,
இவர் முதலோர் கணக்கு இறந்தோர்,
திரிபுவனம் முழுது ஆண்டு
சுடர் நேமி செல நின்றோர்,
பொருது உறைசேர் வேலினாய்!
புலி போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண
உலகு ஆண்டோன் உளன் ஒருவன்.' - 1.11.5
726 - முசுகுந்தன்
'மறை மன்னும் மணி முடியும்
ஆரமும் வாளொடு மின்னப்,
பொறை மன்னு வானவரும்
தானவரும் பொரும் ஒரு நாள்,
விறல் மன்னர் தொழு கழலாய் !
இவர் குலத்தோன் வில் பிடித்த
அறம் என்ன ஒரு தனி ஏ
திரிந்து அமராபதி காத்தான்.' - 1.11.6
727 - சிபி
'இன் உயிர்க்கும் இன் உயிராய்
இரு நிலம் காத்தார்' என்று,
பொன் உயிர்க்கும் கழல் வரை
ஆம் போலும் புகழ்கிற்பாம் !
மின் உயிர்க்கும் நெடு வேலாய் !
இவர் குலத்தோன் மென் புறவின்
மன் உயிர்க்கும் தன் உயிரை
மாறாக வழங்கினனால்.' - 1.11.7
728 - சாகரர்
'இடறு ஓட்ட இன நெடிய
வரை உருட்டி இவ் உலகம்
திடல் தோட்டம் எனக் கிடந்தது
என விரி தார்த் தெவ் வேந்தர்
உடல் தோட்ட நெடு வேலாய்!
இவர் குலத்தோர் உவரி நீர்க்
கடல் தோட்டார் எனின், வேறு ஓர்
கட்டுரையும் வேண்டும் ஓ ?' - 1.11.8
729 - பகீரதன்
'தூ நின்ற சுடர் வேலோய்!
அனந்தனே சொல்லானேல்,
யான் இன்று புகழ்ந்து உரைத்தற்கு
எளிது ஓ? ஏடு அவிழ் கொன்றைப்
பூ நின்ற மவுலியையும்
புக்கு அளைந்த புனல் கங்கை,
வான் நின்று கொணர்ந்தானும்,
இவர் குலத்து ஓர் மன்னவன் காண்'. - 1.11.9
730 - அசுவமேதயாகம் நூறு செய்தவன்
'கயல் கடல் சூழ் உலகு எல்லாம்
கை நெல்லிக் கனி ஆக்கி,
இயற்கை நெறி முறையாலே
இந்திரற்கும் இடர் இயற்றி,
முயல் கறை இல் மதிக் குடையாய்!
இவர் குலத்தோன் முன் ஒருவன்,
செயற்கு அரிய பெரு வேள்வி
ஒரு நூறும் செய்து அமைத்தான்.' - 1.11.10
731 - ரகு
'சந்திரனை வென்றானும், உருத்திரனைச் சாய்த்தானும்,
துந்து எனும் தானவனைச் சுடு சரத்தால் துணித்தானும்
வந்த குலத்து இடை வந்த ரகு என்பான், வரி சிலையால்
இந்திரனை வென்று, திசை இரு நான்கும் செரு வென்றான்'. - 1.11.11
732 - அயன்
'வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி,
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன, அயன் என்பான்
மல் என்னும் திரள் புயத்துக்கு, அணி என்ன வைத்தானே.' - 1.11.12
733 - தசரதனும் அவன் திருக்குமாரர்களும்
'அயன் புதல்வன் தயரதனை
அறியாதார் இல்லை; அவன்
பயந்த குலக் குமரர் இவர்
தமை உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்துக் கரை ஏற
நான்முகற்கும் அரிது ஆம்; பல்,
இயம் துவைத்த கடைத்தலையாய்!
யான் அறிந்தபடி கேளாய்!' - 1.11.13
734 - தசரதன் மகவின்றி வருந்தல்
'துனி இன்றி உயிர் செல்லச், சுடர் ஆழிப் படை வெய்யோன்
பனி வென்ற படி என்னப், பகை வென்று படி காப்போன்,
தனு அன்றித் துணை இல்லான், தருமத்தின் கவசத்தான்,
மனு வென்ற நீதியான், மகவு இன்றி வருந்துவான்.' - 1.11.14
735 - தசரதன் கலைக்கோட்டுமுனிவரை எண்ணுதல்
'சிலைக் கோட்டு நுதல் குதலைச்
செம் கனி வாய், கரும் நெடும் கண்,
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல்,
மின் நுடங்கும் இடையாரை,
முலைக் கோட்டு விலங்கு என்று அங்கு
உடன் அணுகி, முன் நின்ற
கலைக்கோட்டுத் திரு முனியால்,
துயர் நீங்கக் கருதினான்.' - 1.11.15
736 - தசரதன் கலைக்கோட்டுமுனியை வேண்டல்
'தார் காத்த நறும் குஞ்சி தனயர்கள், என் தவம் இன்மை
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலர் ஆல்,
நீர் காத்த கடல் காத்த நிலம் காத்தேன், என்னில் பின்,
பார் காத்தற்கு உரியாரைப் பணி நீ என்று அடி பணிந்தான்.' - 1.11.16
737 - கலைக்கோட்டுமுனி வேள்வி தொடங்குதல்
அவ் உரை கேட்டு அ முனியும்
அருள் சுரந்த உவகையன் ஆய்,
'இவ் உலகம் அன்றி, ஈர்
ஏழ் உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளம் குரிசிலரை
தருகின்றேன்; இனித் தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு
உரிய எலாம் வருக' என்றான். - 1.11.17
738 - வேள்விக் குண்டத்தில் பூதம் தோன்றுதல்
'காதலரைத் தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப,
மாதவரில் பெரியோனும், மற்று அதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொன் கலத்துச் சுதை அனைய வெண் சோறு, ஓர்
பூதகணம் அத்து அரசு ஏந்தி, அனல் நின்றும் போந்தது ஆல்.' - 1.11.18
739 - தசரதன் சுதையைத் தன் தேவியர்க்கு அளித்தல்
'பொன்னின் மணிப் பரிகலத்தில்
புறப்பட்ட இன் அமுதைப்,
பன்னும் மறைப் பொருள் உணர்ந்த
பெரியோன் தன் பணியினால்,
தன் அனைய நிறை குணத்துத்
தசரதனும், வரன் முறை ஆல்,
நல் நுதலார் மூவருக்கும்
நாலு கூறு இட்டு அளித்தான்.' - 1.11.19
740 - கௌசலை இராமனைப் பெறுதல்
'விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீ வினை ஆலும்,
அரும் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்,
இரும் கடகக் கரதலம் அத்து இவ் எழுதரிய திரு மேனி
கருங்கடலைச், செங்கனி வாய்க் கௌசலை என்பாள் பயந்தாள்.' - 1.11.20
741 - கைகேயி பரதனைப் பெறுதல்
'தள் அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானைப், பரதன் எனும் பெயரானை,
எள் அரிய குணத்தாலும் எழிலாலும், இவ் இருந்த
வள்ளலை ஏ அனையானைக், கேகயர் கோன் மகள் பயந்தாள்.' - 1.11.21
742 - சுமித்திரை இலக்குமண சத்துருக்கனரைப் பெறுதல்
'அரு வலிய திறலினராய், அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெரு வரு திண் திறலார்கள், வில் ஏந்தும் எனில் செம் பொன்
பரு வரையும் நெடு வெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்
இருவரையும், இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள்.' - 1.11.22
743 - புதல்வர்களின் வளர்ச்சி
'தலை ஆய பேர் உணர்வின் கலைமகட்குத் தலைவராய்ச்,
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரைப்போல் பணிசெய்யக்,
கலை ஆழிக் கதிர்த் திங்கள் உதயத்தில், கலித்து ஓங்கும்
அலை ஆழி என, வளர்ந்தார், மறை நான்கும் அனையார்கள்.' - 1.11.23
744 - புதல்வரின் வேத முதலிய கலைப்பயிற்சி
'திறையோடும் அரசு இறைஞ்சும்
செறி கழல் கால் தசரதனாம்
பொறையோடும் தொடர் மனத்தான்
புதல்வர் எனும் பெயரே காண்?
உறை ஓடும் நெடு வேலாய்!
உபநயன விதி முடித்து,
மறை ஓதுவித்து, இவரை
வளர்த்தானும் வசிட்டன் காண்.' - 1.11.24
745 - இராமலக்குமணர்கள் தன் வேள்வி காத்தமை கூறல்
'ஈங்கு இவரால் என் வேள்விக்கு
இடையூறு கடிது இயற்றும்
தீங்கு உடைய கொடியோரைக்
கொல்விக்கும் சிந்தையன் ஆய்ப்,
பூ கழலார்க் கொண்டுபோய்
வனம் புக்கேன், புகாமுன்னம்
தாங்கு அரிய பேர் ஆற்றல்
தாடகையே தலைப்பட்டாள்.' - 1.11.25
746 - இராமன் தாடகைமேல் எய்த அம்பின் சிறப்பு
'அலை உருவு அக் கடல் உருவத்து
ஆண்டகை தன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை
நீ உருவ நோக்கு, ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண்
தாடகை தன் உரம் உருவி,
மலை உருவி, மரம் உருவி,
மண் உருவிற்று ஒரு வாளி' - 1.11.26
747 - தாடகை மக்களின் மறைவு
'செக்கர் நிறம் அத்து எரி குஞ்சிச் சிரக் குவைகள் பொருப்பு என்ன
உக்கன ஓ முடிவு இல்லை ; ஓர் அம்பினொடும், அரக்கி
மக்களில் அங்கு ஒருவன் போய் வான் புக்கான் மற்றை அவன்
புக்க இடம் அறிந்திலேன், போந்தனன் என் வினை முடித்து ஏ' - 1.11.27
748 - இராமன் படைக்கலங்களின் சிறப்பு
'ஆய்ந்து ஏற உணர் ஐய! அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவில், உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீந்து ஏறச் சுடுகிற்கும் படைக்கலங்கள், செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க, இவற்கு ஏவல் செய்குந ஆல்' - 1.11.28
749 - இராமனின் மேன்மை
'கோதமன் தன் பன்னிக்கு
முன்னை உருக் கொடுத்தது இவன்
போது நின்றது எனப் பொலிந்த
பொலன் கழல் கால் பொடி கண்டாய்!
காதல் என் தன் உயிர் மேலும்
இ கரியோன் பால் உண்டு ஆல்;
ஈது இவன்தன் வரலாறும்
புயம் வலியும்' என உரைத்தான். - 1.11.29
1.12. கார்முகப் படலம். (750 - 815)
"மாற்றம் யாது உரைப்பது? மாயம் விற்கு நான்
தோற்ற ஆறு என, மனம் துளங்குகின்றது ஆல்,
நோற்றனள் நங்கையும், நொய்தின் ஐயன் வில்
ஏற்றுமேல், இடர் கடல் ஏற்றும்" என்றனன். - 1.12.1
751 - சனகன் பணியாளரை ஏவ அவர்கள் விற்சாலையை அணுகல்
என்றனன், ஏன்று தன் எதிர் நின்றாரை,' அக்
குன்று, உறழ் வரி சிலை கொணர்மின் ஈண்டு' என,
'நன்று' என வணங்கினர், நால்வர் ஓடினர்,
பொன் திணி கார்முகம் சாலை புக்கனர். - 1.12.2
752 - சிவதனுசைப் பலர் சுமந்து வருதல்
உறு வலி யானையை ஒத்த மேனியர்,
செறி மயிர்க் கல் எனத் திரண்ட தோளினர்,
அறுபதினாயிரர், அளவு இல் ஆற்றலர்,
தறி மடுத்து இடையிடை தண்டின் தாங்கினர். - 1.12.3
753 - சிவதனுசு சனகன் திருமுன் வந்து சேர்தல்
நெடு நிலம் மகள் முதுகு ஆற்ற நின்று உயர்
தடம் நிமிர் வடவரை தானும் நாண் உற,
இடம் இலை உலகு என வந்தது, எங்கணும்
கடல் புரை திரு நகர் இரைத்துக் காண ஏ. - 1.12.4
754 - மிதிலை மக்கள் கூற்று (754-758)
'சங்கொடு சக்கரம் தரித்த செங்கை அச்
சிங்க ஏறு அல்லனேல் இதனைத் தீண்டுவான்
எங்கு உளன் ஒருவன்? இன்று ஏற்றின் இ சிலை,
மங்கைதன் திரு மணம் வாழுமால்' என்பார். - 1.12.5
755 - 'கைதவம் தனு எனல், கனகக் குன்று' என்பார்;
'எய்தவன் யாவனோ ஏற்றிப் பண்டு?' என்பார்;
'செய்தது அத் திசைமுகன் தீண்டி அன்று, தன்
மொய் தவப் பெருமையின் முயற்சியால்' என்பார். - 1.12.6
756 - 'திண் நெடு மேருவைத் திரட்டிற்று ஒ? என்பார்;
'வண்ண வான் கடல் பண்டு கடைந்த மத்து' என்பார்;
'அண்ணல் வாள் அரவினுக்கு அரசன் ஓ?' என்பார்;
'விண் இடு நெடிய வில் வீழ்ந்தது ஓ?' என்பார். - 1.12.7
757 - 'என் இது கொணர்க என இயம்பினான்?' என்பார்;
'மன்னவர் உளர் கொல் ஓ மதி கெட்டார்?' என்பார்;
'முன்னை ஊழ் வினையினால் முடிக்கல் ஆம்' என்பார்;
'கன்னியும் இச்சிலை காணும் ஓ?' என்பார். - 1.12.8
758 - 'இ சிலை உதைத்த கோற்கு இலக்கம் யாது?' என்பார்;
'நச்சு இலை நங்கை மேல் நாட்டு வேந்து' என்பார்;
'நிச்சயம் எடுக்கும் கொல் நேமியான்?' என்பார்
'சிற்சிலர் விதிசெய்த தீமைதான்' என்பார். - 1.12.9
759 - மொய்த்தனர் இன்னணம் மொழிய, மன்னன் முன்
உய்த்தனர், நிலம் முதுகு உளுக்கிக் கீழ் உற
வைத்தனர்;'வாங்குநர் யாவர் ஓ?' எனாக்
கைத்தலம் விதிர்த்தனர், கண்ட வேந்தரே. - 1.12.10
760 - போதகம் அனையவன் பொலிவு நோக்கி, அவ்
வேதனை தருகின்ற வில்லை நோக்கித், தன்
மாதினை நோக்குவான் மனத்தை நோக்கிய,
கோதமன் காதலன், கூறல் மேயினான். - 1.12.11
761 - 'இமையம் வில் வாங்கிய ஈசன், பங்கு உறை
உமையினை இகழ்ந்தனன் என்ன, ஓங்கிய
கமை அறு சினத்தன், இக் கார்முகம் கொளாச்,
சமையுறு தக்கனார் வேள்வி சார ஏ. - 1.12.12
762 - 'உக்கன பல்லொடு கரங்கள், ஓடினர்,
புக்கனர் வானவர் புகாத சூழல்கள்.
தக்கன் நல் வேள்வியில் தழலும் ஆறின,
முக்கண் எண் தோளவன் முனிவும் ஆறினான்.' - 1.12.13
763 - 'தாள் உடை வரி சிலை, சம்பு, உம்பர்தம்
நாள் உடைமையின், அவர் நடுக்கம் நோக்கி, இக்
கோள் உடை விடை அனான் குலத்துள் தோன்றிய
வாள் உடை உழவன் ஓர் மன்னன்பால் வைத்தான்.' - 1.12.14
764 - சானகியின் வரலாறு
'கார்முக வலியை யான் கழறல் வேண்டும் ஓ?
வார் சடை அரன் நிகர் வரத! நீ அலால்
யார் உளர் அறிபவர்? இவற்குத் தோன்றிய
தேர்முக அல்குலாள் செவ்வி கேள்!' எனா. - 1.12.15
765 - 'இரும்பு அனைய கரு நெடும் கோட்டு
இணை ஏற்றின் பணை ஏற்ற
பெரும் பியலில், பளிக்கு நுகம்
பிணைத்து,அதனோடு அணைத்து ஈர்க்கும்
வரம்பு இல் மணிப் பொன் கலப்பை
வயிரத்திண் கொழு மடுத்திட்டு,
உரம் பொரு இல் நிலம், வேள்விக்கு,
அலகு இல் பல சால்,உழுதேம்.' - 1.12.16
766 - 'உழுகின்ற கொழும் முகத்தின்,
உதிக்கின்ற கதிரின் ஒளி
பொழிகின்ற புவி மடந்தை
உரு வெளிப்பட்டு எனப், புணரி
எழுகின்ற தெள் அமுதோடு
எழுந்தவளும் இழிந்து ஒதுங்கித்
தொழுகின்ற நல் நலத்துப்
பெண் அரசி தோன்றினாள்.' - 1.12.17
767 - 'குணங்களை என் கூறுவது?
கொம்பினைச் சேர்ந்து அவை உய்யப்
பிணங்குவன; அழகு இவளைத்
தவம் செய்து பெற்றது காண்!
கணம் குழையாள் எழுந்ததன்பின்,
கதிர் வானில் கங்கை எனும்
அணங்கு இழியப் பொலிவு இழந்த
ஆறு ஒத்தார் வேறு உற்றார்.' - 1.12.18
768 - 'சித்திரம் இங்கு இது ஒப்பது
எங்கு உண்டு? செய்வினை ஆல்
வித்தகமும் விதிவசமும்
வேறு வேறு ஏ புறம் கிடப்ப,
அத் திருவை அமரர் குலம்
ஆதரித்தால் என, அறிஞ!
இத் திருவை நில வேந்தர்
எல்லாரும் காதலித்தார்.' - 1.12.19
769 - "கலித் தானைக் கடலோடும்
கைத் தானக் களிற்று அரசர்,
ஒலித்து ஆழி என வந்து
மணம் மொழிந்தார்க்கு,' எதிர் உடுத்த
புலித் தானைக் களிற்று உரிவைப்
போர்வையான் போர் வில்லை
வலித்தானே மங்கை திரு
மணத்தான்' என்று, யாம் வலித்தேம்." - 1.12.20
770 - 'வல் வில்லுக்கு ஆற்றார்கள்,
மாரன் வேள் வளை கரும்பின்
மெல் வில்லுக்கு ஆற்றாராய்த்,
தாம் எம்மை விளிகுற்றார்,
கல் வில்லோடு உடன் வந்த
கணம் குழையைக் காதலித்துச்,
சொல் வில்லால் உலகு அளிப்பாய்!
போர் செய்யத் தொடங்கினார்.' - 1.12.21
771 - 'இம் மன்னன் பெரும் சேனை,
ஈவுதனை மேல் கொண்ட
செம்மன்னர் புகழ் வேட்ட
பொருளே போல் தேய்ந்தது ஆல்,
பொம் என்ன வண்டு அலம்பும்
புரிகுழலைக் காதலித்த
அம் மன்னர் சேனை, தமது
ஆசை போல், ஆயிற்று, ஆல்.' - 1.12.22
772 - 'மல் காக்கும், மணிப் புயத்து
மன்னன் இவன், மழ விடை யோன்
வில் காக்கும் வாள் அமருள்
மெலிகின்றான் என இரங்கி,
எல் காக்கும் முடி விண்ணோர்
படை ஈந்தார் என, வேந்தர்
அல் காக்கை கூகையைக் கண்டு
அஞ்சின ஆம் என, அகன்றார்.' - 1.12.23
773 - 'அன்று முதல் இன்று அளவும்
ஆரும் இந்தச் சிலை அருகு
சென்றும் இலர் ; போய் ஒளித்த
தேர் வேந்தர் திரிந்தும் இலர்;
என்றும் இனி மணம் இல்லை
என்று இருந்தேம்; இவன் ஏற்றின்
நன்று, மலர்க் குழல் சீதை
நலம் பழுது ஆகாது,' என்றான். - 1.12.24
774 - 'நினைந்து முனி பகர்ந்த எலாம்
நெறி உன்னி, அறிவனும் தன்
புனைந்த சடை முடி துளக்கிப்,
போர் ஏற்றின் முகம் பார்த்தான்;
வனைந்து அனைய திரு மேனி
வள்ளலும், அம் மாதவத்தோன்
நினைந்த எலாம் நினைந்து, அந்த
நெடும் சிலையை நோக்கினான். - 1.12.25
775 - இராமன் எழுதல்
பொழிந்த நெய் ஆகுதி வாய் வழி பொங்கி,
எழுந்த கொழும் கனல் என்ன எழுந்தான்;
'அழிந்தது வில்' என விண்ணவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார். - 1.12.26
776 - காமன் மங்கையர்மேல் கணைதொடுத்தல்
தூய தவங்கள் தொடங்கிய தொல்லோன்
ஏயவன், வல் வில் இறுப்பதன் முன்னம்,
சேயிழை மங்கையர் சிந்தை தொறு எய்யா,
ஆயிரம் வில்லை அனங்கன் இறுத்தான். - 1.12.27
777 - மாதர்கள் கூற்று (777-780)
'காணும் நெடும் சிலை கால் வலிது!' என்பார்;
'நாண் உடை நங்கை நலம் கிளர் செம் கேழ்
பாணி இவன் படர் செம் கை படாதேல்,
வாள் நுதல் மங்கையும் வாழ்வு இலள்!' என்பார். - 1.12.28
778 - கரங்கள் குவித்து, இரு கண்கள் பனிப்ப,
'இரும் களிறு இச் சிலை ஏற்றிலன் ஆயின்
நரந்தம் நறைக் குழல் நங்கையும் நாமும்
முருங்கு எரியில் புக மூழ்குதும்!' என்பார். - 1.12.29
779 - "வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால்,
கொள்" என முன்பு கொடுப்பதை அல்லால்,
வெள்ளம் அணைத்தவன் வில்லை எடுத்து, இப்
பிள்ளை முன் இட்டது பேதைமை!' என்பார். - 1.12.30
780 - 'ஞான முனிக்கு ஒரு நாண் இலை!' என்பார்;
'கோன் இவனில் கொடியார் இலை!' என்பார்;
'மானவன் இ சிலை கால் வளையான் ஏல்,
பீன தனத்தவள் பேறு இலள்!' என்பார். - 1.12.31
781 - இராமன் வில்நோக்கி நடத்தல்
தோகையர் இன்னன சொல்லிட, நல்லோர்
ஓகை விளம்பிட, உம்பர் உவப்ப,
மாக மடங்கலும் மால் விடையும் பொன்
நாகமும் நாகமும் நாண, நடந்தான். - 1.12.32
782 - இராமன் வில்லை எடுத்தல்
ஆடகம் மா மலை அன்னது தன்னைத்,
'தேட அரு மா மணி சீதை எனும் பொன்
சூடக வால் வளை சூட்டிட நீட்டும்
ஏடு அவிழ் மாலை இது' என்ன எடுத்தான். - 1.12.33
783 - வில் ஒடிதல்
தடுத்து இமையாமல் இருந்தவர், தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்,
கடுப்பினில் யாரும் அறிந்திலர், கையால்
எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார். - 1.12.34
784 - வில் முறிந்ததால் எழுந்த ஒலி
'ஆர் இடைப் புகுதும் நாம்?' என்று
அமரர்கள்,'கமலத்தோன்தன்
பேர் உடை அண்டம் கோளம்
பிளந்தது' என்று, ஏங்கி நைந்தார்;
பார் இடை உற்ற தன்மை
பகர்வது என்? பாரைத் தாங்கி
வேர் எனக் கிடந்த நாகம்
இடி என வெருவிற்று அன்று ஏ! - 1.12.35
785 - தேவர்களின் மகிழ்ச்சி
பூமழை சொரிந்தார் விண்ணோர்;
பொன் மழை பொழிந்த மேகம்;
பாமமா கடல்கள் எல்லாம்
பல் மணி தூவி ஆர்த்த;
கோ முனி கணங்கள் எல்லாம்
கூறின ஆசி;' கொற்ற
நாமம் வேல் சனகன் இன்று என்
நல் வினை பயந்தது என்றான். - 1.12.36
786 - நகர மாந்தரின் மகிழ்ச்சி (786-790)
'மாலையும் இழையும் சாந்தும்
சுண்ணமும் வாச நெய்யும்
வேலை வெண் முத்தும் பொன்னும்
காசும் நுண் துகிலும் வீசிப்
பால் வளை அமிர்து அளாய
பல் இயம் துவைப்ப, முந்நீர்
ஓல் கிளர்ந்து உவா உற்று என்ன,
ஒலி நகர் கிளர்ந்தது அன்று ஏ! - 1.12.37
787 - நல் இயல் மகர வீணைத் தேன் உக, நகையும் தோடும்
வில் இட, வாளும் வீச, வேல் கிடந்து அனைய நாட்டம் அத்து,
எல் இயல் மதியம் அன்ன முகத்தியர், எழிலி தோன்றச்
சொல்லிய பருவம் நோக்கும் தோகையின், ஆடினார் ஏ. - 1.12.38
788 - உண் நறவு அருந்தினாரின் சிவந்து ஒளிர் கரும் கண் மாதர்,
புண் உறு புலவி நீங்கக் கொழுநரைப் புல்லிக் கொண்டார்;
வெண்ணிற மேகம் மேல் மேல் விரி கடல் பருகுமா போல்,
மண் நிறை வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார். - 1.12.39
789 - வயிரியர் மதுர கீதம், மங்கையர் அமுத கீதம்,
செயிரியர் மகர யாழின் தேம் பிழி தெய்வ கீதம்,
பயிர் கிளை வேயின் கீதம், என்று இவை பருகி, விண்ணோர்
உயிர் உடை உடம்பும் எல்லாம் ஓவியம் ஒப்ப நின்றார். - 1.12.40
790 - ஐயன் வில் இறுத்த ஆற்றல் காணிய, அமரர் நாட்டுத்
தையலார் இழிந்து பாரின் மகளிரைத் தழுவிக் கொண்டார்;
செய்கையின் வடிவின் ஆடல் பாடலில் தெளிதல் தேற்றார்;
மை அரி நெடுங்கண் நோக்கம் இமைத்தலும், மயங்கி நின்றார். - 1.12.41
791 - நகரமாந்தர்கூற்று (791-792)
'தயரதன் புதல்வன்' என்பார்;
'தாமரைக் கண்ணன்' என்பார்;
'புயல் இவன் மேனி' என்பார்;
'பூவையும் பொருவும்' என்பார்;
'மயல் உடைத்து உலகம்' என்பார்;
'மானுடன் அல்லன்' என்பார்;
'கயல் பொரு கடலுள் வைகும்
கடவுளே காணும்!' என்பார். - 1.12.42
792 - 'நம்பியைக் காண நங்கைக்கு
ஆயிரம் நயனம் வேண்டும்,
கொம்பினைக் காணும் தோறும்
குரிசிற்கும் அன்னதே ஆல்,
தம்பியைக் காண்மின்!' என்பார்;
'தவம் உடைத்து உலகம்' என்பார்;
'இம்பர் இந் நகரில் தந்த
முனிவனை இறைஞ்சும்!' என்பார். - 1.12.43
793 - சீதையின் நிலை (793-794)
இற்று இவண் இன்னது ஆக, மதியொடும் எல்லி நீங்கப்
பெற்று, உயிர் பின்னும் காணும் ஆசையால் சிறிது பெற்ற,
சிறு இடைப் பெரிய கொங்கைச் சேய் அரிக் கரிய வாள் கண்
பொன் தொடி மடந்தைக்கு, அப்பால் உற்றது புகலல் உற்றாம். - 1.12.44
794 - ஊசல் ஆடு உயிரினோடும் உருகு பூம் பள்ளி நீங்கிப்,
பாசுமை இழை மகளிர் சூழப் போய், ஒரு பளிக்கு மாடக்
காசு இல் தாமரையின் பொய்கைச் சந்திரகாந்தம் ஈன்ற
சீத நீர் தெளித்த மென் பூஞ் சேக்கையை, அரிதின் சேர்ந்தாள். - 1.12.45
795 - சீதையின் ஆற்றாமைக் கூற்றுக்கள். (795-803)
"பெண் இவண் உற்றது என்னும் பெருமையால், அருமை ஆன
வண்ணமும் இலைகளாலே காட்டலால், வாட்டம் தீர்ந்தேன்
தண் நறுங் கமலங்காள்! என் தளிர் நிறம் உண்ட கண்ணின்
உள் நிறம் காட்டினீர் என் உயிர்தர உலோவின் நீரே!" - 1.12.46
796 - "நாண் உலாவு மேருவோடு நாண் உலாவு பாணியும்,
தூண் உலாவு தோளும், வாளி ஊடு உலாவு தூணியும்,
வாள் நிலாவின் நூல் உலாவும் மாலை மார்பும், மீளவும்
காணல் ஆகும் ஆகின், ஆவி காணல் ஆகுமே கொல் ஆம்!" - 1.12.47
797 - "விண் தலம் கலந்து இலங்கு
திங்களோடு மீது சூழ்
வண்டு அலம்பு அலங்கல் தங்கு
பங்கியோடும் வார்சிலைக்
கொண்டல் ஒன்று இரண்டு கண்ணின்
மொண்டுகொண்டு என் ஆவியை
உண்டது உண்டு, என் நெஞ்சின் இன்றும்
உண்டு,அதுஎன்றும்உண்டு,அரோ!” - 1.12.48
798 - "பஞ்சு அரங்கு தீயின், ஆவி பற்ற நீடு கொற்ற வில்
வெம் சரங்கள், நெஞ்சு அரங்க வெய்ய காமன் எய்யவே,
சஞ்சலம் கலந்த போது, தையலாரை உய்ய வந்து,
'அஞ்சல்! அஞ்சல்!' என்கிலாத ஆண்மை, என்ன ஆண்மை ஏ?" - 1.12.49
799 - "இளைக்கலாத கொங்கைகாள்! எழுந்து விம்மி என் செய்தீர்?
முளைக் கலா மதிக் கொழுந்து போலும் வாள் முகத்தினான்,
வளைக்கலாத வில் கை யாளி, வள்ளல், மார்பின் உள் உறத்
திளைக்கல் ஆகும் ஆகில், ஆன செய் தவங்கள் செய்ம்மினே!" - 1.12.50
800 - "எங்கு நின்று எழுந்தது இந்த
இந்து வந்து? என் நெஞ்சு உலாய்
அங்கி என்று அனங்கன் எய்த
அம்பின் வந்த சிந்தை நோய்
பொங்குகின்ற கொங்கைமேல்
விடம் பொழிந்தது என்னினும்
கங்குல்வந்த திங்கள் அன்று,
அகம் களங்கம் இல்லையே!" - 1.12.51
801 - "அடர்ந்து வந்து அனங்கன் நெஞ்சு
அழன்று சிந்தும் அம்பு எனும்
விடம் குடைந்த மெய்யின் நின்று
வெந்திடாது எழுந்து, வெம்
கடம் துதைந்த காரியானை
அன்ன காளை தாள் அடைந்து
உடன் தொடர்ந்து போன ஆவி,
வந்த ஆறு என்? உள்ளம் ஏ!" - 1.12.52
802 - "விண்ணுளே எழுந்த மேகம், மார்பின் நூலின் மின்னொடு இம்
மண்ணுளே இழிந்தது என்ன, வந்து போன மைந்தனார்,
எண் உள் ஏ இருந்தபோதும் யாவர் என்று தேர்கிலேன்,
கண் உள் ஏ இருந்தபோதும் என் கொல் காண்கிலாத ஏ?" - 1.12.53
803 - "பெய் கடல் பிறந்து அயல் பிறக்க ஒணா மருந்து பெற்று,
ஐய பொன் கலத்தொடு அங்கை விட்டு இருந்த ஆதர் போல்,
மொய் கிடக்கும் அண்ணல் தோள் முயங்கிடாது, முன்னமே
கை கடக்க விட்டு இருந்து, கட்டு உரைப்பது என் கொல் ஓ?" - 1.12.54
804 - என்று கொண்டு, உள் நைந்து நைந்து,
இரங்கி விம்மி விம்மியே,
பொன் திணிந்த கொங்கை மங்கை
இடரின் மூழ்கு போழ்தின்வாய்,
குன்றம் அன்ன சிலை முறிந்த
கொள்கை கண்டு, குளிர் மனத்து
ஒன்றும் உண் கண் மதி முகத்து
ஒருத்தி செய்தது, உரை செய்வாம். - 1.12.55
805 - தோழி நீலமாலை வருதல்
வடங்களும் குழைகளும் வான வில் இடத்,
தொடர்ந்து பூங் குழல்களும் துகிலும் சோர்தர,
நுடங்கிய மின் என நொய்தின் எய்தினாள்,
நெடும் தடம் கிடந்த கண் நீலமாலையே. - 1.12.56
806 - சீதை தோழியை வினாதல்
வந்து அடி வணங்கிலள், வழங்கும் ஓதையள்,
அந்தம் இல் உவகையள், ஆடிப் பாடினாள்;
'சிந்தையுள் மகிழ்ச்சியும் புகுந்த செய்கையும்
சுந்தரி! சொல்' எனத், தொழுது சொல்லுவாள். - 1.12.57
807 - வில் முறிந்ததை நீலமாலை கூறுதல் (807-810)
"கயரத துரக மாக் கடலன், கல்வியன்,
தயரதன் எனும் பெயர்த் தனிச் செல் நேமியான்,
புயல் பொழி தட கையான் புதல்வன், பூ கணை
மயல் விளை மதனற்கும் வடிவு மேன்மையான்." - 1.12.58
808 - "மரா மரம் இவை என வலிய தோளினான்,
அரா அணை அமலன் என்று அயிர்க்கும் ஆற்றலான்,
இராமன் என்பது பெயர், இளைய கோவொடும்
பரா வரு முனியொடும் பதி வந்து எய்தினான்." - 1.12.59
809 - "பூண் இயல் மொய்ம்பினன்,' புனிதன் எய்தவில்
காணிய வந்தனன்' என்னக், காவலன்
ஆணையின் அடைந்த வில் அதனை, ஆண் தகை
நாண் இனிது ஏற்றினான், நடுங்கிற்று உம்பர் ஏ." - 1.12.60
810 - "மாத்திரை அளவில் தாள் மடுத்து, முன் பயில்
சூத்திரம் இது எனத் தோளின் வாங்கினான்;
ஏத்தினர் இமையவர், இழிந்த பூ மழை,
வேத்து அவை நடுக்கு உற முறிந்து வீழ்ந்தது ஏ!" - 1.12.61
811 - சீதை ஐயம் நீங்குதல்
கோமுனி உடன் வரு கொண்டல் என்ற பின்,
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையால்,
'ஆம் அவனே கொல்!' என்று ஐயம் நீங்கினாள்,
வாம மேகலை இற வளர்ந்தது அல்குல் ஏ. - 1.12.62
812 - சீதையின் உறுதிப்பாடு
இல்லையே நுசுப்பு என்பார் உண்டு உண்டு என்னவும்,
மெல் இயல் முலைகளும் விம்ம விம்முவாள்,
'சொல்லிய குறியின், அத் தோன்றலே அவன் !
அல்லனேல், இறப்பன்!' என்று, அகத்துள் உன்னினாள். - 1.12.63
813 - சனகன் கோசிகனை நோக்கிக் கூறத்தொடங்குதல்
ஆசை உற்று அயர்பவள் அன்னள் ஆயினள்,
பாசு அடைக் கமலத்தோன் படைத்த வில் இறும்
ஓசையின் பெரியது ஓர் உவகை எய்தி, அக்
கோசிகற்கு ஒரு மொழி சனகன் கூறுவான். - 1.12.64
814 - சனகன் கூறிய மொழி
'உரைசெய் எம்பெரும! உன் புதல்வன் வேள்விதான்
விரைவின் இன்று ஒரு பகல் முடித்தல் வேட்கை ஓ?
முரசு எறிந்து, அதிர் கழல் முழங்கு தானை அவ்
அரசையும் இவ் வழி அழைத்தல், வேட்கை ஓ?' - 1.12.65
815 - மல் வலான் அவ் உறை பகர, மாதவன்
'ஒல்லையில் அவனும் வந்து உறுதல் நன்று' என
எல்லை இல் உவகையான் 'இயைந்த ஆறு எலாம்
சொல்லுக' என்று, ஓலையும் தூதும் போக்கினான். - 1.12.66
1.13. எழுச்சிப் படலம் (816- )
816 - சனகன் தூதர்கள் தசரதன் அரண்மனையை அடைதல்.
கடுகிய தூதரும், காலில் காலின் சென்று,
இடி குரல் முரசு அதிர் அயோத்தி எய்தினார்,
அடி இணை தொழ இடம் இன்றி மன்னர்தம்
முடியொடு முடி பொரு வாயில் முன்னினார். - 1.13.1
817 - தூதர்கள் தசரதனை வணங்குதல்
முகந்தனர் திரு அருள், முறையின் எய்தினார்,
திகழ்ந்து ஒளிர் கழல் இணை தொழுது, செல்வனைப்
புகழ்ந்தனர்,' அரச! நின் புதல்வர் போய பின்
நிகழ்ந்ததை இது' என நெடிது கூறினார். - 1.13.2
818 - தூதர் ஓலையைக் கொடுத்தல்
கூறிய தூதரும், கொணர்ந்த ஓலையை,
'ஈறில் வண் புகழினாய்! இது அது' என்றனர்;
வேறு ஒரு புல மகன் விரும்பி வாங்கினான்;
மாறு அதிர் கழலினான்,'வாசி!' என்றனன். - 1.13.3
819 - இராமன் வீரங்கேட்ட தயரதன் மகிழ்ச்சி
இலை முகப் படத்து, அவர் எழுதிக் காட்டிய
தலை மகன் சிலைத் தொழில் செவியில் சார்தலும்,
நிலை முக வலயங்கள் நிமிர்ந்து நீங்கிட,
மலை என வளர்ந்தன வயிரத் தோள்கள் ஏ! - 1.13.4
820 - தசரதன் வியத்தல்
வெற்றி வேல் மன்னவன்' தக்கன் வேள்வியில்
கற்றை வார் சடை முடிக் கணிச்சி வானவன்
முற்ற ஏழ் உலகையும் வென்ற மூரி வில்
இற்ற பேர் ஒலி கொல் அன்று இடித்தது இங்கு? என்றான். - 1.13.5
821 - தூதர்க்கு ஆடையும் அணியும் அளித்தல்
என்று உரைத்து எதிர் எதிர், இடைவிடாது,'நேர்
துன்றிய கனை கழல் தூதர் கொள்க' எனப்
பொன் திணி கலன்களும் தூசும் போக்கினான்,
குன்று என உயரிய குவவுத் தோளினான். - 1.13.6
822 - மணமுரசு அறைகவென்றல்
'வானவன் குலத்து எமர் வரத்தினால் வரும்
வேனில் வேள் இருந்த, அம் மிதிலை நோக்கி நம்
சேனையும் அரசரும் செல்க முந்து எனா
ஆனை மேல் மண முரசு அறைக!' என்று ஏவினான். - 1.13.7
823 - வள்ளுவன் பறையறைதல்
வாம் பரி, விரி திரைக் கடலை வள்ளுவன்
தேம் பொழி துழாய் முடிச் செங்கண் மாலவன்
ஆம் பரிசு உலகு எலாம் அளந்து கொண்ட நாள்
சாம்புவன் திரிந்து என திரிந்து சாற்றினான். - 1.13.8
824 - முரசொலி கேட்டோர் மகிழ்தல்
சாற்றிய முரசு ஒலி செவியில் சாரும் முன்,
கோல் தொடி மகளிரும், கோல மைந்தரும்,
வேல் தரு குமரரும், வென்றி வேந்தரும்,
காற்று எறி கடல் எனக் களிப்பின் ஓங்கினார். - 1.13.9
825 - சேனை செல்லுதல்
விடை பொரு நடையினான் சேனை வெள்ளம், ஓர்
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய,
கடையுக முடிவினில் எவையும் கால் படப்
புடை பெயர் கடல் என எழுந்து போயது ஏ. - 1.13.10
826 - தேரும், யானையும் விளங்குதல்
சில் இடம் உலகு எனச் செறிந்த தேர்கள் தாம்,
புல்லிடு சுடர் எனப் பொலிந்த வேந்தர் ஆல்;
எல்லிடு கதிர் மணி எறிக்கும் ஓடை யால்,
வில்லிடும் முகில் எனப் பொலிந்த வேழம் ஏ. - 1.13.11
827 - குடைகளும்-கொடிகளும்
கால் விரிந்து எழு குடை, கணக்கு இல் ஓதிமம்
பால் விரிந்தது எனப், பறப்ப போன்றன ;
மேல் விரிந்து எழு கொடிப் படலை, விண் எலாம்
தோல் உரிந்து உகுவன போன்று தோன்றும் ஆல். - 1.13.12
828 - வெண் கொடிகள் வெண் மேகம் போலும் எனல்.
நுடங்கிய துகில் கொடி, நூழைக் கைம் மலைக்
கடம் கலுழ் சேனையைக் கடல் இது ஆம் என
இடம்பட எங்கணும் எழுந்த வெண் முகில்
தடம் புனல் பருகிடத் தாழ்வ போன்ற ஏ. - 1.13.13
829 - சேனையில் உள்ளவர் அணிந்த ஆபரணங்கள்
முதலியவற்றின் செயல்.
இழையிடை இள வெயில் எறிக்கும்; அவ் வெயில்
தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை
மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை
குழைவுற முழங்கிடும் குழாம் கொள் பேரியே. - 1.13.14
830 - குதிரைமீதும் யானைமீதும் மகளிர் ஊர்தல்
மன் அணிப் புரவிகள் மகளிர் ஊர்வன
அன்னம் உந்திய திரை ஆறு போன்றன;
பொன்னணிப் புணர் முலைப் புரி மென் கூந்தலார்
மின் என மடப் பிடி மேகம் போன்றவே. - 1.13.15
831 - சேனை செல்லும் வழி
இணை அடுத்து இடையிடை நெருக்க ஏழையர்
துணை முலைக் குங்குமச் சுவடும் ஆடவர்
மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி, மெல்
அணை எனப் பொலிந்தது அக் கடல்செல் ஆறு, அரோ! - 1.13.16
832 - மகளிர் கொங்கைகள் அணிபெற்று விளங்குதல்
முத்தினால் முழு நிலவு எறிக்கும்; மொய்ம் மணிப்
பத்தியால் இள வெயில் பரப்பும்; பாகினும்
தித்தியாநின்ற சொல் சிவந்த வாய்ச்சியர்
உத்தராசங்கம் இட்டு ஒளிக்கும் கூற்றம் ஏ. - 1.13.17
833 - மகளிரைத்தழுவி மைந்தர் செல்லுதல்
வில்லினர், வாளினர், வெறித்த குஞ்சியர்,
கல்லினைப் பழித்து உயர் கனகத் தோளினர்,
வல்லியின் மருங்கினர் மருங்கு, மாப் பிடி
புல்லிய களிறு என மைந்தர் போயினார். - 1.13.18
834 - மகளிர் சிவிகை செல்லுதல்.
மன்றல் அம் புது மலர் மழையின் சூழ்ந்து எனத்
துன்று இருங் கூந்தலார் முகங்கள் தோன்றல் ஆல்,
ஒன்று அலா முழு மதி ஊரும் மானம்போல்,
சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே. - 1.13.19
835 - யானைப்படையின் மிகுதி
மொய் திரைக் கடல் என முழங்கி, மூக்கு உடைக்
கைகளில் திசை நிலைக் களிற்றை ஆய்வன,
மையல் உற்று இழி மத மழை அறாமை ஆல்,
தொய்யலைக் கடந்தில, சூழி யானையே. - 1.13.20
836 - குதிரைகளின் செலவு.
சூர் உடை நிலையெனத் தோய்ந்தும் தோய்கிலா
வார் உடை வன முலை மகளிர் சிந்தைபோல்
தாரொடும் சதியொடும் தாவும் ஆயினும்
பாரிடை மிதிக்கில, பரியின் பந்தியே. - 1.13.21
837 - ஊடிய மகளிர் செல்லுதல்.
ஊடிய மனத்தினர், உறாத நோக்கினர்,
நீடிய உயிர்ப்பினர், நெறித்த நெற்றியர்,
தோடு அவிழ் கோதையும் துறந்த கூந்தலர்,
ஆடவர் உயிர் என அருகு போயினார். - 1.13.22
838 - யானைகளின் செலவு
மாறு எனத் தடங்களைப் பொருது, மாமரம்
ஊறு பட்டிட இடை ஒடித்துச், சாய்த்து, உராய்,
ஆறு எனச் சென்றன, அருவி பாய் கவுள்,
'தாறு' எனக் கனல் உமிழ் தறுகண் யானையே. - 1.13.23
839 - முன்சேனை மிதிலையை அடைதல்
உழுந்து இட இடம் இலை; உலகம் எங்கணும்
அழுந்திய உயிர்க்கு எலாம் அருள் கொம்பு ஆயினான்
எழுந்திலன்; எழுந்து இடைப் படரும் சேனையின்
கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்று ஏ. - 1.13.24
840 - வண்டிகள் செல்லுதல்
கண்டவர் மனங்கள் கை கோப்பக் காதலின்
வண்டு இமிர் கோதையர் வதன ராசி ஆல்,
பண்டிகள் பண்டிகள், பரிசில் செல்வன,
புண்டரீகத் தடம் போவ போன்ற ஏ. - 1.13.25
841 - ஒருகாதலியின் கடைக் கண்ணோக்கச் சிறப்பு
பாண்டிலின் வைத்த ஓர் பாவை, தன்னொடும்
ஈண்டிய அன்பினன் ஏகுவான் இடைக்
காண்டலும், நோக்கிய கடைக்கண் அஞ்சனம்,
ஆண் தகைக்கு இனியது, ஓர் அமுதம் ஆயதே. - 1.13.26
842 - பிரிந்த காதலன் பேதுறுதல்
பிள்ளை மான் நோக்கியைப் பிரிந்து போகின்றான்,
அள்ளல் நீர் மருதம் வைப்பு அதனின், அன்னமாம்
புள்ளும் மென் தாமரைப் பூவும் நோக்கினான்,
உள்ளமும் தானும் நின்று ஊசல் ஆடுவான். - 1.13.27
843 - சேனை கங்கை யாற்றை ஒத்தது எனல்
அங்கண் ஞாலம் அத்து அரசு மிடைதலால்,
பொங்கு வெண் குடை சாமரை போர்த்தலால்,
கங்கை யாறு கடுத்தது, கார் எனச்
சங்கு பேரி முழங்கிய தானை ஏ. - 1.13.28
844 - சேனை போர்க்களத்தை ஒத்தது எனல்
அமிர்த அம் சொல் அணங்கு அணையார் உயிர்
கவரும் கூர்நுதிக் கண் எனும் காலவேல்
குமரர் நெஞ்சு குளிப்ப வழங்கலால்
சமர பூமியும் ஒத்தது தானையே. - 1.13.29
845 - சேனையின் செறிவு
தோள் மிடைந்தன, தூணம் மிடைந்து என;
வாள் மிடைந்தன, வான் மின் மிடைந்து எனத்;
தாள் மிடைந்தன, தம்மி மிடைந்து என;
ஆள் மிடைந்தன, ஆளி மிடைந்து என. - 1.13.30
846 - இளைஞர் செயல் கூறுவன (846-851)
வார் குலாம் முலை வைத்த கண் வாங்கிடப்
பேர்கிலாது பிறங்கு முகத்தினான்,
தேர்கிலான் நெறி, அந்தரில் சென்று, ஒரு
மூரி மா மதம் யானையை முட்டினான். - 1.13.31
847 - சுழிகொள் வாம்பரி துள்ள, ஓர் தோகையாள்
வழுவி வீழலுற்றாளை, ஓர் வள்ளல்தான்,
எழுவின் நீள் புயத்தால் எடுத்து ஏந்தினான்,
தழுவி நின்று ஒழியான், தரைதான் வையான். - 1.13.32
848 - துணைத்த தாமரை நோவத் தொடர்ந்து இடை
கணைக் கரும் கணினாள் ஐ, ஓர் காளைதான்,
'பணைத்த வெம் முலைப் பாய் மதம் யானையை
அணைக்க நம் கைக்கு அகலிடம் இல்' என்றான். - 1.13.33
849 - சுழியும் குஞ்சிமிசை சுரும்பு ஆர்த்திடப்,
பொழியும் மாமத யானையின் போகின்றான்,
'கழிய கூரிய!' என்று ஒரு காரிகை
விழியை நோக்கித் தன் வேலையும் நோக்கினான். - 1.13.34
850 - தரங்க வார் குழல் தாமரைச் சீறடிக்
கருங்கண் வாள் உடையாளை, ஓர் காளைதான்,
'நெருங்கு பூண் முலை நீள் வளை தோளினிர்!
மருங்குல் எங்கு மறந்தது நீர்?' என்றான். - 1.13.35
851 - கூற்றம் போலும் கொலை கண்ணின் ஆல் அன்றி
மாற்றம் பேசுகிலாளை, ஒர் வள்ளல்தான்,
'ஆற்று நீர் இடை அங்கைகளால் எடுத்து
ஏற்றுவார் உமை யாவர் கொல் ஓ?' என்றான். - 1.13.36
852 - ஒட்டகங்களின் செயல்
தள்ள அரும் பரம் தாங்கிய ஒட்டகம்
தெள்ளு தேம் குழை யாவையும், தின்கில,
உள்ளம் என்னத் தம்வாயும் உலர்ந்தன,
கள் உண் மாந்தரில் கைப்பன தேடியே. - 1.13.37
853 - பப்பரர் செல்லுதல்
அரத்த நோக்கினர், அல் திரள் மேனியர்,
பரித்த காவினர், பப்பரர் ஏகினார்,
திருத்து கூடத்தில் திண் கணையத்தொடும்
எருத்தின் ஏந்திய மால் களிறு என்னவே. - 1.13.38
854 - பெண்யானையின் மீதிருந்த பெண்கள் செயல்
பித்த யானை பிணங்கிப் பிடியில் கை
வைத்த; மேலிருந்து அஞ்சிய மங்கைமார்,
எய்த்து இடுக்கண் உற்றார், புதைத்தார் இரு
கைத் தலங்களில் கண் அடங்காமையே. - 1.13.39
855 - பிடியின்மேற் சிந்தரும் போதல்
வாம மேகலையார் இடை, வாலதி
பூமி தோய் பிடிச் சிந்தரும் போயினார்
காமர் தாமரை நாள்மலர்க் கானம் அத்து உள்
ஆமை மேல் வரும் தேரையின் ஆய், அரோ! - 1.13.40
856 - குதிரை ஒருபெண்ணைத் தூக்கிச் செல்லுதல்
'இம்பர் நாட்டின் தரம் அல்லள், ஈங்கு, இவள்
உம்பர் கோமகற்கு' என்கின்றது ஒக்கும், ஆல்,
கம்ப மா வரக், கால்கள் வளைத்து ஒரு
கொம்பு அனாள் ஐ கொண்டு ஓடும் குதிரையே. - 1.13.41
857 - மகளிர் மகிழ்ச்சியால் ஓடுதல்
சந்த வார்குழல் சோர்பவை தாங்கலார்,
சிந்தும் மேகலை சிந்தையும் செய்கலார்,
'எந்தை வில் இறுத்தான்!' எனும் இன் சொலை
மைந்தர் பேச, மனம் களித்து ஓடுவார். - 1.13.42
858 - அந்தணர் மிதிலைக்குச் செல்லுதல்
குடையர், குண்டிகை தூக்கினர், குந்திய
நடையர், நாசி புதைத்த கை நாற்றலர்,
கட களிற்றையும் காரிகையாரையும்
அடைய அஞ்சிய அந்தணர் முந்தினார். - 1.13.43
859 - உருவெளிப்பாடு கண்டு பெண்கள் கூறியது
நாறு பூ குழல் நங்கையர், கண்கள் நீர்
ஊற, நேர்வந்து உருவு வெளிப்பட,
'மாறு கொண்டனை; வந்தனை ஆகில், வந்து
ஏறு தேர்,' எனக் கைகள் இழிச்சுவார். - 1.13.44
860 - படைகளின் ஒலியால் உரை கேளாமை
குரைத்த தேரும், களிறும், குதிரையும்,
நிரைத்த வார் முரசும், நெளிந்து, எங்கணும்
இரைத்த பேர் ஒலியால், இடை யாவரும்
உரைத்து உணர்ந்திலர், ஊமரின் ஏகினார். - 1.13.45
861 - மகளிர் கூட்டம் செல்லுதல்
நுண் சிலம்பி வலந்து அன நுண் துகில்
கள் சிலம்பு கரும் குழலார் குழு,
உள் சிலம்பு சிலம்ப ஒதுங்கலால்,
புள் சிலம்பிடு பொய்கையும் போன்றது ஏ. - 1.13.46
862 - தெள் திரை பரவைத் திரு அன்னவர்
நுண் திரை புரை நோக்கிய நோக்கினைக்
கண்டு, இரைப்பன ஆடவர் கண்; களி
வண்டு இரைப்பன ஆனை மதங்கள் ஏ. - 1.13.47
863 - மகளிர் சிலம்பும், குதிரையும் ஒலித்தல்
உழை கலித்தன என்ன உயிர் துணை
நுழை கலிக்கரும் கண்ணியர் நூபுர
இழை கலித்தன; இன்னியமா எழு
மழை கலித்து என வாசி கலித்த ஏ. - 1.13.48
864 - மகளிர் கண்ணைப் பார்த்து
ஆடவர் கண்கள் களித்தன எனல்
மண் களிப்ப நடப்பவர் வாள் நுதல்
உண் களிக் கமலங்களின் உள் உறை
திண் களிச் சிறு தும்பி எனச், சிலர்
கண் களித்தன காமன் களிக்க ஏ. - 1.13.49
865 - சுண்ணமும் தூசியும் நிறைதல்
எண்ண மாத்திரமும் அரிதாம் இடை
வண்ண மாத் துவர் வாய்க் கனி வாய்ச்சியர்
திண்ணம் ஆத்து ஒளிர் செம் இள நீர் இழி
சுண்ணம் ஆர்த்தன; தூளியும் ஆர்த்தவே. - 1.13.50
866 - மகளிரும் ஆடவரும் ஆரவாரத்தோடு வழிச்சேறல்
சித்திரத் தடம் தேர் மைந்தர், மங்கையர்,
உய்த்து உரைப்ப, நினைப்ப, உலப்பிலர்,
இ திறத்தினர், எத்தனையோ பலர்,
மொய்த்து இரைத்து வழி கொண்டு முன்னின் ஆர். - 1.13.51
867 - தூளி எழுதல்
குசை உறு பரியும், தேரும், வீரரும், குழுமி, எங்கும்,
விசையொடு கடுகப் பொங்கி, வீங்கிய தூளி விம்மிப்
பசையுறு துளியின் தாரைப் பசுந் தொளை அடைத்த மேகம்;
திசை தொறும் நின்ற யானை மதம் தொளை செம்மிற்று அன்றே. - 1.13.52
868 - மதநீர் வழுக்கில் மகளிரை யழைத்துச் செல்லல்
கேடகம் தட கையாலே கிளர் ஒளி வாளும் பற்றிச்,
சூடகத் தளிர் கை மற்றைச் சுடர் மணி தடம் கை பற்றி,
ஆடகம் அத்து ஓடை யானை அழி மதத்து இழுக்கல் ஆற்றில்
பாடகக் காலினாரைப் பயப்பயக் கொண்டு போனார். - 1.13.53
869 - வழிநடையில் மகளிர் நீர்ப்பூக்களைப்
பறித்துத் தரவேண்டுதல்
செய்களில், மடுவில், நல்நீர்ச் சிறைகளில், நிறையப் பூத்த
நெய்தலும் குமுதப் பூவும் நெகிழ்ந்த செம் கமலம் போதும்,
கைகளும் முகமும் வாயும் கண்களும் காட்டக் கண்டு,
'கொய்து அவை தருதிர்' என்று, கொழுநரைத் தொழுகின்றார் உம். - 1.13.54
870 - மகளிர் யானையைக்கண்டு மருண்டார் எனல்
பந்தியம் புரவி நின்றும் பார் இடை இழிந்தோர், வாசக்
கொந்தள பாரம் சோரக், குலம் மணி கலன்கள் சிந்தச்,
சந்த நுண் துகில் உம் வீழத் தளிர்க் கையால் அணைத்துச்,'சார
வந்தது வேழம்!' என்ன, மயில் என இரியல் போவார். - 1.13.55
871 - இரவும் பகலும் ஒருசேர உளவாயின எனல்
குடையொடு களிறும், தொங்கல் குழாங்களும், கொடியின் காடும்,
இடை இடை மயங்கி எங்கும் வெளி கரந்து இருளைச் செய்யப்,
படைகளும் முடியும் பூணும் படர் வெயில் பரப்பிச் செல்ல,
இடை ஒரு கணம் அத்தின் உள்ளே இரவு உண்டு பகலும் உண்டு ஏ! - 1.13.56
872 - மகளிரைக் கண்டு ஆடவர் அகலுதல்
'முருக்கு இதழ் முத்தம் மூரல்
முறுவலார் முகங்கள் என்னும்
திரு கிளர் கமலம் போதில்
தீட்டின கிடந்த கூர்வாள்
நெருக்கு இடை அறுக்கும், நீங்கள்
நீங்குமின்! நீங்கும்!' என்று என்று,
அருக்கனில் ஒளிரும் மேனி
ஆடவர் அகலப் போவார். - 1.13.57
873 - நங்கையர் நடக்க மாட்டாது நிற்றல்
நீந்த அரு நெறியின் உற்ற
நெருக்கினால் சுருக்குண்டு, அற்றுக்,
காந்தின மணியும் முத்தும்
சிந்தின, கலாபம் சூழ்ந்த
பாந்தளின் அல்குலார்தம்
பரிபுரம் புலம்பப், பசுமை பொன்
பூம் தளிர் உறைப்ப, மாழ்கிப்,'
போக்கு அரிது' என்ன நிற்பார். - 1.13.58
874 - வண்டிக் காளைகள் வெருண்டோடுதல்
கொற்றம் நல் இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்பப், பண்டிப்
பெற்ற ஏறு, அன்னப் புள்ளில் பேதையர் வெருவி நீங்க,
முற்று உறு பரங்கள் எல்லாம் முறைமுறை பாசத்தோடும்
பற்று அற வீசி, ஏகி, யோகியில் பரிவு தீர்ந்த. - 1.13.59
875 - நீர்நிலையில் யானைகள் துளைதல்
கால்செறி வேகம் பாகர் கார்முக உண்டை பாரா,
வார் சிறை கொங்கை அன்ன கும்பமும் மருப்பும் காணப்,
பால்செறி கடலில் தோன்றும் பனை கை மால்யானை என்ன,
நீர் சிறை பற்றி ஏறா, நின்ற குன்று அனைய வேழம். - 1.13.60
876 - பாணர் விறலியருடன் செல்லுதல்
அறல் இயல் கூந்தல், கண்வாள், அமுது உகு குமுதச் செவ்வாய்
விறலியரோடு, நல் யாழ் செயிரியர், புரவி மேலார்,
நறை செவி பெய்வது என்ன நைவள அமுதப் பாடல்
முறைமுறை நணுகப் போனார், கின்னர மிதுனம் ஒப்பார். - 1.13.61
877 - களிற்றில் மொய்த்தவண்டுகள் பிடியொடும் தொடர்தல்
அருவிபெய் வரையில் பொங்கி, அங்குசம் நிமிர, எங்கும்
இரியலின், சனங்கள் சிந்தும், இளம் களிச் செம் கண் யானை
விரி சிறை தும்பி, வேறு ஓர் வீழ்மதந் தோய்ந்து, மாதர்
சுரிகுழல் படிய ஒற்றிப் பிடியொடும் தொடர்ந்து செல்வ. - 1.13.62
878 - தசரதனுடைய நேய மங்கையர் செல்லுதல்
நிறை மதி தோற்றம் கண்ட நீல் நெடும் கடலிற்று ஆகி,
அறைபறை துவைப்பத், தேரும், யானையும், ஆடல் மாவும்,
கறைகெழு வேல் கணாரும், மைந்தரும், கவினி ஒல்லை
நெறி இடை படர, வேந்தன் நேய மங்கையர்தாம் செல்வார். - 1.13.63
879 - கைகேசி செல்லுதல்
பொய்கை அம் கமலக் கானில், பொலிவது ஓர் அன்னம் என்னக்,
கைகயர் வேந்தன் பாவை, கணிகையர் ஈட்டம் பொங்கி
ஐயிரு நூறு சூழ்ந்த ஆய் மணி சிவிகை தன்மேல்,
தெய்வ மங்கையரும் நாணத், தேன் இசை முரலப் போனாள். - 1.13.64
880 - கஞ்சுக மாக்கள் கைகேயியைக் காத்துச் செல்லுதல்
காரணம் இன்றியேயும் கனல் எழ விழிக்கும் கண்ணார்,
வீர வேத்திரத்து ஆர், தாழ்ந்து விரிந்த கஞ் சுகம் அத்து மெய்யார்,
தாரணி புரவி மேலார், தலம் அத்து உளார், கதித்த சொல்லார்,
ஆரணங்கு அனைய மாதர் அடி முறை காத்துப் போனார். - 1.13.65
881 - சுமித்திரை செல்லுதல்
விரிமணித் தார்கள் பூண்ட வேசரி வெரிந் இல் தோன்றும்
அரி மலர் தடம் கண் நல்லார் ஆயிரத்து இரட்டி சூழக்,
குரு மணி சிவிகை தன்மேல், கொண்டலின் மின் இது என்ன,
இருவரைப் பயந்த நங்கை யாழ் இசை முரலப் போனாள். - 1.13.66
882 - சுமித்திரையைச் சூழ்ந்து மகளிர் செல்லுதல்
செம் கை இன் மஞ்ஞை அன்னம் சிறு கிளி பூவை பாவை
சங்கு உறை கழித்த அன்ன சாமரை முதல தாங்கி,
இங்கு அலது, எண்ணுங்கால், இவ் எழுதிரை வளாகம் தன்னில்
மங்கையர் இல்லை என்ன, மடந்தையர் மருங்கு போனார். - 1.13.67
883 - கௌசல்யை செல்லுதல்
வெள்ளெயிற்று இலவச் செம்மை வாய்
முகத்தை வெண் மதியம் என்று
கொள்ளையில் சுற்றும் மீன்கள்
குழுமிய அனைய ஊர்தி,
தெள் அரி பாண்டி பாணிச்
செயிரியர் இசை தேன் சிந்த,
வள்ளலைப் பயந்த நங்கை,
வானவர் வணங்கப், போனாள். - 1.13.68
884 - கூனுங் குறளும் சிந்தரும் செல்லுதல்
கூனொடு குறளும், சிந்தும், சிலதியர் குழாமும் கொண்ட
பால் நிறம் புரவி அன்னப் புள் எனப் பாரில் செல்லத்,
தேனொடு மிஞிறும் வண்டும் தும்பியும் தொடர்ந்து செல்லப்,
பூ நிறை கூந்தல் மாதர், புடைபிடி நடையில், போனார். - 1.13.69
885 - அறுபதினாயிரம் மனைவிமார்களும் செல்லுதல்
துப்பினின் மணியின் பொன்னின் சுடர் மரகதத்தின் முத்தின்
ஒப்பு அற அமைத்த பசுமை பூண் ஓவியம் புகழ ஏறி,
முப்பதிற்று இரட்டி கொண்ட ஆயிரம் முகிழ்மென் கொங்கைச்
செப்பு அரும் திருவின் நல்லார், தேர் மிசை சூழப் போனார். - 1.13.70
886 - வசிட்டன் செல்லுதல்
செவிவயின் அமிர்த கேள்வி தெவிட்டினார், தேவர் நாவின்
அவி கையின் அளிக்கும் நீரார், ஐயிரு கோடி சூழக்,
கவிகையின் நீழல், கற்பின் அருந்ததி கணவன், வெள்ளைச்
சிவிகையின், அன்னம் ஊரும் திசைமுகன் என்னச், சென்றான். - 1.13.71
887 - பரத சத்துருக்கனர் செல்லுதல்
பொரு களிறு இவுளி பொன்தேர் பொலம் கழல் குமரர், முந்நீர்
அருவரை சூழ்ந்தது என்ன, அருகுபின் முன்னும் செல்லத்,
திருவளர் மார்பர், தெய்வச் சிலையினர், தேரர், வீரர்,
இருவரும் முனிபின் போன இருவரும் என்னப் போனார். - 1.13.72
888 - தசரதன் புறப்படுதல்
நித்திய நியமம் முற்றி, நேமியான் பாதம் சென்னி
வைத்தபின், மறை வலோர்க்கு வரம்பு அறு மணியும் பொன்னும்
பத்தி ஆன் நிறையும் பாரும் பரிவுடன் நல்கிப் போனான்,
முத்து அணி வயிரப் பூணான், மங்கல முகுர்த்த நல் நாள். - 1.13.73
889 - அந்தணர் ஆசிகூற மாதர் பல்லாண்டிசைத்தல்
இரு பிறப்பாளர் எட்டு ஆயிரர் மணிக் கலசம் ஏந்தி,
அருகு மறை வருக்கம் ஓதி, அறுகுநீர் தெளித்து, வாழ்த்தி,
வரன் முறை வந்தார் ; கோடி மங்கல மழலைச் செம்மை வாய்
பரும் மணி கலாபத்தார், பல்லாண்டு இசை பரவப் போனான். - 1.13.74
890 - மண்டலாதிபர்கள் நெருங்கிச் செல்லுதல்
'கண்டிலன் என்னை' என்பார்;
'கண்டனன் என்னை' என்பார்;
'குண்டலம் வீழ்ந்தது' என்பார்;
'குறுக அரிது இனிச் சென்று' என்பார்;
'உண்டு கொல் எழுச்சி' என்பார்;
'ஒலித்தது சங்கம்' என்பார்;
மண்டல வேந்தர் வந்து
நெருங்கினர் மயங்கி, மாது ஓ! - 1.13.75
891 - தயரதன் தேரிற் செல்லுதல்
பொன்தொடி மகளிர் ஊரும்
பொலன்கொள் தார் புரவி வெள்ளம்
சுற்றுறு கமலம் பூத்த
தொடுகடல் திரையில் செல்லக்,
கொற்றம் வேள் மன்னர் செங்கைப்
பங்கயம் குழாங்கள் கூம்ப,
மற்று ஒரு கதிரோன் என்ன
மணிநெடும் தேரில் போனான். - 1.13.76
892 - புழுதியின் செயல்
ஆர்த்தது விசும்பை முட்டி; மீண்டு அகன் திசைகள் எல்லாம்
போர்த்தது; அங்கு ஒருவர் தம்மை ஒருவர் கண் புலம் கொளாமை
தீர்த்தது; செறிந்தது ஓடித்; திரை நெடும் கடலை எல்லாம்
தூர்த்தது, சகரரோடு பகைத்து எனத், தூளி வெள்ளம். - 1.13.77
893 - ஒலியும் ஒளியும் மிஞ்சுதல்
சங்கமும் பணையும் கொம்பும் தாளமும் காளத்தோடு
மங்கல பேரி செய்த பேரொலி மழையை ஓட்டத்,
தொங்கலும் குடையும் தோகைப் பிச்சமும் சுடரை ஓட்டத்
திங்கள், வெண் குடை கண்டு ஓடத், தேவரும் மருளச், சென்றான். - 1.13.78
894 - பலவகை ஓசை எழுதல்
மந்திர கீத ஓதை, வலம் புரி முழங்கும் ஓதை,
அந்தணர் ஆசி ஓதை, ஆர்த்து எழும் முரசின் ஓதை,
கந்து கொல் களிற்றின் ஓதை, கடிகையர் கவிதை ஓதை,
இந்திர திருவன் செல்ல எழுந்தன திசைகள் எல்லாம். - 1.13.79
895 - புழுதியால் விண்ணும் மண்ணுலகாயிற்று எனல்
நோக்கிய திசைகள் எல்லாம் தன்னையே நோக்கிச் செல்ல,
வீக்கிய கழல்கால் வேந்தர் விரிந்த கை மலர்கள் கூம்பத்,
தாக்கிய களிறும் தேரும் புரவியும் படைஞர் தாளும்
ஆக்கிய தூளி, விண்ணும் மண் உலகு ஆக்கப், போனான். - 1.13.80
896 - உடன் சென்ற சேனையின் மிகுதி
வீரரும் களிறும் தேரும் புரவியும் மிடைந்த சேனை
பேர்விடம் இல்லை, மற்றோர் உலகு இல்லை, பெயர்க்கல் ஆகா,
நீர் உடை ஆடை யாளும், நெளித்தனள் முதுகை என்றால்,
'பார்பொறை நீக்கினான்' என்று உரைத்தது எ பரிசு மன் ஓ? - 1.13.81
897 - தசரதன் சந்திர சயிலத்தின் சாரலில் தங்குதல்
இன்னணம் ஏகி மன்னன் யோசனை இரண்டு சென்றான்,
பொன்வரை போலும் இந்து சயிலத்தின் சாரல் புக்கான்;
வல் மதம் களிறும் மாதர் கொங்கையும் மாரன் அம்பும்
தென்வரைச் சாந்தும் சாந்தும் நாறும் சேனையும் இறுத்தது அன்று ஏ. - 1.13.82
1.14. வரைக்காட்சிப் படலம் (898 - 974)
கோவை ஆர் வட, கொழும் குவடு ஒடிதர, நிவந்த,
ஆவி வேட்டன, வரி சிலை அனங்கன் மேல் கொண்ட,
பூவை வாய்ச்சியர் முலை, சிலர் புயத்தொடும் பூட்ட,
தேவதாரத்தும் சந்தினும் பூட்டின சில மா. - 1.14.1
899 - மதக்களிற்றின் செயல்
நேர் ஒடுங்கலில் பகையினை நீதியால் வெல்லும்
சோர்வு இடம்பெறா உணர்வினன் சூழ்ச்சியே போலக்,
காரொடும் தொடர் கவட்டு எழில் மராமரக் குவட்டை
வேரொடும் கொடு கிரி என நடந்தது ஓர் வேழம். - 1.14.2
900 - மதவேழம் கண்ணனை நிகர்த்தல்
திரண்ட தாள் நெடுஞ் செறி பணை மருது இடை ஒடியப்
புரண்டு பின் வரும் உரலொடு போனவன் போல,
உருண்டு கால் தொடர் பிறகிடு தறியொடும் ஒருங்கே
இரண்டு மாமரம் இடை இற நடந்தது ஓர் யானை. - 1.14.3
901 - 1.14.4 ஒரு வேழம் மந்திரிக்கடங்கா மன்னனை நிகர்த்தல்
கதம் கொள் சீற்றத்தை ஆற்றுவான் இனியன கழறிப்
பதம் கொள் பாகனும் மந்திரி ஒத்தனன் ; பல நூல்
விதங்களால் அவன் மெல்லென மெல்லென விளம்பும்
இதங்கள் கொள்கிலா இறைவனை ஒத்தது ஓர் யானை. - 1.14.4
902 - ஓர் மதகளிற்றின் செயல்
மாறு காண்கிலதாய் நின்று, மழை என முழங்கும்,
தாறு பாய் கரி வன கரி தண்டத்தைத் தடவிப்,
பாறு பின் செலக் கால் எனச் செல்வது, பண்டு ஓர்
ஆறு போகிய ஆறு போம் ஆறு போன்றது ஏ. - 1.14.5
903 - ஏழிலைப்பாலைமரத்தை ஒரு யானை அழித்தல்
பாத்த யானையின் பதங்களில், படு மதம் நாறக்,
காத்த அங்குசம் நிமிர்ந்திடக், கால் பிடித்து ஓடிப்,
பூத்த ஏழ் இலை பாலையை பொடிப் பொடி யாகக்
காத்திரங்களால் தலத்தொடும் தேய்த்தது ஓர் களிறு. - 1.14.6
904 - மலை யூதத் தலைவனை ஒத்தல்
அலகு இல் யானைகள் அனேகமும், அவற்றிடை மிடைந்த
திலக வாள் நுதல் பிடிகளும், குருளையும், செறிந்த
உலவை நீள் வனத்து, ஊதமே ஒத்த ; அவ் ஊதத்
தலைவனே ஒத்துப் பொலிந்தது சந்திரசயிலம். - 1.14.7
905 - தேரின் வருணனை
தெருண்ட மேலவர் சிறியவர்ச் சேரினும் அவர்தம்
மருண்ட தன்மையை மாற்றுவர் எனும் இது வழக்கே!
உருண்ட வாய் தொறும் பொன் உருள் உரைத்து உரைத்து ஓடி,
இருண்ட கல்லையும் தம் நிறம் ஆக்கிய இரதம். - 1.14.8
906 - மகளிரின் சிவந்த வாய்கள்
கொவ்வை நோக்கிய வாய்களை இந்திரகோபம்
கவ்வி நோக்கின என்று கொல்! காட்டு இனம் மயில்கள்
நவ்வி நோக்கியர் நலம் கொள் மேகலை பொலம் சாயல்
செவ்வி நோக்கின, திரிவன போல்வன திரிந்த. - 1.14.9
907 - மகளிர் மரநிழலில் தங்குதல்
உய்க்கும் வாசிகள் இழிந்து, இள அன்னத்தின் ஒதுங்கி,
மெய்க் கலாபமும் குழைகளும் இழைகளும் விளங்கத்,
தொக்க மெல் மர நிழல்படத் துவன்றிய சூழல்
புக்க மங்கையர், பூத்த கொம்பு ஆம் எனப் பொலிந்தார். - 1.14.10
908 - மகளிர் பளிக்குப் பாறையில் உறங்குதல்
தளம் கொள் தாமரை எனத் தளிர் அடியினும் முகத்தும்
வளம் கொள் மாலைவண்டு அலமர, வழி வருந்தினர் ஆய்,
விளங்கு தம் உருப் பளிங்கு இடை வெளிப்பட, வேறு ஓர்
துளங்கு பாறையில், தோழியர் அயிர்த்திடத், துயின்றார். - 1.14.11
909 - மகளிர் குடில்களிற் புகுதல்
பிடிபுக்கு, ஆ இடை, மின்னொடும் பிறங்கிய மேகம்
படி புக்கால் எனப் படிதரப், பரிபுரம் புலம்பத்,
துடி புக்கு ஆ இடைத் திருமகள் தாமரை துறந்து
குடி புக்கால் எனக், குடில் புக்கார் கொடி அன்ன மடவார். - 1.14.12
910 - குதிரைகளைக் கூடத்திற் கட்டுதல்
உண் அமுதம் ஊட்டி இளையோர் நகர் கொணர்ந்த,
துண் எனும் முழக்கின, துருக்கர் தர வந்த,
மண் மகள் தன் மார்பின் அணி வன்ன சரம் என்னப்
பண் இயல் வயப் பரிகள், பந்தியின் நிரைத்தார். - 1.14.13
911 - சேனைகட்கு வேண்டுவன செய்யப்படுதல்
நீர் திரை நிரைத்த என நீள் திரை நிரைத்தார்;
ஆர்கலி நிரைத்த என ஆவணம் நிரைத்தார்;
கார் நிரை எனக் களிறு கா இடை நிரைத்தார்;
மாருதம் நிரைத்த என வாசிகள் நிரைத்தார். - 1.14.14
912 - அரசமாளிகையை அறிந்து சேர்தல்
நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி விழியாரும்,
வடிக்கும் அயில் வீரரும், மயங்கினர் திரிந்தார்;
இடிக்கும் முரசக் குரலின், எங்கும் முரல் சங்கின்,
கொடிக்களின், உணர்ந்து, அரசர் கோநகர் அடைந்தார். - 1.14.15
913 - தூசியைத் துடைத்தல்
மிதிக்க நிமிர் தூளியின் விளக்கம் அறும் மெய்யைச்,
சுதைக்கண் நுரையைப் பொருவும் தூசு கொடு தூய்து ஆய்
உதிர்த்தனர் இளங்குமரர்; ஒவியரின் ஓவம்
புதுக்கினர் எனத் தருண மங்கையர் பொலிந்தார். - 1.14.16
914 - அரசர்கள் படமாடஞ் சேர்தல்
தாள் உயர் தடக் கிரி இழிந்து தரை சேரும்
கோளரி எனக், கரிகள் கொற்றவர் இழிந்தார்,
பாளை விரி ஒத்து உலவு சாமரை படப் போய்,
வாள் எழ நிரைத்த பட மாடம் அவை புக்கார். - 1.14.17
915 - படமாடத்தில் மங்கையர் முகங்களின் காட்சி
தூசினொடு வெண் படம் உடைக் குடில்கள் தோறும்,
வாச மலர் மங்கையர் முகங்கள், மழை வானின்
மாசு இல் மதியின் கதிர் வழங்கு நிழல் எங்கும்
வீசு திரை வெண் புனல் விழுங்கியது போலும். - 1.14.18
916 - புழுதியாடிய யானையின் தோற்றம்
மண் உற விழுந்து நெடு வான் உற எழுந்து,
கண்நுதல் பொருந்தவரு கண்ணனில் வரும்; கார்
உண்நிறம் நறும் பொடியை வீசி, ஒரு பாகம்
வெண்நிற நறும் பொடி புனைந்த மத வேழம். - 1.14.19
917 - புழுதியை உதறிவிட்ட குதிரைகள்
தீயவரொடு ஒன்றிய திறத்து அரு நலத்தோர்
ஆயவரை அந்நிலை அறிந்தனர் துறந்த ஆங்கு,
ஏய வரும் நுண் பொடி படிந்து உடன் எழுந்து ஒண்
பாய் பரி விரைந்து உதறி நின்றன பரந்தே, - 1.14.20
918 - கட்டை யறுத்துச் சென்ற குதிரைகள்
மும்மை புரி வன் கயிறு கொய்து, செயல் மொய்ம்பு ஆல்,
தம்மையும் உணர்ந்து, தரை கண்டு, விரைகின்ற
அம்மையினொடு இம்மையை அறிந்து நெறி செல்லும்,
செம்மையவர் என்ன, நனி சென்றன துரங்கம். - 1.14.21
919 - திரைகளினிடையே மகளிர் கண்கள் பிறழ்தல்
விழுந்த பனி அன்ன திரை வீசுபுரை தோறும்,
கழங்கு பயில் மங்கையர் கருங்கண் மிளிர்கின்ற;
தழங்கு கழி சிந்திய தரம் பயில் தரங்கத்து
எழுந்து இடை பிறழ்ந்து ஒளிர் கொழும் கயல்கள் என்ன. - 1.14.22
920 - ஆற்றில் ஊற்றுநீர் தோன்றுதல்
வெள்ளம் நெடு வாரி உற வீசி இலவேனும்,
கிள்ள எழுகின்ற புனல், கேளிரின் விரும்பித்
தெள்ளு புனல் ஆறு சிறிதே உதவுகின்ற,
உள்ளது மறாது உதவு வள்ளலையும் ஒத்த. - 1.14.23
921 - ஆடவர் படமாடங்களிற் புகுதல்
துன்றி நெறி பங்கிகள் துளங்க, அழலோடும்
மின் திரிவ என்ன மணி ஆரம் மிளிர் மார்பர்,
மன்றல் மணம் நாறு படமாடம் நுழைகின்றார்,
குன்றின் முழை தோறும் நுழை கோளரிகள் ஒத்தார். - 1.14.24
922 - யானைகள் நீரைக் கலக்குதல்
நெருங்கு அயில் எயிறு இணைய, செம் மயிரின் நெற்றிப்,
பொரும் குலிகம் அப்பியன, போர் மணிகள் ஆர்ப்ப,
பெருங் களிறு அலைப் புனல் கலக்குவன, பெட்கும்
கருங் கடல் கலக்கும் மதுகைடவரை ஒத்த. - 1.14.25
923 - மதயானைகள் நீர்நிலைகளை விடாமை
ஒக்க நெறி உய்ப்பவர் உரைத்த குறி கொள்ளா,
பக்கம் இனம் மொய்த்து அயல் அலைக்க நனி பாரா,
மைக் கரி மதத்த, விலைமாதர் கலை அல்குல்
புக்கவரை ஒத்தன, புனல் சிறைகள் ஏறா. - 1.14.26
924 - பாடிநகர் கடலை ஒத்திருத்தல்
துகில் இடை மடந்தையரொடு ஆடவர் துவன்றிப்,
பகல் இடைய, அட்டிலில் மடுத்து, எரி பரப்பும்
அகில் இடு கொழும்புகை அழுங்கலின், முழங்கா
முகில் படு நெடும் கடலை ஒத்து உளது அம் மூதூர். - 1.14.27
925 - பாடிநகர் அமரர் நாடு போன்றிருத்தல்
கமர் உறு பொருப்பின் வாழும் விஞ்சையர் காண வந்தார்,
தமரையும் அறியார் நின்று திகைப்பு உறு தகைமை சான்ற
குமரரும் மங்கைமாரும் குழுமலால், வழுவி விண் நின்று
அமரர் நாடு இழிந்தது என்னப் பொலிந்தது அவனீகம் வெள்ளம். - 1.14.28
926 - மகளிர் திரிதல்
வெயில் நிறம் குறையச் சோதி மின் நிழல் பரப்ப, முன்னம்
துயில் உணர் செவ்வியாரும், துனியுறு முனிவின் ஆரும்,
குயிலொடும் இனிது பேசிச், சிலம்பொடும் இனிது கூவி,
மயிலினம் திரிவ என்னத், திரிந்தனர் மகளிர் எல்லாம். - 1.14.29
927 - ஆடவர் திரிதல்
தாள் இணை கழல்கள் ஆர்ப்பத், தார் இடை அளிகள் ஆர்ப்ப,
வாள் புடை இலங்கச், செங் கேழ் மணி அணி வலயம் மின்னத்,
தோள் என உயர்ந்த குன்றின் சூழல்கள் இனிது நோக்கி,
வாள் அரி திரிவ என்னத் திரிந்தனர் மைந்தர் எல்லாம். - 1.14.30
928 - கவிக்கூற்று
சுற்றிய கடல்கள் எல்லாம் சுடர் மணிக் கனகக் குன்றைப்
பற்றிய வளைந்த என்னப், பரந்துவந்து இறுத்த சேனை,
கொற்றவர், தேவிமார்கள், மைந்தர்கள், கொம்பு அனார், வந்து,
உற்றவர் காணல் உற்ற மலை நிலை உரைத்தும் அன்று ஏ. - 1.14.31
929 - சந்திரசைலத்தின் வருணனை ((929-942))
பம்பு தேன், மிஞிறு, தும்பி, பரந்து இசை பாடி ஆட
உம்பர் வானம் அத்து நின்ற ஒளி தரு தருவின் ஓங்கும்
கொம்புகள், பனைக் கை நீட்டிக், குழையொடும் ஒடித்துக், கோட்டுத்
தும்பிகள், உயிரே அன்ன துணை மடப் பிடிக்கு நல்கும். - 1.14.32
930 - பண் மலர் பவளச் செவ்வாய்ப் பனி மலர்க் குவளை அன்ன,
கண் மலர், கொடிச்சிமார்க்குக் கணித் தொழில் புரியும் வேங்கை
உண் மலர் வெறுத்த தும்பி, புதிய தேன் உதவும் நாகத்
தண் மலர் என்று வானத் தாரகை தாவும் அன்று ஏ. - 1.14.33
931 - மீன் எனும் பிடிகளோடும், விளங்கும் வெண்மதி நல் வேழம்,
கூனல் வான் கோடு நீட்டிக் குத்திடக், குமுறிப் பாயும்
தேன் உகு மடையை மாற்றிச், செம் தினை குறவர் முந்தி
வான நீர் ஆறு பாய்ச்சி, ஐவனம் வளர்ப்பர் மாதோ! - 1.14.34
932 - குப்புறற்கு அருமையால் அக் குலம் வரை சாரல் வைகி
ஒப்புறத் துளங்குகின்ற உடுபதி ஆடியின்கண்,
இ புறத்தேயும் காண்பார் குறத்தியர் இயைந்த கோலம்,
அ புறத்தேயும் காண்பார் அரம்பையர் அழகு மாது ஓ. - 1.14.35
933 - உதி உறு துருத்தி ஊதும் உலை உறு தீயும், வாயின்
அதி விட நீரும், நெய்யும், உண்கிலாது, ஆவி உண்ணும்
கொதி நுனை வேல் கண் மாதர் குறத்தியர் நுதலினோடு,
மதியினை வாங்கி ஒப்புக் காண்குவர் குறவர் மன் ஓ! - 1.14.36
934 - பேணுதற்கு அரிய கோலக் குருளை அம், பிடிகள் ஈன்ற
காணுதற்கு இனிய வேழக் கன்று ஒடு களிக்கும் முன்றில்
கோணுதற்கு உரிய திங்கள் குழவியும், குறவர் தங்கள்
வாள் நுதல் கொடிச்சி மாதர் மகவொடு தவழும் மாது ஓ! - 1.14.37
935 - அஞ்சனக் கிரியின் அன்ன அழி கவுள் யானை கொன்ற
வெம் சினத்து அரியின் திண் கால் சுவடு ஒடு, விஞ்சை வேந்தர்
குஞ்சி அம் தலத்தும், நீலக் குல மணி தலத்தும், மாதர்
பஞ்சி அம் கமலம் பூத்த பசும் சுவடு உடைத்து மன் ஓ! - 1.14.38
936 - செங்கயல் அனைய நாட்டம் செவி உறா, முறுவல் தோன்றா,
பொங்கு இருங் கூந்தல், சோரா, புருவங்கள் நெரியா, பூவின்
அம் கையும் மிடறும் கூட்டி, நரம்பு உளர்ந்து, அமுதம் ஊறும்
மங்கையர் பாடல் கேட்டுக், கின்னரம் மயங்கும் மாது ஓ! - 1.14.39
937 - கள் அவிழ் கோதை மாதர் காதொடும் உறவு செய்யும்
கொள்ளை வாள் கண்ணினார் தம் குங்குமக் குழம்பு தங்கும்
தெள்ளிய பளிக்குப் பாறைத் தெளி சுனை, மணியில் செய்த
வள்ளமும் நறவும் என்ன வரம்பு இல பொலியும் மன்னோ! - 1.14.40
938 - ஆடவர், ஆவி சோரா, அஞ்சனம் வாரி சோர,
ஊடலில் சிவந்த நாட்டத்து உம்பர்தம் அரம்பை மாதர்,
தோடு அவிழ் கோதை நின்றும் துறந்த மந்தார மாலை,
வாடல நறவு அறாது வயின் வயின் வயங்கும் மாது ஓ! - 1.14.41
939 - மாந்தளிர் அனைய மேனிக் குறத்தியர் மாலை சூட்டிக்
கூந்தல் அம் கமுகின் பாளை குழலினோடு ஒப்புக் காண்பார்;
ஏந்து இழை அரம்பை மாதர் எரி மணிக் கடகம் வாங்கிக்
காந்தள் அம் போதில் பெய்து கைகளோடு ஒப்புக் காண்பார். - 1.14.42
940 - சரம் பயில் சாபம் அன்ன புருவங்கள் தம்மின் ஆட,
நரம்பினோடு இனிது பாடி நாடகம் மயிலொடு ஆடும்,
அரம்பையர் வெறுத்து நீத்த, அவிர் மணி கோவை ஆரம்,
மரம் பயில் கடுவன் பூண, மந்தி கண்டு உவக்கும் மாது ஓ. - 1.14.43
941 - சாந்து உயர் தடங்கள் தோறும், தாதுராகத்தில் சார்ந்த
கூந்தல் அம் பிடிகள் எல்லாம் குங்குமம் அணிந்த போலும்;
காந்து இன மணியின் சோதி கதிரொடும் கலந்து வீசச்
சேந்து வானகம் எப்போதும் செக்கரை ஒக்கும் அன்று ஏ! - 1.14.44
942 - நிலம் மகள் கு அணிகள் என்ன நிரை கதிர் முத்தம் சிந்தி,
மலைமகள் கொழுநன் சென்னி வந்து வீழ் கங்கை மான,
அலகில் பொன் அலம்பி ஓடிச் சாந்து சேர் அருவி மாலை,
உலகு அளந்தவன் தன் மார்பின் உத்தரீகத்தை ஒத்த. - 1.14.45
943 - அம்மலையிற் கண்ட பல நிகழ்ச்சிகள் (943-951)
கோடு உலாம் நாகம் போதோடு இலவங்கம் மலர் உம் கூட்டிச்
சூடு வார், களி வண்டு ஓச்சித் தூ நறும் தேறல் கொள்வார்,
கேடு இல மகரம் யாழின் கின்னரமிதுனம் பாடும்
பாடலால் ஊடல் நீங்கும் பரிமுகமாக்கள் கண்டார். - 1.14.46
944 - பெருங் களிப்பு உற்ற மைந்தர்
பேர் எழில் ஆகத்தோடும்
பொரும் துணைக் கொங்கை அன்ன
பொருவு இல் கோங்கு அரும்பின் மாடே,
மருங்கு எனக் குழையும் கொம்பின்
மடப் பெடை வண்டும், தங்கள்
கருங்குழல் களிக்கும் வண்டும்,
கடிமணம் புணரக் கண்டார். - 1.14.47
945 - படிகத்தின் தலம் என்று எண்ணிப், படர் சுனை முடுகிப் புக்க
சுடிகைப் பூம் கமலம் அன்ன சுடர் மதி முகத்தினார் தம்
வடகத்தோடு உடுத்த தூசும் மாசு இல் நீர் நனைப்ப, நோக்கி
கடகக் கை மறித்துத் தம்மில், கருங்கழல் வீரர் நக்கார். - 1.14.48
946 - பூ அணை பலவும் கண்டார்; பொன் அரி மாலை கண்டார்;
மேவ அரும் கோபம் அன்ன வெள் இலை தம்பல் கண்டார்;
ஆவியின் இனிய கொண்கர்ப் பிரிந்து அறிவு அழிந்த விஞ்சைப்;
பாவையர் வைகத் தீய்ந்த பல்லவம் சயனம் கண்டார். - 1.14.49
947 - பானல் அம் கண்கள் ஆடப், பவளம் வாய் முறுவல் ஆடப்,
பீன வெம் முலையின் இட்ட பெருவிலை ஆரம் ஆடத்,
தேன் முரன்று அளகத்து ஆடத், திரு மணிக் குழைகள் ஆட,
வானவர் மகளிர் ஆடும் வாசம் நாறு ஊசல் கண்டார். - 1.14.50
948 - சுந்தர வான மாதர் துவர் இதழ்ப் பவள வாயும்,
அந்தம் இல் சுரும்பும், தேனும், மிஞிறும், உண்டு, அல்குல் விற்கும்
பைந்தொடி மகளிர் கைத்து ஓர் பசை இல்லை என்ன விட்ட
மைந்தரின் நீத்த, தீம் தேன் வள்ளங்கள் பலவும் கண்டார். - 1.14.51
949 - அல் பகல் ஆக்கும் சோதிப் பளிங்கு அறை அமளிப் பாங்கர்,
மல் பக மலர்ந்த திண் தோள் வானவர் மணந்த கோல
வில் பகை நுதலினார், தம் கலவியின் வெறுத்து நீத்த
கற்பகம் ஈன்ற மாலை கலனொடும் கிடப்பக் கண்டார். - 1.14.52
950 - கை என மலரவேண்டி
அரும்பிய காந்தள் நோக்கிப்,
'பை அரவு இது' என்று அஞ்சிப்
படைக் கண்கள் புதைக்கின்றாரும்,
நெய் தவழ் வயிரப் பாறை
நிழல் இடைத் தோன்றும் போதைக்,
'கொய்து இவை தருதிர்' என்று
கொழுநரைத் தொழுகின்றாரும். - 1.14.53
951 - பின்னங்கள் உகிரிற் செய்து, பிண்டி அம் தளிர் கைக் கொண்ட
சின்னங்கள் முலையின் அப்பித், தேன் மலர் கொய்கின்றாரும்:
வன்னங்கள் பலவும் தோன்ற மணி ஒளிர் மலையில் நில்லா
அன்னங்கள் புகுந்த என்ன, அகன் சுனை குடைகின்றாரும். - 1.14.54
952 - அம் மலையின் வருணனை ((952-960))
ஈனும் மாழை இளம் தளிர் ஏய் ஒளி
ஈனும் மாழை இளந்தளிர் ஏ இடை,
மானும், வேழமும், நாகமும், மாதர் தோள்
மானும் வேழமும், நாகமும், மாடு எலாம். - 1.14.55
953 - திமிர மா, உடல் குங்குமச் சேதகம்
திமிர, மா ஒடும், சந்து ஒடும், தேய்க்கும் ஆல்;
அமர மாதரை ஒத்து ஒளிர் அம் சொலார்
அமர, மாதரை, ஒத்தது அவ் வானமே. - 1.14.56
954 - பேர் அவாவொடு மாசுணம் பேரவே
பேர ஆவொடு மாசுணம் பேரவே
ஆர வாரத்தினோடு மருவியே,
ஆர ஆரத்தின் ஓடும் அருவி ஏ. - 1.14.57
955 - புகலும் வாள் அரிக் கண்ணியர் பொன் புயம்
புகலும் வாள் அரிக் கண்ணியர் பூண் முலை,
அகிலும் ஆரமும் ஆர, அங்கு ஓங்குமே,
அகிலும், ஆரமும், மாரவம், கோங்குமே. - 1.14.58
956 - துன் அரம்பை நிரம்பிய தொல்வரை
துன் அரம்பையர் ஊருவில் தோன்றும் ஆல்;
கின்னரம் பயில் கீதங்கள் என்னலாம்
கின்னரம் பயில்கின்றனர் ஏழைமார். - 1.14.59
957 - ஊறு மாகட மா உற ஊங்கு எலாம்
ஊறு மாகட மாமதம் ஓடுமே;
ஆறு சேர்வன மா, வரை ஆடும் ஏ,
ஆறு சேர்வன மாவரை ஆடுமே. - 1.14.60
958 - கல் இயங்கு கரும் குறமங்கையர்
கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா,
வல்லியங்கள் நெருங்கும் மருங்கு எலாம்,
வல் இயங்கள் நெருங்கி மயங்கும் ஏ. - 1.14.61
959 - கோள் இபம் கயம் மூழ்கக், குளிர் கயம்
கோளி பங்கயம் ஊழ்கக் குலைந்த ஆல்;
ஆளி பொங்கும் மரம் பையர் ஓதி ஏ
ஆளி பொங்கும் அரம்பையர் ஓதியே. - 1.14.62
960 - ஆகம் ஆலையம் ஆக உளாள் பொலிவு
ஆக, மால் அயல் நின்று எனல் ஆகும் ஆல்;
மேக மாலை மிடைந்தன மேல் எலாம்,
ஏக மாலை கிடந்தது கீழ் எலாம். - 1.14.63
961 - ஆடவரும் பெண்டிரும் விளையாடுதல்
பொங்கு தேன் நுகர் பூ மிஞிறு ஆம் என,
எங்கும் மாதரும் மைந்தரும் ஈண்டி, அத்
துங்க மால் வரைச் சூழல்கள் யாவையும்
தங்கி, நீங்கலர், தாம் இனிது ஆடுவார். - 1.14.64
962 - அனைவரும் மலைவளத்தில் ஈடுபட்டிருத்தல்
இறக்கம் என்பதை எண்ணிலர், எண்ணுங்கால்
பிறக்கும் என்பதோர் பீழையது ஆதலால்;
துறக்கம் எய்திய தூயவர் ஏ என,
மறக்ககிற்றிலர் அன்னதன் மாண்பு எலாம். - 1.14.65
963 - அந்தி மாலை வருணணை
மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது; வானின் ஓடும்
வெம் சாயை உடைக் கதிர் அங்கு அதன் மீது பாயும்
பஞ்சானனம் ஒத்தது; மற்று அது பாய ஏறும்
செஞ்சோரி எனப் பொலிவுற்றது செக்கர் வானம். - 1.14.66
964 - அந்தியில் சந்திர சைலத்தின் தோற்றம் (964-965)
திணி ஆர் சினை மா மரம் யாவையும், செக்கர் பாயத்,
தணியாத நறும் தளிர் ஈன்றன போன்று தாழ,
அணி ஆர் ஒளி வந்து நிரம்பலின், அங்கம் எங்கும்
மணியால் இயன்ற மலை ஒத்தது அம் மாசு இல் குன்றம். - 1.14.67
965 - கண்ணுக்கு இனிது ஆகி விளங்கிய காட்சி ஆல் உம்,
எண்ணற்கு அரிது ஆகி இலங்கு சிரங்களாலும்,
வண்ணம் கொழும் சந்தனச் சேதகம் மார்பு அணிந்த
அண்ணல் கரியோன்தனை ஒத்தது அவ் ஆசு இல் குன்றம். - 1.14.68
966 - சேனைகள் மலையடிவாரத்தில் தங்குதல்
ஊனும் உயிரும் அனையார் ஒருவர்க்கு ஒருவர்
தேனும் மிஞிறும் சிறு தும்பியும் பம்பி ஆர்ப்ப,
யானை இனமும் பிடியும், இகல் ஆளி ஏறும்,
மானும் கலையும் என மால் வரை வந்து இழிந்தார். - 1.14.69
967 - இருள் பரத்தல்
கால் வானகத் தேர் உடை வெய்யவன் காய் கடும் கண்,
கோல் மாய் கதிர்ப் புல் உளைக் கொல் சினக் கோளரி மா
மேல்பால் மலையில் புக, வீங்கு இருள் வேறு இருந்த
மால் யானை ஈட்டம் என வந்து பரந்தது அன்று ஏ. - 1.14.70
968 - விளக்கேற்றல்
மந்தாரம் உந்து மகரந்த மணம் குலாவும்
அம் தார் அரசர்க்கு அரசன்தன் அனீக வெள்ளம்,
நந்தாது ஒலிக்கும் நரலைப் பெருவேலை எல்லாம்
செந்தாமரை பூத்தது எனத், தீபம் எடுத்தது அன்று ஏ. - 1.14.71
969 - சந்திரன் தோற்றம்
தண் நல் கடலில் தளி சிந்து தரங்கம் நீங்கி,
விண்ணில் சுடர் வெண்மதி வந்தது, மீன்கள் சூழ,
வண்ணக் கதிர் வெண் நிலவின் திரள் வாலுகம் அத்து ஊடு
ஒள் நித்திலம் ஈன்று ஒளிர் வால் வளை ஊர்வது ஒத்து ஏ. - 1.14.72
970 - நிலவில் மகளிர் மகிழ்தல்
மீன் நாறு வேலை ஒரு வெண் மதி ஈனும் வேலை,
நோனாது அதனை, நுவலற்கு அருங் கோடி வெள்ளம்
வான் நாடியரில் பொலி மாதர் முகங்கள் என்னும்
ஆனா மதியங்கள் மலர்ந்தது அனீக வேலை. - 1.14.73
971 - பல்வகைப் பண்ணொலிகல்
மண்ணும் முழவின் ஒலி, மங்கையர் பாடல் ஓதை;
பண்ணும் நரம்பில் பகையா இயல் பாணி ஓதை,
கண்ணும் உடை வேய் இசை, கண் உளர் ஆடல் தோறும்,
விண்ணும் மருளும்படி, விம்மி எழுந்த அன்று ஏ. - 1.14.74
972 - மாதர் கோலங் கொள்ளல்
மணியின் அணி நீக்கி, வயங்கு ஒளி முத்தம் வாங்கி
அணியும் முலையார், அகில் ஆவி புலர்த்தும் நல்லார்,
தணியும் மது மல்லிகைத் தாமம் வெறுத்து, வாசம்
திணியும் இதழ்ப் பித்திகைக் கத்திகை சேர்த்துவாரும். - 1.14.75
973 - பல்வகையொலி மிகல்
புதுக் கொண்ட வேழம் பிணிப்போர் புனை பாடல் ஓதை,
மதுக் கொண்ட மாந்தர் மடவாரின் மிழற்றும் ஓதை,
பொது பெண்டிர் அல்குல் புனை மேகலைப் பூசல் ஓதை,
கதம் கொண்ட யானை களியால் களிக்கின்ற ஓதை. - 1.14.76
974 - இரவு நீங்கல்
உண்ணா அமுது அன்ன கலைப் பொருள் உள்ளது உண்டும்,
பெண் ஆர் அமுதம் அனையார் மனத்து ஊடல் பேர்த்தும்,
பண் ஆர்ந்த பாடல் செவி மாந்திப், பயன் கொள் ஆடல்
கண்ணால் நனி துய்க்கவும், கங்குல் கழிந்தது அன்று ஏ. - 1.14.77
1.15. பூக்கொய் படலம் (975 - 1013)
மீன் உடை எயிற்றுக் கங்குல் கனகனை வெகுண்டு, வெய்ய
கான் உடைக் கதிர்கள் என்னும் ஆயிரம் கரங்கள் ஓச்சித்,
தான் உடை உதயம் என்னும் தமனியத் தறியில் நின்று,
மானுட மடங்கல் என்னத் தோன்றினன் வயங்கு வெய்யோன். - 1.15.1
976 - தசரத மன்னன் சேனையோடு சோணையாற்றை யடைதல்
முறை எலாம் முடித்த பின்னர்,
மன்னனும் முரித் தேர்மேல்
இறை எலாம் வணங்கப் போனான்;
எழுந்து உடன் சேனை வெள்ளம்
குறை எலாம் சோலை ஆகி,
குழி எலாம் கழுநீர் ஆகி,
துறை எலாம் கமலம் ஆன,
சோணையாறு அடைந்தது அன்று ஏ. - 1.15.2
977 - அனைவரும் சோலை சேர்தல்
அடைந்து அவண் இறுத்த பின்னர்,
அருக்கனும் உம்பர்ச் சார,
மடந்தையர் குழாங்களோடு,
மன்னரும், மைந்தர் தாமும்,
குடைந்து வண்டு உறையும் மென் பூ
கொய்து இனிது ஆட, மைதீர்
தடங்களும் மடுவும் சூழ்ந்த
தண் நறும் சோலை சார்ந்தார். - 1.15.3
978 - மாதர் சோலை சார்தல்
திண் சிலை புருவம் ஆகச்,
சேய் அரிக் கருங்கண் அம்பு ஆல்
புண் சில செய்வர் என்று
போவன போன்ற மஞ்ஞை;
பண் சிலம்பு அளிகள் ஆர்ப்ப,
நாணினால் பறந்த போன்ற,
ஒண் சிலம்பு ஆர்ப்ப மாதர்
ஒதுங்குதோறு ஒதுங்கும் அன்னம். - 1.15.4
979 - தோழியருடன் மகளிர் ஆடல்
செம்பொன் செய் சுருளும் தெய்வக்
குழைகளும் சேர்ந்து மின்னப்,
பம்பு தேன் அலம்ப ஒல்கிப்,
பண்ணையின் ஆடல் நோக்கிக்,
கொம்பொடும் கொடி அனார் ஐ
குறித்து அறிந்து உணர்தல் தேற்றார்;
வம்பு அவிழ் அலங்கல் மார்பின்
மைந்தரும் மயங்கி நின்றார். - 1.15.5
980 - குயில்களின் நாணம்
பாசு இழைப் பரவை அல்குல்
பண் தரு கிளவி தண் தேன்
மூசிய கூந்தல் மாதர்
மொய்த்த பேர் அமலை கேட்டுக்,
கூசின அல்ல, பேச
நாணின குயில்கள் எல்லாம்,
வாசகம் வல்லார் முன் நின்று
யாவர் வாய் திறக்க வல்லார்? - 1.15.6
981 - மகளிர் கொம்புகளை வளைத்துப் பூக்கொய்தல்
நஞ்சினும் கொடிய நாட்டம்
அமுது என நயந்து நோக்கிச்,
செம் செவே கமலக் கையால்
தீண்டலும், நீண்ட கொம்பர்
தம் சிலம்பு அடியில் மென் பூ
சொரிந்து உடன் தாழ்ந்த என்ற ஆல்,
வஞ்சிபோல் மருங்குலார் மாட்டு
யாவர் ஏ வணங்கலாதார்? - 1.15.7
982 - ஆடவர்தோள் ஏறி மகளிர் பூக்கொய்தல்
அம்புயம் அத்து அணங்கின் அன்னார்
அ மலர் கைகள் தீண்ட,
வம்பு இயல் அலங்கல் பங்கி
வாள் அரி மருளும் கோளார்,
தம் புயம் வரைகள் வந்து
தாழ்வன; தளிர்த்த மென்பூங்
கொம்புகள் தாழும் என்றல்
கூறல் ஆம் தகைமைத்து ஒன்று ஓ? - 1.15.8
983 - மகளிர் முகங்களை வண்டுகள் சூழ்தல்
நதியினும் குளத்தும் பூவா
நளினங்கள், குவளையோடு,
மதி நுதல் வல்லி பூப்ப
நோக்கிய மழலைத் தும்பி,
அதிசயம் எய்திப் புக்கு
வீழ்ந்தன, அலைக்கப் போகா;
புதியன கண்ட போழ்து விடுவரோ
புதுமை பார்ப்பார்? - 1.15.9
984 - பூங்கொம்புகள்
உலம் தரு வயிரம் திண் தோள்,
ஒழுகி வாள் ஒளி கொள் மேனி,
மலர்ந்த பூம் தொடையல் மாலை,
மைந்தர்பால், மயிலின் அன்னார்
கலந்தவர் போல ஒல்கி
ஒசிந்தன, சில கை வாராப்,
புலந்தவர் போல நின்று,
வளைகில பூத்த கொம்பர். - 1.15.10
985 - மகளிர் பூங்கொடிகளை அலங்கரித்தல்
பூ எலாம் கொய்து கொள்ளப்
பொலிவு இல துவள நோக்கி,
'யாவையாம் கணவர் கண்ணுக்கு?
அழகு இல இவை என்று எண்ணிக்,
கோவையும், வடமும், நாணும்,
குழைகளும், குழையப் பூட்டிப்,
பாவையர் பணிமென் கொம்பை
நோக்கினர் பரிந்து நிற்பார். - 1.15.11
986 - மகளிர் கூந்தலில் வண்டு மொய்த்தல்
துறும் போதினில் தேன் துவைத்து உண்டு உழல்
தும்பி ஈட்டம்,
நறும் கோதையோடு நனை சின்னமும்
நீத்த நல்லார்
வெறும் கூந்தல் மொய்க்கின்றன; வேண்டல
வேண்டு போதும்;
உறும் போகம் எல்லாம் நலன் உள்வழி உண்பர் அன்று ஏ? - 1.15.12
987 - ஒரு நங்கையின் புலவி
மெய் போது இன் நங்கைக்கு இணை ஒப்பவள்,
வெண் பளிங்கில்
பொய் போது தாங்கிப் பொலிகின்றதன்
மேனி நோக்கி,
'இ பாவை எம்கோற்கு உயிர் அன்னவள்'
என்ன உன்னிக்
கை போதினோடு நெடும் கண் பனி
சோர நின்றாள். - 1.15.13
988 - ஒரு பெண் அழுத காரணம்
கோள் உண்ட திங்கள் முகத்தாள் ஒரு
கொம்பு, ஒர் மன்னன்
தோள் உண்ட மாலை ஒரு தோகையைச்
சூட்ட நோக்கித்,
தாள் உண்ட கச்சில் தகையுண்ட
முலைக் கண் மீது
வாள் உண்ட கண் நீர் மழை உண்டென
வார நின்றாள். - 1.15.14
989 - மனைவி காணாவாறு ஒரு மன்னன் மறைதல்
மயில் போல் வருவாள் மனம் காணிய, காதல் மன்னன்
செயிர் தீர் மலர்க் காவின் ஒர் மாதவிச் சூழல் சேரப்,
பயில்வாள் இறை பண்டு பிரிந்து அறியாள் பதைத்தாள்,
உயிர் நாடி ஒல்கும் உடல் போல் அலமந்து உழன்றாள் - 1.15.15
990 - ஒரு பெண் குயிலிடம் மலர் வேண்டுதல்
மை தாழ் கருங் கண்கள் சிவப்பு உற வந்து தோன்றா,
நெய் தாவும் வேலான் ஒடு நெஞ்சு புலந்து நின்றாள்,
எய்தாது நின்ற மலர் நோக்கி,'எனக்கு இது ஈண்டக்
கொய்து ஈதி!' என்று ஓர் குயிலைக் கரம் கூப்பி நின்றாள். - 1.15.16
991 - புலவி நுணுக்கம்
செம்மாந்த தெங்கின் இளம் நீர் ஐ ஒர் செம்மல் நோக்கி
'அம்மா! இவை மங்கையர் கொங்கைகள் ஆகும்' என்ன,
'எ மாதர் கொங்கைக்கு இவை ஒப்பன ?' என்று, ஓர் ஏழை
விம்மா, வெதும்பா, வெயரா முகம், வெய்து உயிர்த்தாள். - 1.15.17
992 - கண்புதைத்தல்
போர் என்ன வீங்கும் பொருப்பு அன்ன
பொலம் கொள் திண் தோள்
மாரன் அனையான், மலர் கொய்து
இருந்தானை, வந்து ஓர்
கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள்
கண் புதைப்ப,
'ஆர்?' என்னலோடும், அனல் என்ன
அயிர்த்து உயிர்த்தாள். - 1.15.18
993 - மனைவியர்க்கு மலரைக் கொடாது ஒரு மன்னன் நிற்றல்
ஊற்று ஆர் நறை நாள் மலர், மாதர் ஒருங்கு வாசச்
சேற்றால் விளையாத செம் தாமரை கைகள் நீட்டி,
ஏற்றார்க்கு உதவான் இடை ஏந்தினன் நின்று ஒழிந்தான்,
மாற்றான், உதவான், கடுவச்சையன் போல், ஒர் மன்னன். - 1.15.19
994 - மாற்றவள் பெயர் கூறக் கேட்டு வருந்துதல்
தைக்கின்ற வேல் நோக்கினள், தன் உயிர் அன்ன மன்னன்,
மைக்கொண்ட கண்ணாள் எதிர், மாற்றவள் பேர் விளம்ப,
மெய் கொண்ட நாணம் தலைக்கொண்டு, வெதும்பி, மென் பூ
கை கொண்டு மோந்தாள், உயிர்ப்பு உண்டு கரிந்தது அன்று ஏ. - 1.15.20
995 - ஓர் அரசன் மதயானைபோல் திரிதல்
திண் தோள் அரசன் ஒருவன், குலத் தேவிமார்தம்
ஒண் தாமரை வாள் முகத்துள் மிளிர் உண்கண் எல்லாம்
கண்டு ஆதரிப்பத் திரிவான், மதம் கவ்வி உண்ண
வண்டு ஆதரிக்கத் திரி மா மத யானை ஒத்தான். - 1.15.21
996 - ஒத்த பங்கு பெற்ற மனைவியர் ஊடல்
சந்திக் கலா வெண் மதி வாள் நுதலாள் தனக்கும்,
வந்திக்கல் ஆகும் மடவாட்கும், வகுத்து நல்கி,
நிந்திக்கல் ஆகா உருவத்தினன் நிற்ப, மென் பூச்
சிந்திக், கலாப மயிலின், கண் சிவந்து போனார். - 1.15.22
997 - ஒருத்தி மலர் தேடுவதுபோல் கணவனைத் தேடித் திரிதல்
வந்து எங்கும், தன் மன் உயிரேயோ? பிறிது ஒன்றோ?
கந்தம் துன்றும் சோர் குழல் காணாள், கலை பேணாள்,
அந்தம் தோறும் அற்று உகும் முத்தம் அவை பாராள்,
சிந்தும் சந்தத் தேம் மலர் நாடித் திரிவாளும். - 1.15.23
998 - ஒரு பெண் கிள்ளையை அனுப்பித் தொடர்தல்
யாழ் ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர் இகல் மன்னன்
தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்,
ஆழத் துள்ளும் கள்ள நினைப்பாள், அவன் நின்ற
சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாள் உம். - 1.15.24
999 - ஒரு தலைவன் மாதவிப் பந்தரை இரத்தல்
அம் தார் ஆகம் அத்து, ஐங்கணை நூறு ஆயிரம் ஆகச்
சிந்தா நின்ற சிந்தையினான், செய்குவது ஓரான்,
'மந்தாரம் கொண்டு ஈகுதியோ? மாதவி!' என்று, ஓர்
சந்து ஆர் கொங்கைத் தாழ் குழலாள்பால் தளர்வான் உம். - 1.15.25
1000 - ஊடினாள் ஒருத்தி கண்ணடி பார்த்து வருந்தல்
நாடிக் கொண்டாள், குற்றம் நயந்தாள், முனிவு ஆறாள்,
ஊடிக் காணக் காட்டும் நலத்தாள், உடன் நில்லாள்,
தேடிச் தேடிச் சேர்த்த செழும்பூ நறுமாலை
சூடிச் சூடிக், கண்ணடி நோக்கித், துவள்வாளும். - 1.15.26
'மறலிக்கு ஊண் ஆம் வன் கதிர் வேலான் இடையே வந்து
உற இக் கோலம் பெற்றிலது என்றால், உடன் வாழ்வு இப்
பிறவிக்கு ஏலாது; என் செய்வது இ பேர் அணி?' என்னா,
விறலிக்கு ஈவாள் ஒத்து, இழை எல்லாம் விடுவாளும். - 1.15.27
1002 - ஒரு பெண் ஒளிந்த கிளிக்காக ஒசிந்து வருந்தல்
வம்பில் பொங்கும் கொங்கை சுமக்கும் வலி இன்றிக்
கம்பிக் கின்ற நுண் இடை நோவக் கசிவாளும்,
பைம்பொன் கிண்ணம் மெல் விரல் தாங்கிப், பயில்கின்ற
கொம்பில் கிள்ளைப் பிள்ளை ஒளிப்பக், குழைவாளும். - 1.15.28
1003 - அன்னத்திற்கு ஆடை அளித்தல்
தன்னைக் கண்டாள் மெல் நடை கண்டாள், தமரேபோல்
துன்னக் கண்டாள்,'தோழமை' என்றாள்,'துணை' என்றாள்,
'உன்னைக் கண்டார் எள்ளுவர்; பொல்லாது; உடு நீ!' என்று,
அன்னக் கன்னிக்கு ஆடை அளிப்பான் அமைவாளும். - 1.15.29
1004 - ஒரு பெண், மயிலுக்கு அஞ்சியும் நாணியும் மறைதல்
பாகு ஒக்கும் சொல் நுண் கலையாள், தன் படர் அல்குல்
ஆகக் கண்டு, ஓர் ஆடு அரவு ஆம் என்று, அயல் நண்ணும்
தோகைக்கு அஞ்சிக், கொம்பின் ஒதுங்கித், துணர் ஈன்ற
சாகைத் தன்கைக் கண்கள் புதைத்துத், தளர்வாளும். - 1.15.30
1005 - மறைந்து தேடி விளையாடுதல்
'பொன்னே! தேனே! பூமகளே! காண் எனை!' என்னாத்,
தன் நேர் இல்லாள், அங்கு ஒரு கொய் பூ தழை மூழ்கி,
'இன்னே என்னைக் காணுதி நீ!' என்று, இகலித், தன்
நல் நீலக் கண் கையின் மறைத்து, நகுவாளும். - 1.15.31
1006 - ஒருவன் வில்லும் தாமரையும் கை கொண்டு திரிதல்
வில்லில் கோதை நாண் உற, மிக்கோன், இகல் அங்கம்
புல்லிக் கொண்ட தாமரை மென் பூ மலர் தாங்கி,
அல்லில் கோதை மாதர் முகப் பேர் அரவிந்தச்
செல்வக் கானில் செம் கதிர் என்னத் திரிவானும். - 1.15.32
1007 - மனைவியர் பாடலை ஆடவர் கூர்ந்து கேட்டல்
செய்யில் கொள்ளும் தெள் அமுதச் செஞ்சிலை ஒன்று
கையில் பெய்யில் காமனும் நாணும் கவினார், தம்
மையல் பேதை மாதர் மிழற்றும் மழலைச் சொல்
தெய்வப் பாடல், சொல் கலை என்னத், தெரிவாரும். - 1.15.33
1008 - காமன் ஆயனைப் போலுதல்
சோலைத் தும்பி மென் குழல் ஆகத், தொடை மேவும்
கோலைக் கொண்ட மன்மத ஆயன் குறி உய்ப்ப,
நீலம் அத்து உண்கண் மங்கையர் சூழல் நிரை ஆவின்,
மாலைப் போதின், மால் விடை என்ன வருவாரும். - 1.15.34
1009 - ஒரு பெண்ணின் புருவக்கடை முனிவரையும் வெல்லும்
ஊக்கம் உள்ளத்து உடைய முனிவரால்
காக்கல் ஆவது காமன் கை வில், எனும்
வாக்கு மாத்திரம் அல்லது, வல்லியில்
பூக் கொய்வாள் புருவம் கடை போதும் ஏ. - 1.15.35
1010 - ஞானிகளும் காமத்தை வெல்வார் அல்லர்
நாறு பூ குழல் நல் நுதல், புன்னைமேல்
ஏறினான் மனத்து உம்பர் சென்று ஏறினாள்;
ஊறு ஞானத்து உயர்ந்தவர் ஆயினும்,
வீறு சேர் முலை மாதரை வெல்வர் ஓ? - 1.15.36
1011 - ஒருவன் அரும்புகளையும் புதிய தளிர்களையும் கொய்தல்
சினையின் மேல் இருந்தான், உருத் தேவரால்
வனையவும் அரியாள் வனப்பின் தலை
நினைவும் நோக்கமும் நீக்கலன், கைகளால்
நனையும் நாள் முறியும் கொய்து நல்கினான். - 1.15.37
1012 - மனைவியின் கோபம் கண்டு ஒருவன் தடுமாறுதல்
வண்டு வாழ் குழலாள் முகம் வாடிடத்,
தண்டு போல் புயத்தான் தடுமாறினான்,
உண்டு கோபம் என்று உள்ளத்து உணர்ந்து, அவள்
தொண்டை வாயில் துடிப்பு ஒன்று சொல்ல ஏ. - 1.15.38
1013 - அனைவரும் புனலாட்டுக்குச் செல்லுதல்
ஏயும் தன்மையர் இவ் வகையார் எலாம்,
தூய தண் நிழல் சோலைத் துறு மலர்
வேயும் செய்கை வெறுத்தனர், வெண் திரை
பாயும் தீம் புனல் பண்ணை சென்று எய்தினார். - 1.15.39
1.16. நீர்விளையாட்டுப் படலம் (1014- 1046)
புனை மலர்த் தடங்கள் நோக்கிப், பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க,
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண,
அனகரும் அணங்கு அனாரும், அம் மலர்ச் சோலை நின்றும்,
வன கரி பிடிகளோடும் வருவன போல, வந்தார். - 1.16.1
1015 - மகளிர் நீர்நிலைகளிற் புகுதல்
அங்கு அவர் பண்ணை நல் நீர் ஆடுவான் அமைந்த தோற்றம்,
கங்கைவார் சடையோன் அன்ன மா முனி கனல, மேல் நாள்,
மங்கைமார் கூட்டத்தோடும், வானவர்க்கு இறைவன் செல்வம்,
பொங்கு பால் கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்று ஏ. - 1.16.2
1016 - மகளிரின் முகங்களும் கண்களும்
மைய ஆம் குவளை எல்லாம் மாதர்கள் மலர்க் கண் பூத்த,
கைய ஆம் உருவத்தார் தம் கண் மலர் குவளை பூத்த,
செய்ய தாமரைகள் எல்லாம் தெரிவையர் முகங்கள் பூத்த,
தையலார் முகங்கள் செய்ய தாமரை பூத்த அன்று ஏ. - 1.16.3
1017 - மாதர்களின் புனல் விளையாட்டு (1017-1024)
தாளை ஏய் கமலத் தாளின் மார்பு உறத் தழுவுவாரும்,
தோளையே பற்றி வெற்றித் திரு எனத் தோன்றுவாரும்,
பாளையே விரிந்தது என்னப் பரந்த நீர் உந்துவாரும்,
வாளை மீன் உகள அஞ்சி மைந்தரைத் தழுவுவாரும். - 1.16.4
1018 - வண்டு உணக் கமழும் சுண்ணம் வாச நெய் நானத்தோடும்
கொண்டு எதிர் வீசுவாரும், கோதை கொண்டு ஓச்சுவாரும்,
தொண்டை வாய்ப் பெய்து தூநீர் கொழுநர்மேல் தூகின்றாரும்,
புண்டரீகக் கை கூப்பிப் புனல் முகந்து இறைக்கின்றாரும். - 1.16.5
1019 - மின் ஒத்த இடையினாரும், வேல் ஒத்த விழியினாரும்,
சின்னத்தின் அளக பந்தி, திரு முகம் மறைப்ப நீக்கி,
அன்னத்தை'வருக என்னோடு ஆட' என்று அழைக்கின்றாரும்,
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒத்த, உளைகின்றாரும். - 1.16.6
1020 - பண் உள பவளம் தொண்டை
பங்கயம் பூத்தது அன்ன,
வண்ண வாய் குவளை வாள் கண்
மருங்கு இலாக் கரும்பின் அன்னார்,
உள் நிறை கயலை நோக்கி,
'ஓடும் நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம் கொல்' என்று,
கணவரை வினவுவாரும். - 1.16.7
1021 - தேன் நகு நறவ மாலைச்
செறி குழல் தெய்வம் அன்னாள்,
தான் உடைக் கனக மேனி,
தடத்து இடை தோன்ற நோக்கி,
'நான் நக நகுகின்றாள் இந்
நல் நுதல் தோழியாம்' என்று,
ஊனம் இல் முலையின் ஆரம்,
உளம் குளிர்ந்து உதவுவாளும். - 1.16.8
1022 - குண்டலம் திருவில் வீசக்,
குல மணி ஆரம் மின்ன,
விண் தொடர் வரையின் வைகும்
மெல் மயில் கணங்கள் போல,
வண்டு உளர் கோதை மாதர்,
மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசையால்
கரை சார்கின்றாரும். - 1.16.9
1023 - 'அங்கு இடை உற்ற குற்றம்
யாவது', என்று, அறிதல் தேற்றாம்,
செம் கயல் அனைய நாட்டம்
சிவப்பு உறச் சீறிப் போன
மங்கை, ஓர் கமலச் சூழல்
மறைந்தனள், மறைய, மைந்தன்
பங்கயம் முகம் என்று ஓராது,
ஐயுற்றுப் பார்க்கின்றானும். - 1.16.10
1024 - பொன் தொடி தளிர் கை சங்கம்
வண்டொடு புலம்பி ஆர்ப்ப,
எற்றி நீர் குடையும் தோறும்,
ஏந்து பேர் அல்குல் நின்றும்,
கற்றை மேகலைகள் நீங்கிச்
சீறடி கௌவக்,'காலிற்
சுற்றியது அரவம்' என்று,
துணுக்கம் அத்து ஆல் துடிக்கின்றாரும். - 1.16.11
1025 - மகளிர் சூழநின்ற ஆடவன் தோற்றம் ((1025-1027))
குடைந்து நீராடும் மாதர் குழாம் புடை சூழ, ஆழித்
தடம் புயம் பொலிய, ஆண்டு ஓர் தார் கெழு வேந்தன் நின்றான்;
கடைந்த நாள் அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்,
மடந்தைமார் சூழ நின்ற மந்தரம் போல மாதோ. - 1.16.12
1026 - தொடி உலாம் கமலச் செம் கைத்,
தூ நகைத் துவர்த்த செவ்வாய்,
கொடி உலாம் மருங்குலார்தம்
குழாம் அத்து, ஒரு கொண்டல் நின்றான்,
கடி உலாம் கமல வேலிக்
கண் அகன் கான் யாற்று
பிடி எலாம் சூழ நின்ற
பெய் மத யானை ஒத்தான். - 1.16.13
1027 - கான மா மயில்கள் எல்லாம்
களி கெடக் களிக்கும் சாயல்,
சோனை வார் குழலினார்தம்
குழாத்து, ஒரு தோன்றல் நின்றான்,
வான யாறு அதனை நண்ணி,
வயின் வயின் வயங்கித் தோன்றும்,
மீன் எலாம் சூழ நின்ற,
விரி கதிர்த் திங்கள் ஒத்தான். - 1.16.14
1028 - மகளிர் இடையே நின்ற ஓர் தலைவியின் தோற்றம்
மேவல் ஆம் தகைமைத்து அல்லால்,
வேழ வில் தடக்கை வீரற்கு,
ஏ எலாம் காட்டுகின்ற
இணை நெடும் கண் ஒர் ஏழை,
பாவைமார் பரந்த கோலப்
பண்ணையில் பொலிவாள், வண்ணப்
பூ எலாம் மலர்ந்த பொய்கைத்
தாமரை பொலிவ போன்றாள். - 1.16.15
1029 - நீரிடைத் தோன்றும் மங்கை முகம்
மிடல் உடைக் கொடிய வேலே
என்ன, வாள் மிளிர்வ என்னச்,
சுடர் முகத்து உலாவு கண்ணாள்,
தோகையர் சூழ நின்றாள்,
மடல் உடைப் போது காட்டும்
வளர் கொடி பலவும் சூழக்,
கடல் இடைத் தோன்றும் மென் பூ
கற்பக வல்லி ஒத்தாள். - 1.16.16
1030 - நீரில் மூழ்கிய ஓர் பெண்ணின் தோற்றம்
தேர் இடைக் கொண்ட அல்குல்,
தெங்கு இடைக் கொண்ட கொங்கை,
ஆர் இடைச் சென்றும் கொள்ள
ஒண்கிலா அழகு கொண்டாள்,
வார் இடைத் தனம் மீது ஆட
மூழ்கினாள் வதனம், மை தீர்
நீர் இடைத் தோன்றும் திங்கள்
நிழல் எனப் பொலிந்தது அன்று ஏ. - 1.16.17
1031 - வெள்ளம் பரவுதல்
மலை கடந்த புயங்கள், மடந்தைமார்
கலை கடந்து அகல் அல்குல், கடம்படு
முலைகள், தம் தம் இல் முந்தி நெருங்கல் ஆல்,
நிலை கடந்து பரந்தது நீத்தம் ஏ. - 1.16.18
1032 - மகளிர் பொய்கையில் தோய்தல்
செய்ய வாய் விளர்ப்பக், கண் சிவப்பு உற,
மெய் அராகம் அழியத், துகில் நெகத்,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே. - 1.16.19
1033 - மகளிர் நீராடுதலால் பொய்கை மீனும் நறு மணம் கமழ்தல்
ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுவர் நன்று அரோ,
தேனும் நாவியும் தேக்கு அகில் ஆவியும்
மீனும் நாறின, வேறு இனி வேண்டும் ஓ? - 1.16.20
1034 - ஆடவரும் மகளிரும் ஆடிய புனலின் தோற்றம்
மிக்க வேந்தர்தம் மெய் அழி சாந்தொடும்,
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்,
ஒக்க, நீல முகில் தலை ஓடிய,
செக்கர் வானகம் ஒத்தது, அத் தீம் புனல். - 1.16.21
1035 - கலவைப் பூச்சு நீங்கப் பெற்ற மகளிரின் தோற்றம்
காக துண்ட நறும் கலவைக் களி,
ஆகம் உண்டது அடங்கலும், நீங்கல் ஆல்,
பாகு அடர்ந்த, பனிக் கனி வாய்ச்சியர்,
வேகடம் செய் மணி என, மின்னினார். - 1.16.22
1036 - ஒருத்தி தன் காதலனோடு ஊடுதல்
பாய் அரித் திறலான், பசுஞ் சாந்தினால்
தூய பொன் புயத்துப் பொதி தூக் குறி,
மீ அரித்து விளர்க்க, ஒர் மெல் இயல்
சேய் அரிக் கரும் கண்கள் சிவந்த ஏ. - 1.16.23
1037 - ஒருத்தியின் காமம் தீயால் நீரும் சுடுதல்
கதம்பம் நாள் விரை கள் அவிழ் தாதொடும்
ததும்பு பூ திரை தண் புனல் சுட்டதால்;
நிதம்ப பாரத்து ஒர் நேர் இழை, காமத்தால்
வெதும்புவாள், உடல் வெப்பம் வெதுப்ப ஏ. - 1.16.24
1038 - ஒருவன் நீர்முகந்து ஒருத்தியின் கூந்தலில் வீசுதல்
தையலாள் ஐ ஒர் தார் அணி தோளினான்,
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான்,
செய்ய தாமரைச் செல்வியைத், தீம் புனல்
கையின் ஆட்டும் களிறு அரசு என்னவே. - 1.16.25
1039 - தாமரை மீதிருந்த அன்னத்தின் தோற்றம்
சுளியும் மெல் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி, ஒத்தன ஆம் என,
விளிவு தோன்ற, மிதிப்பன போன்றன,
நளினம் ஏறின, நாகு இள அன்னம் ஏ. - 1.16.26
1040 - ஆடவரின் காம வேட்கை
எரிந்த சிந்தையர் எத்தனை என்கெனோ,
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்த்,
தெரிந்த கொங்கைகள், செவ்விய நூல் புடை
வரிந்த பொன் கலசங்களை மான ஏ. - 1.16.27
1041 - ஒருத்தி தன் தோழியின் கண் குறிப்புக்கொண்டு பேசுதல்
தாழ நின்ற தகை மலர்க் கையினால்,
ஆழி மன் ஒருவன் உரைத்தான், அது,
வீழியின் கனி வாய் ஒரு மெல் இயல்,
தோழி கண்ணில், கடைக்கணில் சொல்லினாள். - 1.16.28
1042 - நீரில் மூழ்கிய தாமரையின் தோற்றம்
தள்ளி ஓடி அலை தடுமாறல் ஆல்,
தெள்ளு நீரின் முழுகு செந்தாமரை,
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது,
உள்ளம் நாணி ஒளிப்பன போன்ற ஏ. - 1.16.29
1043 - நீராட்டின்பின் கரையேறி யாவரும் ஆடையணிகளை அணிதல்
இனைய எய்த, இரும் புனல் ஆடிய
வனை கரும் கழல் மைந்தரும் மாதரும்
அனைய நீர் வறிது ஆக, வந்து ஏறினார்,
புனை நறுந் துகில் பூணொடும் தாங்கினார். - 1.16.30
1044 - நீராட்டின்பின்னர் நீர்நிலையின் காட்சி
மேவினார் பிரிந்தார்க்கு, அந்த வீங்கு நீர்,
தாவு தண் மதி தன்னொடும் தாரகை,
ஓவு வானமும், உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும், போன்றது ஏ. - 1.16.31
1045 - சூரியன் மறைதல்
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய,
ஆன நீர் விளையாடலை நோக்கினான்,
தானும் அன்னது காதலித்தான் என,
மீன வேலையை வெய்யவன் எய்தினான். - 1.16.32
1046 - சந்திரன் தோற்றம்
ஆற்றல் இன்மையின் ஆல் அழிந்தேயும், தம்
வேற்று மன்னர்தம் மேல்வரும் வேந்தர்போல்,
ஏற்று, மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன், மீளவும் தோற்றினான். - 1.16.33
1.17. உண்டாட்டுப் படலம் (1047- 1113)
வெண்ணிற நற நிறை வெள்ளம் என்னவும்,
பண் நிறம் செறிந்து இடை பரந்தது என்னவும்,
உள் நிறை காமம் மிக்கு ஒழுகிற்று என்னவும்,
தண் நிறை நெடு நிலா தழைத்தது எங்குமே. - 1.17.1
1048 - கலந்தவர்க்கு இனியது ஓர் கள்ளுமாய்ப், பிரிந்து
உலந்தவர்க்கு உயிர் சுடு விடமும் ஆய், உடன்
புலந்தவர்க்கு உதவி செய் புதிய தூதும் ஆய்,
மலர்ந்தது நெடு நிலா மதனன் வேண்டவே. - 1.17.2
1049 - நிலவு மிகுதியின் விளைவு
ஆறு எலாம் கங்கையே ஆய; ஆழிதாம்,
கூறு பால் கடலை ஏ ஒத்த; குன்று எலாம்,
ஈறு இலான் கயிலையை இயைந்த; என் இனி
வேறு யாம் புகல்வது நிலவின் வீக்கம் ஏ? - 1.17.3
1050 - நிலவினால் உலகம் வெள்ளணி அணிந்ததை ஒத்தமை
எள் அரும் திசைகளோடு, யாரும், யாவையும்,
கொள்ளை வெள் நிலவினால் கோலம் கோடலால்,
வள் உறை வயிர வாள் மகரம் கேதனன்
வெள் அணி ஒத்தது வேலை ஞாலமே. - 1.17.4
1051 - மகளிர் எய்திய இடங்கள்
தயங்கு தாரகை புரை தரள நீழலும்,
இயங்கு தார் மிடைந்த கார் எழினிச் சூழலும்,
கயங்கள் போன்று ஒளிர் பளிங்கு அடுத்த கானமும்,
வயங்கு பூ பந்தர் உம், மகளிர் எய்தினார். - 1.17.5
1052 - மகளிர் மதுக் குடித்தல்
பூக் கமழ் ஓதியர், போது போக்கிய
சேக்கை இன்பச் செருச் செருக்கும் சிந்தையார்,
ஆக்கிய அமிழ்து என, அம் பொன் வள்ளத்து
வாக்கிய பசு நறா மாந்தல் மேயினார். - 1.17.6
1053 - மகளிர் கள்ளுண்டது
மீன் உடை விசும்பினார், விஞ்சை நாட்டவர்,
ஊன் உடை உடம்பினார், உருவம் ஒப்பு இலார்,
மான் உடை நோக்கினார் வாயில் மாந்தினார்,
தேன் உடை மலரிடைத் தேன் பெய்து என்னவே. - 1.17.7
1054 - கள்குடிக்கும் காரிகை ஒருத்தியின் கவின்
உக்க பால் புரை நறா, உண்ட வள்ளமும்,
கைக் கொள் வாள் ஒளி படச் சிவந்து காட்டத் தன்
மை கணும் சிவந்தது; ஓர் மடந்தை வாய்வழி
புக்க தேன் அமிர்தமாய்ப் பொலிந்த போன்றவே. - 1.17.8
1055 - கள் காமத்தை மிகுவித்தல்
தாமும் நானமும் ததைந்த தண் அகில்
தூமம் உண் குழலியர் உண்ட தூ நறை,
ஓம வெம் குழி உகு நெய்யின், உள் உறை
காம வெம் கனலினைக் கனற்றிக் காட்டிற்றே. - 1.17.9
1056 - மடந்தையொருத்தி தன் நிழலைத் தோழி என மயங்குதல்
விடன் ஒக்கும் நெடிய நோக்கின்
அமிழ்து ஒக்கும் இன் சொலார் தம்
மடன் ஒக்கும் மடனும் உண்டே!
வாள் நுதல் ஒருத்தி, காணாத்
தடன் ஒக்கும் நிழலைப் பொன் செய்
தண் நறும் தேறல் வள்ளத்து
'உடன் ஒக்க உவந்து நீயே
உண்ணுதி தோழி!' என்றாள். - 1.17.10
1057 - ஒருத்தி தன் நிழலையே வேறொருத்தி என்று நகுதல்
அச்சம் நுண் மருங்குலாள், ஓர் அணங்கு அனாள், அளக பந்தி
நச்சு வேல் கருங்கண் செவ்வாய் நளிர் முகம் மது உள் தோன்ற,
'பிச்சி! நீ என்செய்தாய்? இப் பெரு நறவு இருக்க, வாளா
எச்சிலை நுகர்தி ஓ? என்று, எயிற்று அரும்பு இலங்க நக்காள். - 1.17.11
1058 - ஒருத்தி வள்ளத்துள் நிலவை மதுவென மயங்கல்
புறம் எலாம் நகைசெய்து ஏசப்,
பொரு அரு மேனி வேறு ஓர்
மறம் உலாம் கொலை வேல் கண்ணாள்,
மணியின் வள்ளத்து வெள்ளை
நிற நிலாக் கற்றை பாய,
நிறைந்தது போன்று தோன்ற,
நறவு என அதனைப் வாயின்
வைத்தனள், நாண் உள் கொண்டாள். - 1.17.12
1059 - ஒருத்தி கள்ளில், கண்நிழலை வண்டென ஓச்சுதல்
'யாழ்க்கும் இன் குழற்கும் இன்பம்
அளித்தன இவையாம்' என்னக்
கேட்கும் மென் மழலைச் சொல் ஓர்
கிஞ்சுகம் கிடந்த வாயாள்,
தாள் கருங்குவளை தோய்ந்த
தண் நறைச் சாடியுள் தன்
வாள் கணின் நிழலைக் கண்டாள்,
'வண்டு' என ஓச்சுகின்றாள். - 1.17.13
1060 - ஒருத்தி கள்ளினுள் தோன்றுவது கலைமதி என்று எண்ணி இனியன கூறல்
களித்த கண் மதர்ப்ப, ஆங்கு ஓர்
கனம் குழை, கள்ளின் உள்ளால்
வெளிப்படுகின்ற காட்சி
வெண் மதி நிழலை நோக்கி,
'அளித்தது என் அபயம்;
வானத்து அரவினை அஞ்சி நீ வந்து
ஒளித்தனை, அஞ்சல்!' என்று ஆங்கு
இனியன உணர்த்துகின்றாள். - 1.17.14
1061 - ஒருத்தி நிலாவைக் கள்ளென்று கிண்ணத்தில் ஏற்றல்
அழிகின்ற அறிவினாலோ, பேதைமை ஆலோ, ஆற்றிற்
சுழி ஒன்றி நின்றது அன்ன உந்தியாள், தூய செம் தேன்
பொழிகின்ற பூவின் வேய்ந்த பந்தரைப் புரைத்துக், கீழ் வந்து
இழிகின்ற கொழு நிலாவை, நறவு என வள்ளத்து ஏற்றாள். - 1.17.15
1062 - காரிகையொருத்தி களியால் தடுமாறல்
மின் என நுடங்குகின்ற மருங்குலாள் ஒருத்தி, வெள்ளை
இன் அமிழ்து அனைய தீம் சொல் இடை தடுமாறி என்ன
வன்ன மேகலையை நீக்கி மலர்த் தொடை அல்குல் சூழ்ந்தாள்,
பொன் அரி மாலை கொண்டு புரி குழல் புனையல் உற்றாள். - 1.17.16
1063 - ஒருத்தி மதுவின்கண் தோன்றும் தன் முகத்தை மதியென மயங்கல்
கள் மணி வள்ளம் அத்து உள் ஏ
களிக்கும் தன் முகத்தை நோக்கி,
விண் மதி மதுவின் ஆசை
வீழ்ந்தது என்று, ஒருத்தி உன்னி,
'உள் மகிழ் துணைவனோடும்
ஊடும் நாள் வெம்மை நீங்கித்
தண் மதி ஆதி ஆகில்
தருவென் இந் நறவை' என்றாள். - 1.17.16
1064 - ஒரு மடந்தை, மயக்கத்தால் வெறும் கிண்ணத்தை வாயில் வைத்துக் கொள்ளுதல்
எள் ஒத்த கோல மூக்கின்
ஏந்திழை ஒருத்தி, முன்கை
தள்ளத் தண் நறவை எல்லாம்
தவிசு இடை உகுத்தும் தேறாள்,
உள்ளத்தின் மயக்கம் தன்னால்
உள்புறத்து உண்டு என்று எண்ணி,
வள்ளத்தை மறித்து வாங்கி,
மணி நிற இதழின் வைத்தாள். - 1.17.17
1065 - ஒருத்தி மலரின் நாளத்தால் மதுப்பருகுதல்
வான் தனை பிரிதல் ஆற்றா
வண்டு இனம், வச்சை மாக்கள்
ஏன்று அவர் நிதியம் வேட்ட
இரவலர் என்ன, ஆர்ப்ப,
தேன் தரு கமலச் செவ்வாய்
திறந்தனள் நுகர நாணி,
ஊன்றிய கழுநீர் நாளத்
தாளினால் ஒருத்தி உண்டாள். - 1.17.18
1066 - ஒருத்தி கள்ளைக் கணவன் உண்ணான் எனக் கருதித் தானும் உண்ணாமை
புள் உறை கமல வாவிப் பொரு கயல் வெருவி ஓட,
வள் உறை கழித்த வாள்போல் வரி உற வயங்கு கண்ணாள்,
கள் உறை மலர் மென் கூந்தல் களி இள மஞ்ஞை அன்னாள்,
உள் உறை அன்பன் உண்ணான் என நறவு உண்ணல் எண்ணாள். - 1.17.19
1067 - மதுப்பருகிய மாதொருத்தியின் நிலை
கூற்று உறழ் நயனங்கள் சிவப்பக், கூன் நுதல்
ஏற்றி, வாள் எயிறுகள் அதுக்கி, இன் தளிர்
மாற்று அரும் கரம் தலம் மறிக்கும் மாது ஒரு
சீற்றம் ஆம் அபிநயம் தெரிக்கின்றார் இனே. - 1.17.20
1068 - மாதொருத்தி மதுவுண்டு வியர்த்துநிற்றல்
துடித்த வான் துவர் இதழ்த் தொண்டைத் தூ நிலாக்
கடித்த வால் எயிறுகள் அதுக்கிக், கண்களாம்
வடித்த வெம் குருதி வேல் விழிக்கும் மாதர் மெய்
பொடித்த வேர் புறத்து உகு நறவம் போன்றது ஏ. - 1.17.21
1069 - ஒருத்திக்கு மதுவுண்டதால், புருவம் வளைதலும் நெற்றியில் வியர்வை உண்டாதலும்
கனித் திரள் இதழ் பொழி செம்மை கண் புக,
நினைப்பது ஒன்று உரைப்பது ஒன்று ஆம் ஒர் நேர் இழை,
தனித் தட மரை மலர் முகத்துச் சாபமும்
குனித்தது, பனித்தது குழவித் திங்கள் ஏ. - 1.17.22
1070 - கணவரும்-கள்ளும் ஒத்த எனல்
இலவு இதழ்த் துவர் விட, எயிறு தேன் உக,
முலை மிசைக் கச்சொடு கலையும் மூட்டு அற,
அலை குழல் சோர்தர, அசதி ஆட்டலால்,
கலவி செய் கொழுநரும் கள்ளும் ஒத்தவே. - 1.17.23
1071 - காரிகையொருத்தி தன் காதலனிடம் தோழியைத் தூதனுப்புதல்
கனை கழல் காமனால் கலக்கம் உற்றதை
அனகனுக்கு அறிவி, என்று அறியப் போக்கும் ஓர்
இன மணிக் கலையினாள்,'தோழி! நீயும், என்
மனம் எனத் தாழ்த்தியோ? வருதியோ?' என்றாள். - 1.17.24
1072 - தோழியரைத் தூதனுப்பியவள் தானே காதலனிடம் தனித்துச் சேர்தல்
மான் அமர் நோக்கி, ஓர் மதுகை வேந்தன்பால்,
ஆன தன் பாங்கியர் ஆயினார் எலாம்
போனவர் போனவர்; தொடரப் போக்கினாள்;
தானும், அங்கு அவர் பினே, தமியள் ஏகினாள். - 1.17.25
1073 - ஒருத்தி கணவன்பேர் சொல்லும் கிளியைப் புல்லுதல்
விரை செய் பூஞ் சேக்கையின் அடுத்த மீ மிசை
கரை செயா ஆசை அம் கடலுளாள், ஒரு
பிரைசம் என் குதலை ஆள், கொழுநன் பேர் எலாம்
உரைசெயும் கிள்ளையை உவந்து புல்லினாள். - 1.17.26
1074 - காதலாள் ஒருத்தி கிளியைக் கடிதல்
மன்றல் நாறு ஒரு சிறை இருந்து, ஒர் வாள் நுதல்,
தன் துணைக் கிள்ளையைத் தழீஇ,'என் ஆவியை
இன்று போய்க் கொணர்கிலை; என் செய் வாய் எனக்கு?
அன்றிலோடு ஒத்தி' என்று, அழுது, சீறினாள். - 1.17.27
1075 - கணவன் இளையாள்பெயரைச் சொல்லி மூத்தாளை அழைக்க அவள் வருந்துதல்
வளை பயில் முன் கை ஒர் மயில் அனாள், தனக்கு
இளையவள் பெயரினைக் கொழுநன் ஈதலும்,
முளை எயிறு இலங்கிட முறுவல் வந்தது;
களகள உதிர்ந்தது கயல் கண் ஆலியே. - 1.17.28
1076 - ஒருவன் மனைவி ஊடலைத் தீர்க்க முயலுதல்
செற்றம் முன் புரிந்தது ஓர் செம்மல், வெம்மையாற்
பற்றலும் அல்குலில் பரந்த மேகலை
அற்று உகும் முத்தின்முன் அவனி சேர்ந்தன,
பொற்றெடி ஒருத்தி கண் பொழிந்த முத்தமே. - 1.17.29
1077 - ஒருத்தி யாதுசெய்வேன் என அயர்தல்
தோடு அவிழ் கூந்தலாள் ஒருத்தி,தோன்றலோடு
ஊடுகெனோ? உயிர் உருகும் நோய் கெடக்
கூடுகெனோ? அவன் குணங்கள் வீணையில்
பாடுகெனோ?' எனப் பலவும் பன்னினாள். - 1.17.30
1078 - ஒருத்தி ஊடலைப் பாடிக் குறிப்பித்தது
மாடகம் பற்றினள்; மகரம் வீணை தன்
தோடு அவிழ் மலர்க் கரம் சிவப்பத் தொட்டனள்;
பாடினள் ஒருத்தி, தன் பாங்கு உளார்களோடு
ஊடினது உரைசெயாள், உள்ளத்து உள்ளதே. - 1.17.31
1079 - ஒருத்தி கூடற்சுழி இழைத்தல்
குழைத்த பூங்கொம்பு அனாள் ஒருத்தி கூடலை
இழைத்தனள், அது அவள் இட்ட போது எலாம்
பிழைத்தலும், அனங்கவேள் பிழைப்பு இல் அம்பு ஒடும்
உழைத்தனள்; உயிர்த்தனள் உயிர் உண்டு என்னவே. - 1.17.32
1080 - தூதுபோக்கிய ஒருத்தி கணவன் வரக் கதவடைத்தது
பந்து அணி விரலினாள் ஒருத்தி பையுளாள்
சுந்தரன் ஒருவன்பால் தூது போக்கினாள்
வந்தனன் எனக் கடை அடைத்து மாற்றினாள்
சிந்தனை தெரிந்திலம் சிவந்த நாட்டமே. - 1.17.33
1081 - ஒருத்தி, கூடல்விருப்பைக் குறிப்பான் உணர்த்தல்
உய்த்த பூம் பள்ளி இன் ஊடல் நீங்குவான்
சித்தம் உண்டு ஒருத்திக்கு அது அன்பன் தேர்கிலான்
பொய்த்தது ஓர் மூரியால் நிமிர்ந்து போக்குவாள்
எத்தனை இறந்தன கடிகை ஈண்டு என்றாள். - 1.17.34
1082 - ஒருவன் ஊடற்காலத்து உதையால் மயிர் சிலிர்த்தல்
விதைத்த மென் காதலின் வித்து மெய்ந் நிறை
இதைப் புனல் நனைத்திட முளைத்தவே எனப்
பதைத்தனள் ஒருத்தன்மேல் ஒருத்தி பஞ்சு அடி
உதைத்தலும் பொடித்தன உரோம ராசியே. - 1.17.35
1083 - காதலி மெலிந்தமை நோக்கிக் காதலன் பூரித்தல்
பொலிந்த வாள் முகத்தினான் பொங்கித் தன்னையும்
மலிந்த பேர் உவகையான், மாற்று வேந்தரை
நலிந்த வாள் உழவன் ஓர் நங்கை கொங்கை போய்
மெலிந்தவா நோக்கித் தன் புயங்கள் வீங்கினான். - 1.17.36
1084 - ஒருவன் தீந்த தளிர் கண்டு திகைப்படைதல்
ஏய்ந்த பேர் எழிலினான் ஒருவன், எய்தினான்;
வேய்ந்த போல் எங்கணும் அனங்கன் வெம் கணை
பாய்ந்த பூம் பள்ளியில் படுத்த பல்லவம்
தீய்ந்தன நோக்கினான் திகைக்கும் சிந்தையான். - 1.17.37
1085 - கொங்கை பொற்கலசம் போன்றதெனல்
ஊட்டிய சாந்து வெந்து உலரும் வெம்மையான்,
நாட்டினை அளித்தி நீ, என்று நல்லவர்
ஆட்டும் நீர்க் கலசமே என்னல் ஆன ஓர்
வாள் தொழில் மைந்தற்கு ஓர் மங்கை கொங்கையே. - 1.17.38
1086 - கணவன் இருப்பிடம் தேடிச் செல்லும் காரிகையின் இயல்பு
பயிர் உறு கிண்கிணி பரந்த மேகலை,
வயிர வான் பூண் அவை வாங்கி நீக்கினாள்
உயிர் உறு தலைவன்பால் போக உன்னினாள்
செயிர் உறு திங்களைத் தீய நோக்கினாள். - 1.17.39
1087 - மாலையாற் கட்டுண்ட தோளின் மாண்பு
ஏலும் இவ் வன்மையை என் என்று உன்னுதும்;
ஆலை மென் கரும்பு அனான் ஒருவற்கு ஆங்கு ஒரு
சோலை மென் குயில் அனாள் சுற்றி வீக்கிய,
மாலையை நிமிர்ந்தில வயிரத் தோள்களே! - 1.17.40
1088 - ஒருத்தி தூதனுப்ப பாங்கியைக் குறிப்பால் நோக்குதல்
சோர் குழல் ஒருத்தி தன் வருத்தம் சொல்லுவான்
மாரனை நோக்கி ஓர் மாதை நோக்கினாள்
காரிகை இவள் அவள் கருத்தை நோக்கி ஓர்
வேரி அம் தெரியலான் வீடு நோக்கினாள். - 1.17.41
1089 - காதலி, காதலன்வீடு தேடிச் செல்லக் காரணம் யாதெனல்
சினம் கெழு வாள் கை ஓர் செம்மல் பால் ஒரு
கனம் குழை மயில் அனாள் கடிது போயினாள்;
மனம் குழை நறவமோ! மாலைதான்கொலோ!
அனங்கனோ! யார் கொல் ஓ! அழைத்த தூதரே. - 1.17.42
1090 - காதலி கண்ணீர் உகுக்கக் காதலன் வினாதல்
தொகுதரு காதல் கு தோற்ற சீற்றத்து ஓர்
வகிர் மதி நெற்றியாள், மழை கண் ஆலி வந்து,
உகுதலும்,'உற்றது என்' என்று கொற்றவன்,
நகுதலும், நக்கனள்; நாணும் நீங்கினாள். - 1.17.43
1091 - புல்லிய கை புடைபெயரப் புரவலன் வருந்துதல்
பொய்த்தலை மருங்குலாள் ஒருத்தி புல்லிய,
கை தலம் நீக்கினாள்; கருத்தின் நீக்கலள்;
சித்திரம் போன்ற அச்செயல் ஓர் தோன்றற்குச்
சத்திரம் மார்பு இடை தைத்தது ஒத்ததே. - 1.17.44
1092 - நங்கையொருத்தி நாணத்தால் தூதனுப்ப இயலாது விம்முதல்
மெல் இயல் ஒருத்தி, தான் விரும்பும் சேடியைப்
புல்லிய கையினள்,'போதி தூது' எனச்
சொல்லுவான் உறும்; உற நாணும்; சொல்லலள்;
எல்லை இல் பொழுது எலாம் இருந்து விம்மினாள். - 1.17.45
1093 - ஒருத்தி தலைவன்செயலைச் சாற்ற நாணுதல்
ஊறு பேர் அன்பினாள் ஒருத்தி, தன் உயிர்
மாறிலாக் காதலன் செயலை மற்று ஒரு
நாறு பூங் கோதைபால் நவில நாணுவாள்;
வேறு வேறு உறச் சில மொழி விளம்பினாள். - 1.17.46
1094 - காதலர் இருவர் புல்லுதல்
உரு தெரி தன்மைய; உயிரும் ஒன்று தாம்;
அருத்தியும் அ துணை ஆய நீரினார்;
ஒருத்தியும் ஒருத்தனும்,'உடம்பும் ஒன்று என
பொருத்துவர் ஆம்' எனப், புல்லினார் அரோ. - 1.17.47
1095 - காதலி முகம் கவிழ்து நின்ற நிலைகண்டு காதலன் அஞ்சுதல்
வெதிர் பொரு தோளினாள் ஒருத்தி, வேந்தன் வந்து
எதிர்தலும், தன் மனம் எழுந்து முன் செல,
மதி முகம் கதும் என வணங்கினாள்; அது,
புதுமை, ஆதலின், அவற்கு அச்சம் பூத்தது ஏ. - 1.17.48
1096 - தனியே வந்த தோழி தாயை ஒத்தாள் எனல்
துனி வரும் நலம் அத்து ஒடு சோர்கின்றாள்; ஒரு
குனி வரும் நுதலிக்குக் கொழுநன் இன்றியே
தனி வரும் தோழியும், தாயை ஒத்தனள்
இனி வரு தென்றலும் இரவும் என்னவே. - 1.17.49
1097 - உணர்வழிந்த ஒருத்தியின் நிலை
ஆக்கிய காதலாள் ஒருத்தி அந்தியில்
தாக்கிய தெய்வம் உண்டு என்னும் தன்மையள்
நோக்கினாள்; நின்றனள் நுவன்றது ஓர்கிலள்,
போக்கின தூதின் ஓடு உணர்வும் போக்கினாள். - 1.17.50
1098 - கணவன் வரவு நோக்கும் காரிகையின் செயல்
மறப்பிலள், கொழுநனை வரவு நோக்குவாள்;
பிறப்பினொடு இறப்பு எனப் பெயரும் சிந்தையாள்;
துறப்பு அரும் முகில் இடை தோன்றும் மின் எனப்
புறப்படும்; புகும்; ஒரு பூத்த கொம்பு அனாள். - 1.17.51
1099 - அனங்கன்நோய் ஆற்றாத அணங்கு பாங்கியை வாயில் வேண்டல்
எழுதரும் கொங்கை மேல் அனங்கன் எய்த அம்பு
உழுத வெம் புண்களில் வளைக் கை ஒற்றினாள்;
அழுதனள்; சிரித்தனள்; அற்றம் சொல்லினாள்;
தொழுதனள்; ஒருத்தியைத் தூது வேண்டுவாள். - 1.17.52
1100 - ஒருத்தி பிரிவாற்றாமையைத் தோழிக்குக் குறிப்பாலுணர்த்தல்
ஆர்த்தியும் உற்றதும் அறிஞர்க்கு அற்றம்தான்
வார்த்தையின் உணர்த்துதல் மாசு அன்று ஓ! மனம்
வேர்த்தனள்; வெதும்பினள்; மெலிந்து சாய்ந்தனள்;
பார்த்தனள்; ஒருத்தி, தன் பாங்கு அனாளை ஏ. - 1.17.53
1101 - மன்மதனும் மது அருந்துதல்
தனங்களின் இளையவர் தம்மின், மும்மடி
கனம் கனம் இடையிடை களிக்கும் கள்வன் ஆய்,
மனங்களின் நுழைந்து அவர் மாந்து தேறலை
அனங்கனும் அருந்தினான் ஆதல் வேண்டுமால். - 1.17.54
1102 - காதலர் கலவிக்காகக் கலன் கழித்தல்
நறை கமழ் அலங்கல் மாலை நளிர் நறும் குஞ்சி மைந்தர்
துறை அறி கலவிச் செவ்வித் தோகையர் தூசு வீசி
நிறை அகல் அல்குல் புல்கும் கலன் கழித்து அகல நீத்தார்
அறை பறை அனைய நீரார் அரு மறைக்கு ஆவர் ஓ தான். - 1.17.55
1103 - நாணுத் துறவுரைத்தல்
பொன் அரும் கலனும், தூசும்,
புறத்து உள துறத்தல் வம்பு ஏ!
நல் நுதல் ஒருத்தி, தன்பால்
அகத்து உள நாணும் நீத்தாள்;
உன் அரும் துறவு பூண்ட
உணர்வு உடை ஒருவனே போல்,
தன்னையும் துறக்கும் தன்மை
காமம் அத்து ஏ தங்கிற்று அன்று ஏ. - 1.17.56
1104 - வெல்வார் யார்?
பொரு அரும் மதனன் போல்வான்
ஒருவனும், பூவின்மேல் அத்
திருவினுக்கு உவமை சால்வாள்
ஒருத்தியும், சேக்கைப் போரில்
ஒருவருக்கு ஒருவர் தோலார்;
ஒத்தனர்; உயிரும் ஒன்று ஏ;
இருவரது உணர்வும் ஒன்றே;
என்றபோது யாவர் வெல்வார். - 1.17.57
1105 - ஒருத்தி முன்னையிற் புலத்தல்
கொள்ளைப் போர் வாள் கணாள் அங்கு
ஒருத்தி, ஓர் குமரன் அன்னான்
வள்ளத் தார் அகலம் தன்னை
மலர்க் கையால் புதைப்ப நோக்கி
உள்ளத்து ஆர் உயிர் அன்னாள்மேல்
உதை படும் என்று நீ நின்
கள்ளத்தால் புதைத்தி என்னா
முன்னையில் கனன்று மிக்காள். - 1.17.58
1106 - ஒருத்தி தன்னை அரம்பை மாதோ என்று ஐயுறச் செய்தமை
பால் உள பவளச் செவ்வாய்ப்
பணை முலை நிகர்த்த மென் தோள்
வேல் உள நோக்கினாள் ஓர்
மெல் இயல் வேலை அன்ன
மால் உள சிந்தை ஆங்கு ஓர்
மழை உள தட கையான் கு
மேல் உள அரம்பைமாதர்
என்பது ஓர் விருப்பை ஈந்தாள். - 1.17.59
1107 - காதல் வென்றது எனல்
புனத்து உறை மயில் அனாள் கொழுநன் பொய் உரை
நினைத்தனள் சீறுவாள் ஒருத்தி நீடிய
சினத்தொடு காதல்கள் செய்த போர் இடை
மனத்து உறை காதலே வாகை கொண்டது ஏ. - 1.17.60
1108 - காரிகை ஒருத்தி கணவன் முதுகை நோக்கல்
கொலை உரு அமைந்து எனக் கொடிய நாட்டத்து ஓர்
கலை உருவு அல்குலாள், கணவன் புல்குவாள்
சிலை உரு அழிதரச் செறிந்த மார்பில் தன்
முலை உருவின என முதுகை நோக்கினாள். - 1.17.61
1109 - கலவியின் விளைவு
குங்குமம் உதிர்ந்தன; கோதை சோர்ந்தன;
சங்கினம் முரன்றன; கலையும் சாறின;
பொங்கின சிலம்புகள் பூசல் இட்டன;
மங்கையர் இள நலம் மைந்தர் உண்ணவே. - 1.17.62
1110 - காரிகை ஒருத்தி கனவென்ற பெயராற் காதலற் புல்லுதல்
துனி உறு புலவியைக் காதல் சூழ் சுடர்
பனி எனத் துடைத்தலும் பதைக்கும் சிந்தையாள்
புனை இழை ஒரு மயில் பொய் உறங்குவாள்
கனவு எனும் சலத்தினால் கணவன் புல்லினாள். - 1.17.63
1111 - காதலர் புல்லிக் கிடந்தமை
வட்ட வாள் முகத்து ஒரு மயிலும், மன்னனும்,
கிட்டிய போது உடல் கிடைக்கப் புல்லினார்;
விட்டிலர்; கங்குலின் விடிவு கண்டிலர்
ஒட்டிய உடல் பிரிப்பு உணர்கிலாமையால். - 1.17.64
1112 - கங்குற்போது கலவியாற் கழிந்தமை
அரும் களி மால் களிறு அனைய வீரர்க்கும்
கரும் குழல் மகளிர்க்கும் கலவிப் பூசலால்
நெருங்கிய வன முலை சுமக்க நேர்கலா
மருங்குல் போல் தேய்ந்தது அ மாலைக் கங்குலே. - 1.17.65
1113 - மதியம் மறைதலும் இரவி எழுதலும்
கடை உற நல் நெறி காண்கிலாதவர் கு
இடை உறு திரு என இந்து நந்தினான்;
படர் திரைக் கரும் கடல் பரமன் மார்பு இடை
சுடர் மணிக்கு அரசு என இரவி தோன்றினான். - 1.17.66
1.18. எதிர்கொள் படலம் (1114- 1147)
அடா நெறி அறைதல் செய்யா,
அரு மறை அமைந்த நீதி
விடா நெறிப் புலமைச் செம் கோல்
வெண் குடை வேந்தர் வேந்தன்,
படாம் முக மலையில், தோன்றிப்
பருவம் ஒத்து அருவி பல்கும்,
கடாம் நிறை ஆறு பாயும்
கடலொடும் கங்கை சேர்ந்தான். - 1.18.1
1115 - சேனை கங்கைநீரைப் பருகுதல்
கப்பு உடை நாவின் நாகர் உலகமும்
கண்ணில் தோன்றத்
துப்பு உடை மணலிற்று ஆகிக்
கங்கைநீர் சுருங்கிக் காட்ட,
அப்பு உடை அனீக வேலை
அகன் புனல் முகந்து மாந்த,
உப்பு உடைக் கடலும் தெள் நீர்
உண் நசை உற்றது அன்றே. - 1.18.2
1116 - தயரதன் மிதிலையை அணுகுதல்
ஆண்டு நின்று எழுந்து போகி,
அகன் பணை மிதிலை என்னும்,
ஈண்டு நீர் நகரின் பாங்கர்
இரு நிலக் கிழவன் எய்தத்
தாண்டும் மாப் புரவித் தானைத்
தண் அளிச் சனகன் என்னும்,
தூண் தரு வயிரத் தோளான்
செய்தது சொல்லல் உற்றாம். - 1.18.3
1117 - சனகன் தயரதனை வரவேற்க எழுதல்
வந்தனன் அரசன் என்ன
மனத்து எழும் உவகை பொங்கக்,
கந்து அடு களிறும் தேரும்
கலின மாக் கடலும் சூழச்,
சந்திரன் இரவிதன்னைச்
சார்வது ஓர் தன்மை தோன்ற,
இந்திர திருவன் தன்னை
எதிர்கொள்வான் எழுந்து சென்றான். - 1.18.4
1118 - மிதிலை மாந்தரும் உடன்வருதல்
கங்கை நீர் நாடன் சேனை,
மற்று உள கடல்கள் எல்லாம்
சங்கு இனம் ஆர்ப்ப வந்து
சார்வன போலச் சாரப்,
பங்கயத்து அணங்கைத் தந்த
பால் கடல் வருவது ஏ போல்,
மங்கையைப் பயந்த மன்னன்
வளம் நகர் வந்தது அன்றே. - 1.18.5
1119 - சனகன் படை வருணனை
இலை குலாவு அயிலினான் அனிகம், ஏழ் என உலாம்
நிலை குலாம் மகர நீர் நெடிய மா கடல் எலாம்,
அலகு இல் மால் களிறு தேர் புரவி ஆள் என விராய்,
உலகு எலாம் நிமிர்வதே பொருவும் ஓர் உவமை ஏ. - 1.18.6
1120 - சேனை தாமரைக் குளத்தை ஒத்தமை
தொங்கல் வெண் குடை தொகைப் பிச்சம் உட்பட விராய்,
எங்கும் விண் புதைதரப், பகல் மறைந்து இருள் எழப்,
பங்கயம் செய்யவும் வெளியவும் பல படத்
தங்கு தாமரை உடைத் தானமே போலும் ஏ. - 1.18.7
1121 - எங்கும் திருமகளின் விளக்கம்
கொடி உளாள் ஓ? தனிக் குடை உளாள் ஓ? குலப்
படி உளாள் ஓ? கடல் படை உளாளோ? பகர்
மடி இலா அரசன் மார்பினில் உளாளோ? வளர்
முடி உளாளோ? தெரிந்து உணர்கிலாம், முளரியாள். - 1.18.8
1122 - பலவகை ஒலி எழுதல்
வார் முகம் கெழுவு கொங்கையர் கருங் குழலின் வண்டு
ஏர் முழங்கு அரவம், ஏழ் இசை முழங்கு அரவம் ஏ;
தேர் முழங்கு அரவம், வெண் திரை முழங்கு அரவம் ஏ;
கார் முழங்கு அரவம், வெம் கரி முழங்கு அரவம் ஏ. - 1.18.9
1123 - சேனை எழுப்பிய தூளி
சூழும் மா கடல்களும் திடர் படத் துகள் பரந்து,
ஏழு பார் அகமும் உற்று உளது எனற்கு எளிது அரோ?
ஆழியான் உலகு அளந்த அன்று தாள் சென்ற அப்
பூழை ஊடு ஏ பொடித்து அப்புறம் போயது ஏ. - 1.18.10
1124 - குடைகளும் அணிகலங்களும்
மன் நெடுங்குடை மிடைந்து அடைய, வான் மறைதரத்,
துன்னிடும் நிழல் வழங்கு இருள் துரப்பு எளிது அரோ?
பொன் இடும், புவி இடும், புனை மணிக் கலன் எலாம்,
மின் இடும், வில் இடும், வெயில் இடும், நிலவு இடும். - 1.18.11
1125 - சனகன் எதிர்கொளவரும் வழியின் காட்சி
தா இல் மன்னவர் பிரான் வர, முரண் சனகன் ஆம்
ஏ வரும் சிலையினான் எதிர் வரும் நெறி எலாம்,
தூவு தண் சுண்ணமும், கனக நுண் தூளியும்,
பூவின் மென் தாது உகும் பொடியுமே, பொடி எலாம். - 1.18.12
1126 - வழியிற் படர்ந்த சேற்றின் தன்மை
நறு விரைத் தேனும், நானமும், நறும் குங்குமச்
செறி அகில் தேய்வையும், மான் மதம் அத்து எக்கரும்,
வெறி உடைக் கலவையும், விரவு செம் சாந்தம் உம்,
செறி மதக் கலுழி பாய் சேறுமே, சேறு எலாம். - 1.18.13
1127 - நிழல்களின் தன்மை
மன்றல் அம் கோதையார், மணியினும் பொன்னினும்,
சென்று வந்து உலவும், அச் சிதைவு இலா நிழலின் நேர்
வென்ற திண் கொடி ஒடும் நெடு விதானமும் விராய்
நின்ற, வெண் குடைகளின் நிழலுமே நிழல் எலாம். - 1.18.14
1128 - இருவர் சேனையும் சந்தித்தல்
மாறு இலா மதுகையான் வரு பெரும் தானை மேல்,
ஊறு பேர் உவகையான் அனிகம் வந்து உற்ற போது,
ஈறு இல் ஓதை இன் ஒடு உம் எறி திரைப் பரவை மேல்,
ஆறு பாய்கின்றது ஓர் அமலை போல் ஆனது ஏ. - 1.18.15
1129 - தயரதனைக் காணச் சனகன் வருதல்
கந்தை ஏ பொரு கரிச் சனகனும், காதலோடு
உந்த, ஓத அரியது ஓர் தன்மை ஓடு, உலகு உளோர்
தந்தையே அனைய அத் தகவினான் முன்பு, தன்
சிந்தையே பொரு நெடும் தேரின் வந்து எய்தினான். - 1.18.16
1130 - தயரதன் சனகனைத் தழுவுதல்
எய்த, அத் திரு நெடும் தேர் இழிந்து, இனைய தன்
மொய் கொள் திண் சேனை பின் நிற்க, முன் சேறலும்,
கையின் வந்து ஏறு எனக் கடிதின் வந்து ஏறினான்;
ஐயனும் முகம் மலர்ந்து அகம் உறத் தழுவினான். - 1.18.17
1131 - இருவரும் அளவளாவிச் செல்லுதல்
தழுவிநின்று, அவன் இரும் கிளையையும் தமரையும்
வழுவில் சிந்தனை இனான், வரிசையின் அளவளாய்,
'எழுக முந்து உற' எனா, இனிது உவந்து எய்தினான்
உழுவை முந்து அரி அனான், எவரினும் உயரினான். - 1.18.18
1132 - இராமன் தயரதனை எதிர்கொள்ள வருதல்
இன்ன ஆறு, இருவரும் இனிய ஆறு ஏக, அத்
துன்னும் மா நகரில் நின்று எதிர் வரத் துன்னினான்;
தன்னையே அனையவன், தழலையே அனையவன்,
பொன்னின் வார் சிலை இறப் புயம் நிமிர்ந்து அருளினான். - 1.18.19
1133 - இராமன் எதிர்கொண்ட வகை
தம்பியும் தானும் அத் தானை மன்னவன் நகர்ப்,
பம்பு திண் புரவியும் படைஞரும் புடை வரச்,
செம் பொனின் பசு மணித் தேரின் வந்து எய்தினான்;
உம்பரும் இம்பரும் உரகரும் தொழ உளான். - 1.18.20
1134 - இருவருடன் வந்த சேனையின் பெருக்கம்
யானையோ பிடிகளோ இரதமோ இவுளியோ,
ஆன பேர் உறை இலா நிறைவை யார் அறிகுவார்?
தானை ஏர் சனகன் ஏவலின், நெடும் தாதை முன்,
போன பேர் இருவர் தம் புடை வரும் படையினே. - 1.18.21
1135 - இராமன் தந்தையை அணுகுதல்
காவியும் குவளையும் கடி கொள் காயாவும் ஒத்து,
ஓவியம் சுவை கெடப் பொலிவது ஓர் உரு ஒடு ஏ,
தேவரும் தொழு கழல் சிறுவன், முன் பிரிவது ஓர்
ஆவி வந்தது என்ன வந்து, அரசன் மாடு அணுகினான். - 1.18.22
1136 - இராமன் தயரதனை வணங்குதல்
அனிகம் வந்து அடி தொழக் கடிது சென்று, அரசர் கோன்
இனிய பைங் கழல் பணிந்து எழுதலும், தழுவினான்;
மனு எனும் தகையன் மார்பு இடை மறைந்தன, மலைத்
தனி நெடும் சிலை இறத் தவழ் தடம் கிரிகளே. - 1.18.23
1137 - இலக்குவன் தந்தையை வணங்குதல்
இளைய பைங் குரிசில் வந்து அடி பணிந்து எழுதலும்,
தளை வரும் தொடையல் மார்பு உற, உறத் தழுவினான்;
களைவு அரும் துயர் அறக், ககனம் எண் திசை எலாம்
விளைதரும் புகழினான், எவரினும் மிகுதியான். - 1.18.24
1138 - இராமன் பணியத் தாயர் மகிழ்தல்
கற்றை வார் சடையினான் கைக் கொளும் தனு இறக்,
கொற்றம் நீள் புயம் நிமிர்த்து அருளும் அக் குரிசில், பின்
பெற்ற தாயரையும் அப் பெற்றியில் தொழுது எழுந்து
உற்ற போது, அவர் மனத்து உவகை யார் உரைசெய்வார். - 1.18.25
1139 - பரதன் இராமனை வணங்குதல்
உன்னு பேர் அன்பு மிக்கு ஒழுகி, ஒத்து, ஒண் கண் நீர்
பன்னு தாரைகள் தரத் தொழுது எழும் பரதனைப்
பொன்னின் மார்பு உற அணைத்து உயிர் உறப் புல்லினான்,
தன்னை அத் தாதை முன் தழுவினால் என்னவே. - 1.18.26
1140 - இலக்குமண சத்துருக்கனர் முறையே பரதனையும்
இராமனையும் வணங்குதல்
கரியவன் பின்பு சென்றவன், அரும் காதலில்
பெரியவன் தம்பி, என்று, இனையது ஓர் பெருமை அப்
பொருவு அரும் குமரர், தம் புனை நறும் குஞ்சியால்,
இருவர் பைங் கழலும் வந்து இருவரும் வருடினார். - 1.18.27
1141 - குமரர் நால்வரின் சிறப்பு
கோல் வரும் செம்மையும் குடை வரும் தண்மையும்
சால் வரும் செல்வம் என்று உணர் பெருந் தாதை தன்,
மேல் வரும் தன்மையால், மிக விளங்கினர்கள் தாம்,
நால்வர் உம் பொருவு இல் நான்மறை எனும் நடையினார். - 1.18.28
1142 - சேனைகளை நடத்திக்கொண்டு செல்லுமாறு
தயரதன் இராமனிடம் கூறல்
சான்று எனத் தகைய செம் கோலினான், உயிர்கள்தாம்
ஈன்ற நல் தாய் எனக் கருது பேர் அருளினான்,
ஆன்ற இச் செல்வம் இத்தனையும் மொய்த்து அருகு உறத்,
தோன்றலைக்'கொண்டு முன் செல்க' என சொல்லினான். - 1.18.29
1143 - அப்போது சேனை அடைந்த மகிழ்ச்சி
காதலோ அறிகிலம், கரிகளைப் பொருவினார்
தீது இலா உவகையும் சிறிது அரோ, பெரிது அரோ,
கோதை சூழ் குஞ்சி அக் குமரர் வந்து எய்தலும்,
தாதையோடு ஒத்தது அத் தானையின் தன்மை ஏ. - 1.18.30
1144 - இராமன் தேர்மீதேறிச் செல்லுதல்
தொழுது இரண்டு அருகும் அன்பு உடைய தம்பியர் தொடர்ந்து,
அழிவு இல் சிந்தையின் உகந்து ஆடல் மா மிசை வரத்,
தழுவு சங்குடன் நெடும் பணை தழங்கிட எழுந்து,
எழுத அரும் தகையது ஓர் தேரின் மேல் ஏகினான். - 1.18.31
1145 - இராமன் மிதிலைநகர் வீதியிற் சேறல்
பஞ்சி சூழ் மெல் அடிப் பாவைமார் பண்ணையின்,
மஞ்சு சூழ் நெடிய மாளிகையின் வந்து, இடை விராய்,
நஞ்சு சூழ் விழிகள், பூ மழையின் மேல் விழ, நடந்து,
இஞ்சி சூழ் மிதிலை மா வீதி சென்று எய்தினான். - 1.18.32
1146 - மாளிகைகளின் வருணனை
சூடகம் துயல்வரக் கோதை சோர்தர மலர்ப்
பாடகம் பரதம் நூல் பகர, வெம் கடம் கரி
கோடு அரங்கு இட, எழும், குவி தடம் கொங்கையார்,
ஆடு அரங்கு அல்லவே அணி அரங்கு அயல் எலாம். - 1.18.33
1147 - வீதிவாய் மகளிர் அடைந்த நிலை
பேதைமார் முதல் கடைப் பேரிளம்பெண்கள் தாம்
ஏதியார் மாரவேள் ஏவ வந்து எய்தினார்,
ஆதி வானவர் பிரான் அணுகலால் அணி கொள் கார்
ஓதியார், வீதி வாய் உற்ற ஆறு உரை செய்வாம். - 1.18.34
1.19. உலாவியற் படலம் (1148 - 1201)
1148 - வீதியில் மகளிர் வந்து கூடிய தன்மை ((1148-1152))
மான் இனம் வருவ போன்றும், மயில் இனம் திரிவ போன்றும்,
மீன் இனம் மிளிர்வ போன்றும், மின் இனம் மிடைவ போன்றும்,
தேன் இனம் சிலம்பி ஆர்ப்பச், சிலம்பு இனம் புலம்ப, எங்கும்,
பூநனை கூந்தல் மாதர் பொம்மெனப் புகுந்து மொய்த்தார். - 1.19.1
1149 - விரிந்து வீழ் கூந்தல் பாரார், மேகலை அற்ற நோக்கார்,
சரிந்த பூம் துகில்கள் தாங்கார், இடை தடுமாறத் தாழார்,
நெருங்கினர், நெருங்கிப் புக்கு,'நீங்குமின்! நீங்குமின்!' என்று
அரும் கலம் அனைய மாதர் தேன் நுகர் அளியின் மொய்த்தார். - 1.19.2
1150 - 'கண்ணினால் காதல் என்னும்
பொருளையே காண்கின்றோம் ! இப்
பெண்ணின் நீர்மையினால் எய்தும்
பயன் இன்று பெறுதும்!' என்பார்,
மண்ணின் நீர் உலர்ந்து வானம்
மழை அற வறந்த காலம் அத்து
உண்ணும் நீர் கண்டு வீழும்
உழைக் குலம் பலவும் ஒத்தார். - 1.19.3
1151 - பள்ளம் அத்து பாயும் நல் நீர்
அனையவர் பானல் பூத்த
வெள்ளம் அத்து பெரிய கண்ணார்
மென் சிலம்பு அலம்ப மென் பூத்
தள்ளத் தம் இடைகள் நோவத்
தமை வலித்து அவன்பால் செல்லும்
'உள்ளம் அத்து ஐ பிடித்தும் நாம்!'
என்று ஓடுகின்றாரும் ஒத்தார். - 1.19.4
1152 - அரத்தம் உண்டு அனைய மேனி
அகலிகைக்கு அளித்த தாளும்,
விரைக் கரும் குழவி கு ஆக
வில் இற நிமிர்ந்து வீங்கும்
வரைத் தடம் தோளும் காண,
மறுகினின் வீழும் மாதர்,
இரைத்து வந்து அமிழ்தின் மொய்க்கும்
ஈ இனம் என்னல் ஆனர். - 1.19.5
1153 - கண்ணன் என்னும் பெயர்
வீதி வாய்ச் செல்கின்றான் போல்,
விழித்து இமையாது நின்ற
மாதரார் கண்கள் ஊடே
வாவும் மான் தேரில் செல்வான்,
யாதினும் உயர்ந்தோர் தன்னை
யாவர்க்கும் கண்ணன் என்றே
ஓதிய பெயர்க்குத் தானே
உறு பொருள் உணர்த்தி விட்டான். - 1.19.6
1154 - இராமனைக் கண்கடவாது காத்த காரிகை
'எண் கடந்து அலகு இலாது இன்று
ஏகுறும் இவன் தேர்,' என்று,
பெண்கள் தம் தம்மில் நொந்து
பேதுறு கின்ற காலை,
மண் கடந்து அமரர் வைகும்
வான் கடந்தானைத் தான் தன்
கண் கடவாது காத்த
காரிகை பெரியளே காண்! - 1.19.7
1155 - ஒரு தெரிவை எல்லாவற்றையும் உகுத்து நிற்றல்
பயிர், ஒன்று கலையும், சங்கும்,
பழிப்பு அறு நலனும், பண்பும்,
செயிர் இன்றி அலர்ந்த பொற்பும்,
சிந்தையும், உணர்வும், தேசும்,
வயிரம் செய் பூணும், நாணும்,
மடனும், தன் நிறையும், மற்றும்,
உயிர் ஒன்றும் ஒழிய, எல்லாம்
உகுத்து ஒரு தெரிவை நின்றாள். - 1.19.8
1156 - காமன் சரங்களால் ஒருத்தி வருந்துதல்
குழை உறா மிளிரும் கெண்டை
கொண்டலின் ஆலி சிந்தத்,
தழை உறாக் கரும்பின் சாபத்து
அனங்கன் வேள் சரங்கள் பாய,
இழை உறாப் புண் அறாத
இள முலை ஒருத்தி, சோர்ந்து,
மழை உறா மின்னின் அன்ன
மருங்குல் போல், நுடங்கி நின்றாள். - 1.19.9
1157 - இராமன் நிறமும் மகளிர் கண்ணின் கருமையும்
பஞ்சு இவர் விரலினார் தம்
படை நெடும் கண்கள் எல்லாம்
செஞ்செவே ஐயன் மெய்யில்
கருமையைச் சேர்ந்த ஓ தாம்?
மஞ்சு அன மேனியான் தன்
மணி நிறம் மாதரார் தம்
அஞ்சன நோக்கம் போக்க
இருண்டது ஓ? அறிகிலேம், ஆல். - 1.19.10
1158 - ஒருத்தி மன்மதனை நொந்து கூறல்
மாந்தளிர் மேனியாள் ஓர்
வாள் நுதல் மதனன் எங்கும்
பூம் துணர் வாளி மாரி
பொழிகின்ற பூசல் நோக்கி,
'வேந்தர் கோன் ஆணை நோக்கான்,
வீரன் வில் ஆண்மை பாரான்,
ஏந்து இழையாரை எய்வான்
யாவன் ஓ ஒருவன்?' என்றாள். - 1.19.11
1159 - ஒருத்தி துகில் ஒன்றை மட்டும் தாங்குதல்
சொல் நலம் கடந்த காமச்
சுவையை ஓர் உருவம் ஆக்கி,
இன் நலம் தெரிய வல்லார்
எழுதியது என்ன நின்றாள்;
பொன்னையும் பொருவும் நீராள்,
புனைந்தன எல்லாம் போகத்,
தன்னையும் தாங்க அலாதாள்,
துகில் ஒன்றும் தாங்கி நின்றாள். - 1.19.12
1160 - ஒருத்தி இராமன் தமியனோ எனல்
வில் தங்கு புருவம் நெற்றி
வெயர் வரப், பசலை விம்மச்,
சுற்று எங்கும் எறிப்ப, உள்ளம்
சோர, ஓர் தோகை நின்றாள்,
கொற்றம் செய் கொலை வேல் என்னக்
கூற்று எனக் கொடிய கண்ணாள்,
மற்று ஒன்றும் காண்கிலாதாள்'தமியனோ
வள்ளல்?' என்றாள். - 1.19.13
1161 - ஒருத்தி கண்களை அடைத்து அமளியை நாடுதல்
மைக் கரும் கூந்தல் செம் வாய்
வாள் நுதல் ஒருத்தி உள்ளம்
நெக்கனள் உருகு கின்றாள்,
'நெஞ்சு இடை வஞ்சன் வந்து
புக்கனன், போகாவண்ணம்,
கண் எனும் புலம் கொள் வாயும்
சிக்கென அடைத்தேன், தோழி!
சேருதும் அமளி' என்றாள். - 1.19.14
1162 - ஒருத்தி இராமனைக் காணும் பிறரைச் சினத்தல்
தாக்கு அணங்கு அனைய மேனி
தைத்த வேள் சரங்கள் பாராள்,
வீக்கிய கலனும் தூசும்
வேறு வேறு ஆனது ஓராள்,
ஆக்கிய பாவை அன்னாள்
ஒருத்தி, ஆண்டு அமலன் மேனி
நோக்கு உறுவாரை எல்லாம்,
எரி எழ, நோக்குகின்றாள். - 1.19.15
1163 - ஒருத்தி வெதுப்பொடு போதல்
களிப்பன, மதர்ப்ப, நீண்டு
கதுப்பினை அளப்ப, கள்ளம்
ஒளிப்பன, வெளிப்பட்டு ஓடப்
பார்ப்பன, சிவப்பு உள் ஊற
வெளிர்ப்பன, கறுப்ப ஆன
வேல் கணாள் ஒருத்தி உள்ளம்
குளிர்ப்பொடு காண வந்தாள்,
வெதுப்பொடும் கோயில் புக்காள். - 1.19.16
1164 - ஒருத்தி பெண்கள் இடைகளின் வெளிகளூடே பார்த்தல்
கருங்குழல் பாரம் வார் கொள்
கன முலை, கலை சூழ் அல்குல்,
நெருங்கின மறைப்ப, ஆண்டு ஓர்
நீக்கு இடம் பெறாது, விம்மும்
பெரும் தடம் கண்ணி, காணும்
பேர் எழில் ஆசை தூண்ட,
மருங்குலின் வெளிகள் ஊடே,
வள்ளலை நோக்குகின்றாள். - 1.19.17
1165 - வீதிகளின் தன்மை
வரிந்த வாள் அனங்கன் வாளி
மனம் கழன்றனவும், மாதர்
எரிந்த பூண் இனமும், கொங்கை
வெயர்த்த போது இழிந்த சாந்தும்,
சரிந்த மேகலையும், முத்தும்,
சங்கமும், தாழ்ந்த கூந்தல்
விரிந்த பூந் தொடையும் அன்றி,
வெள் இடை அரிது அவ் வீதி. - 1.19.18
1166 - இராமனது முழுவடிவை எவரும் கண்டிலர் என்றல்
தோள் கண்டார் தோளே கண்டார்;
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும் அஃதே;
வாள் கண்ட கண்ணார் யாரே
வடிவு இன் ஐ முடியக் கண்டார்?
ஊழ் கண்ட சமயம் அத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார். - 1.19.19
1167 - ஒருத்தி தன் உள்ளம் அத்து இராமனை ஒடுக்குதல்
தையல் சிற்று இடையாள் ஒரு தாழ் குழல்
உய்ய, மற்று, அவள் உள்ளத்து ஒடுங்கினான்;
வையம், முற்றும் வயிற்றின் அடக்கிய
ஐயனில் பெரியார் இனி யாவர் ஏ? - 1.19.20
1168 - ஒருத்தி தோழியர் கைத்தாங்கலிற் செல்லுதல்
அலம்பு பாரக் குழலி, ஓர் ஆய் இழை,
சிலம்பும் மேகலையும் ஒலி செய்திட
நலம் பெய் கொம்பின் நடந்து வந்து எய்தினாள்,
புலம்பு சேடியர் கை மிசைப் போயினாள். - 1.19.21
1169 - ஒருத்தி இராமனைக் கரும்பு வில் ஒடிக்க வேண்டுதல்
அருப்பு மெல் முலையாள், அங்கு, ஓர் ஆய் இழை,
'இருப்பு நெஞ்சினை ஏனும், ஓர் ஏழைக்கு ஆப்
பொருப்பு வில்லைப் பொடி செய்த புண்ணியா!
கருப்பு வில் இறுத்து ஆள் கொண்டு கா!' என்றாள். - 1.19.22
1170 - ஒருத்தி இராமனைத் தேரிலன்றிக் கண்ணெதிரே காண்டல்
மை தவழ்ந்த கருங்கண் ஒர் வாள் நுதல்,
'செய் தவன் தனித் தேர் மிசைச் சேறல் விட்டு,
எய்த வந்து, எதிர் நின்றமைதான் இது,
கைதவம் கொல்? கனவு கொல்? ஓ' என்றாள். - 1.19.23
1171 - ஒருத்தி சீதையின் தவத்தை நினைந்து சோர்தல்
மாது ஒருத்தி மனத்தினை அல்லது ஓர்
தூது பெற்றிலள் இன் உயிர் சோர்கின்றாள்
'போது அரிக் கண் பொலன் குழைப் பூண் முலைச்
சீதை எத் தவம் செய்தனள் ஓ?' என்றாள். - 1.19.24
1172 - மன்மதனால் இராமனை எழுதலாமோ எனல்
பழுது இலா ஒரு பாவை அன்னாள் பதைத்து
அழுது வெய்து உயிர்த்து, அன்பு உடைத் தோழியைத்
தொழுது சோர்ந்து அயர்வாள்' இந்தத் தோன்றலை
எழுதல் ஆகும் கொல் மன்மதனால்?' என்றாள். - 1.19.25
1173 - ஒருத்தி இராமன் கண்ணனே எனல்
வண்ண வாய் ஒரு வாள் நுதல்,'மானிடற்கு
எண்ணுங்கால், இவ் இலக்கணம் எய்திட
ஒண்ணுமோ? இது உணர்த்துகின்றேன், இவன்
கண்ணனே! இது கண்டிரும் பின்!' என்றாள். - 1.19.26
1174 - ஒருத்தி இராமன் மிதிலை வருதல் சனகன் தவம் எனல்
கனக நூபுரம் கை வளையோடு உக,
மனன் நெகும்படி வாடி, ஒர் வாள் நுதல்,
'அனகன் இந் நகர் எய்தியது, ஆதியில்
சனகன் செய்த தவப் பயனால்!' என்றாள். - 1.19.27
1175 - ஒருத்தி' கனவில் இராமன் தனி வருமோ' எனல்
நனி வருந்தி, நலம் குடி போயிட,
பனி வரும் கண் ஒர் பசுமை இழை அல்குலாள்,
'முனிவரும் குல மன்னரும் மொய்ப்பு அறத்,
தனி வரும் கொல் கனவின் தலை? என்றாள். - 1.19.28
1176 - முகக் குறிகளால் ஒருத்தி காதல் புலப்படுதல்
புனம் கொள் கார் மயில் போலும் ஒர் பொன் கொடி,
மனம் கொள் காதல் மறைத்தலை எண்ணினாள் ;
அனங்கள் வேள் அது அறிந்தனன்; அற்றம் தான்,
மனங்கள் போல முகமும் மறைக்கும் ஏ? - 1.19.29
1177 - ஒருத்தி பூவணையில் நெட்டுயிர்த்தல்
இணை நெடும் கண் ஒர் இந்து முகத்தி, பூ
அணை அணைந்து இடி உண்ட அரா, எனப்,
புணர் நலம் கிளர் கொங்கை புழுங்கிட,
உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே. - 1.19.30
1178 - கவிக் கூற்று
ஆம்பல் ஒத்து அமுது ஊறு செவ் வாய்ச்சியர்
தாம் பதைத்து உயிர் உள் தடுமாறுவார்:
தேம்பு சிற்றிடைச் சீதையைப் போல் சிறிது
ஏம்பல் பெற்றிலர் எங்ஙனம் உய்வரே? - 1.19.31
1179 - 'ஒருத்தி' இராமன் உள்ளன்பிலாதவனோ ?' எனல்
வேர்த்து மேனி தளர்ந்து, உயிர் விம்மலோடு,
'ஆர்த்தி உற்ற மடந்தையர் ஆரையும்,
தீர்த்தன் இத்தனை சிந்தையில் செம் கண் இல்
பார்த்திலான், உள் பரிவு இலன் ஏ?' என்றாள். - 1.19.32
1180 - மன்மதன் உடைவாளினும் கை வைத்தல்
வையம் பற்றிய மங்கையர் எண் இலர்;
ஐயன் பொற்புக்கு அளவு இலை; ஆதலால்,
எய்யும் பொன் சிலை மாரனும் என்செய்வான்?
கை அம்பு அற்று, உடைவாளினும் கை வைத்தான். - 1.19.33
1181 - வான நாடியரும் இராமனைக் காதலித்தல்
நான வார் குழல் நாரியர் ஓடு அலால்,
வேனல் வேளொடு மேல் உறைவார்கள் ஓடு
ஆன பூசல் அறிந்திலம்; அம்பு போய்
வான நாடியர் மார்பினும் தைத்த ஏ. - 1.19.34
1182 - ஒருத்தி இராமனைப் படுகொலையான் எனல்
'மருள் மயங்கும் மடந்தையர் மாட்டு ஒரு
பொருள் நயந்திலன் போகின்றதே? இவன்
கருணை என்பது கண்டு அறியான், பெரும்
பருணிதன் கொல்? படுகொலையான்!' என்றாள். - 1.19.35
1183 - ஒருத்தி தளர்ந்து ஓய்தல்
தொய்யில் வெய்ய முலைத், துடி போல் இடை
நையும் நொய்ய மருங்குல், ஒர் நங்கைதான்,
கையும் மெய்யும் அறிந்திலள், கண்டவர்,
'உய்யும்? உய்யும்?' எனத், தளர்ந்து ஓய்வு உற்றாள். - 1.19.36
1184 - ஒருத்தி இராமன் தேரின்பின் போவதும் வருவதுமாயிருத்தல்
பூக ஊசல் புரிபவர் போல், ஒரு
பாகு போல் மொழியாள், மலர்ப் பாதங்கள்
சேகு சேர்தரச், சேவகன் தேரின் பின்
ஏகும், மீளும்; இது என் செய்த ஆறு, அரோ? - 1.19.37
1185 - ஒருத்தி நாணிழந்து பேசுதல்
பெருத்த காதலில் பேது உறும் மாதரின்,
ஒருத்தி மற்று அங்கு ஒருத்தியை நோக்கி,'என்
கருத்தும் அவ் வழிக் கண்டது உண்டோ?' என்றாள்;
அருத்தி உற்ற பின் நாணம் உண்டாகுமோ? - 1.19.38
1186 - ஒருத்தி இராமனுக்குள்ள கொடுமையைக் கூறல்
நங்கை அங்கு ஒரு பொன்,'நயந்தார் உயத்
தங்கள் இன் உயிரும் கொடுத்தார் தமர்;
எங்கள் இன் உயிர் எங்களுக்கு ஈகலா
வெம் கண் என்கண் விளைந்தது இவற்கு?' என்றாள். - 1.19.39
1187 - ஒருத்தி இராமன் காமமற்றவன் எனல்
நாமத்தால் அழிவாள் ஒரு நல் நுதல்,
'சேமம் அத்து ஆர் வில் இறுத்தது, தேருங்கால்,
தூமம் அத்து ஆர் குழல் தூ மொழித் தோகைபால்
காமத்தால் அன்று, கல்வியினால்' என்றாள். - 1.19.40
1188 - ஒருத்தி மாரனின் வன்மையைக் கூறல்
ஆரமும், துகிலும், கலன் யாவையும்,
சோர இன் உயிர் சோரும் ஒர் சோர் குழல்,
'கோர வில்லி முனே எனைக் கொல்கின்ற
மாரவேளின் வலியவர் யார்?' என்றாள். - 1.19.41
1189 - இராமன் மண்டபம் அடைதல்
மாதர் இன்னணம் மொய்த்திட, வள்ளல் போய்க்,
கோது இல் சிந்தை வசிட்டனும், கோசிக
வேத பாரனும் மேவிய மண்டபம்,
ஏதி மன்னர் குழாம் அத்து ஒடும் எய்தினான். - 1.19.42
1190 - வசிட்டனையும் கோசிகனையும் இராமன் வணங்குதல்
திருவின் நாயகன், மின் திரிந்தால் எனத்
துருவு இன் மா மணி ஆரம் துயல்வரப்,
பருவ மேகம் படிந்தது போல், படிந்து,
இருவர் தாளும் முறையின் இறைஞ்சினான். - 1.19.43
1191 - இராமன் இருக்கையில் அமர்தல்
இறைஞ்ச, அன்னவர் ஏத்தினர் ஏவ, ஓர்
நிறைஞ்ச பூம் தவிசு ஏறி, நிழற்கள் போல்
புறம் செய் தம்பியருள் பொலிந்தான், அரோ,
அறம் செய் காவற்கு அயோத்தியில் தோன்றினான். - 1.19.44
1192 - தசரதனும் வருதல்
ஆன மா மணி மண்டபம் அன்னது
தானை மன்னன் தமரொடும் சார்ந்தனன்,
மீன் எலாம் தன பின் வர, வெண் மதி
வான் நிலா உற வந்தது மானவே. - 1.19.45
1193 - தசரதன் இருக்கையில் அமர்தல்
வந்து மாதவர் பாதம் வணங்கி, மேல்
சிந்து தேம் மலர் மாரி சிறந்திட,
அந்தணாளர்கள் ஆசியொடு, ஆசனம்,
இந்திரன் முகம் நாண் உற, ஏறினான். - 1.19.46
1194 - பல நாட்டு மன்னர்களும் வருதல் ((1194-1196))
கங்கர், கொங்கர், கலிங்கர், குலிங்கர்கள்,
சிங்கள அதிபர், சேரலர், தென்னவர்,
அங்கராசர், குலிந்தர், அவந்திகர்,
வங்கர், மாளவர், சோழர், மராடரே. - 1.19.47
1195 - மான மாகதர், மச்சர், மிலேச்சர்கள்,
ஏனை வீர இலாடர், விதர்ப்பர்கள்,
சீனர், தெங்கணர், செம்சகர், சோமகர்,
சோனக ஈசர், துருக்கர், குருக்களே. - 1.19.48
1196 - ஏதி யாதவர், ஏழ் திறல் கொங்கணர்,
சேதிராசர், தெலுங்கர், கருநடர்,
ஆதி வானம் கவித்த அவனி வாழ்
சோதி நீள் முடி மன்னரும் துன்னின் ஆர். - 1.19.49
1197 - தசரதனுக்குச் சாமரை வீசுதல்
தீம் கரும்பினும் தித்திக்கும் இன் சொலார்
தாங்கு சாமரை மாடு தயங்குவ,
ஓங்கி ஓங்கி வளர்ந்து உயர் சீர்த்தியின்
பூம் கொழுந்து பொலிவன போன்றவே. - 1.19.50
1198 - தசரதனுக்குப் பல்லாண்டு பாடுதல்
சுழலும் வண்டும், மிஞிறும், சுரும்பும், சூழ்ந்து
உழலும் தும்பியும் பம்பு அறல் ஓதியர்,
குழலினோடு உறக் கூறு பல்லாண்டு ஒலி,
மழலை யாழ் இசையோடு, மலிந்த ஏ. - 1.19.51
1199 - தசரதன் வெண்குடை விளங்குதல்
வெம் கண் ஆனையினான் தனி வெண் குடை,
திங்கள், தங்கள் குலக் கொடிச் சீதை ஆம்
மங்கை மா மணம் காணிய வந்து, அருள்
பொங்கி ஓங்கித் தழைப்பது போன்றது ஏ. - 1.19.52
1200 - தசரதன் படைகளின் பெருக்கம்
ஊடு பேர்வு இடம் இன்றி ஒன்று ஆம் வகை
நீடு மா கடல் தானை நெருங்கலால்,
ஆடல் மா மத ஆனைச் சனகர் கோன்
நாடு எலாம் ஒரு நல் நகர் ஆயதே. - 1.19.53
1201 - சனகன் யாவரையும் ஒப்ப உபசரித்தல்
ஒழிந்த என் இனி? ஒள் நுதல் தாதை தன்
பொழிந்த காதல் தொடரப் பொருள் எலாம்
அழிந்து உவந்து கொண்டாடலின், அன்புதான்
இழிந்து உளார்க்கும் இராமற்கும் ஒத்ததே. - 1.19.54
1.20. கோலங்காண் படலம் (1202 - 1244)
1202 - வசிட்டன் சீதையை அழைத்துவரச் சொல்லுதல்
தேவியர் மருங்கு சூழ,
இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்று என்ன
உவந்து அரசு இருந்த காலைத்
தா இல் வெண் கவிகைச் செங்கோல்
சனகனை இனிது நோக்கி
'மா இயல் நோக்கினாள் ஐக் கொணர்க'
என வசிட்டன் சொன்னான். - 1.20.1
1203 - சனகன் கட்டளையை ஏவன் மகளிர் தாதியரிடம் கூறல்
உரைசெயத் தொழுத கையன்,
உவந்த உள்ளத்தன்,' பெண்ணுக்கு
அரைசியைத் தருதிர் ஈண்டு' என்று,
ஆய் இழை அவரை ஏவக்
கரை செயற்கு அரிய காதல்
கடாவிடக் கடிது சென்றார்,
பிரைசம் ஒத்து இனிய சொல்லார்,
பேதை தாதியரில் சொன்னார். - 1.20.2
1204 - சீதையைத் தாதியர் அணிசெய்தல்
அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு
அணி என அமைக்குமா போல்,
உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை
உருவினை மறைப்பது ஓரார்,
அமிழ்தினைச் சுவை செய்து என்ன,
அழகினுக்கு அழகு செய்தார்,
இமிழ் திரைப் பரவை ஞாலம்
ஏழைமை உடைத்து, மாதோ! - 1.20.3
1205 - குழலில் மாலை சூட்டுதல்
கண்ணன்தன் நிறம், தன் உள்ளக்
கருத்தினை நிறைத்து, மீது இட்டு,
உள் நின்றும் கொடிகள் ஓடி
உலகு எங்கும் பரந்தது அன்ன,
வண்ணம் செய் கூந்தல் பார
வலயம் அத்து, மழையில் தோன்றும்
விண் நின்ற மதியின் மென் பூஞ்
சிகழிகைக் கோதை வேய்ந்தார். - 1.20.4
1206 - சுட்டி முதலிய அணிகள் அணிதல்
விதியது வகையால், வான
மீன் இனம் பிறையை வந்து
கது உறுகின்றது என்னக்
கொழுந்து ஒளி கஞலத் தூக்கி,
மதியினைத் தந்த மேகம்,
மருங்கு நா வளைப்பது என்னப்
பொதி இருள் அளக பந்தி
பூட்டிய பூட்டும் இட்டார். - 1.20.5
1207 - குழை அணிதல்
'வெள்ளத்தின் சடிலம் அத்து ஆன்
தன் வெம் சிலை இறுத்த வீரன்,
தள்ளத் தன் ஆவி சோரத்
தனிப் பெரும் பெண்மை தன்னை
அள்ளிக்கொண்டு அகன்ற காளை
அல்லன் கொல்? ஆம் கொல் என்பாள்?'
உள்ளத்தின் ஊசல் ஆடும்
குழை நிழல் உமிழ இட்டார். - 1.20.6
1208 - கழுத்தணி யணிதல்
கோன் அணி சங்கம் வந்து
குடி இருந்த அனைய கண்டம் அத்து,
ஈனம் இல் கலன்கள் தம்மில்
இயைவன அணிதல் செய்தார்.
மான் அணி நோக்கினார்தம்
மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணி ஆன போது,
தனக்கு அணி யாது மாதோ? - 1.20.7
1209 - முத்துமாலை அணிதல்
கோண் இலா வான மீன்கள் இயைவன கோத்தது என்கு ஓ?
வாள் நிலா வயங்கு செவ்வி வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?
பூண் நிலாம் முலை மேல் ஆர முத்தை, யான் புகல்வது எனோ? - 1.20.8
1210 - ஆரத்தின் வருணனை
மொய் கொள் சிறுமை அடி சேர்ந்த
முளரிக்கும் செம்மை ஈந்த
தையலாள் அமிழ்த மேனி,
தயங்கு ஒளி தழுவிக்கொள்ள,
வெய்ய பூண் முலையில் சேர்ந்த
வெண் முத்தம் சிவந்த என்றால்,
செய்யரைச் சேர்ந்து உளாரும்,
செய்யராய்த் திகழ்வர் அன்று ஏ? - 1.20.9
1211 - தோளணி அணிதல்
கொமை உற வீங்குகின்ற குலிகச் செப்பு அனைய கொங்கைச்
சுமை உற நுடங்குகின்ற நுசுப்பினாள் பூண் பெய் தோளுக்கு,
இமை உற இமைக்கும் செம் கேழ் இன மணி முத்தினோடும்
அமை உற அமைவது உண்டு ஆம் ஆகின், ஒப்பு ஆகும் அன்று ஏ. - 1.20.10
1212 - கையிற் கடகமணிதல்
தளை அவிழ் கோதை ஓதிச் சானகி தளிர் கை என்னும்
முளரிகள், இராமன் செம் கை முறைமையில் தீண்ட நோற்ற,
அளியன, கங்குல் போதும் குவியல ஆகும் என்று ஆங்கு
இளம் வெயில் சுற்றி அன்ன, எரி மணிக் கடகம் இட்டார். - 1.20.11
1213 - தொய்யில் எழுதல்
சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச் செப்பில்,
வல்லியும், அனங்கன் வில்லும் மான்மதச் சாந்தும், தீட்டிப்,
பல் இயல் நெறியில் பார்க்கும் பரம்பொருள் என்ன, யார்க்கும்
இல்லை உண்டு என்ன நின்ற, இடையினுக்கு இடுக்கண் செய்தார். - 1.20.12
1214 - மேகலையும் தாரகைச் சும்மையும் அணிதல்
நிறம் செய் கோசிக நுண் தூசு நீவி, நீவாத அல்குல்
புறம் செய் மேகலையும், தாழத் தாரகைச் சும்மை பூட்டித்,
திறம் செய் காசு ஈன்ற சோதி, பேதை சேய் ஒளியில் தீர்ந்த
கறங்குபு திரியத், தாமும் கண் வழுக்கு உற்று நின்றார். - 1.20.13
1215 - சிலம்பு அணிதல்
ஐய ஆம் அனிச்சப் போதின் அதிகமும் நொய்ய, ஆடல்
பை அரவு அல்குலாள் தன் பஞ்சு இன்றிப் பழுத்த பாதம்,
செய்ய பூம் கமலம் மன்னச் சேர்த்திய சிலம்பு, சால
நொய்யவே நொய்ய என்றோ பல பட நுவல்வது? அம்மா! - 1.20.14
1216 - விழிகட்கு மையிடுதல்
நஞ்சு இடை அமிழ்தம் கூட்டி நாட்டங்கள் ஆன என்னச்,
செஞ்செவே நீண்டு மீண்டு சேய் அரி சிதறித், தீய
வஞ்சமும் களவும் இன்றி மழை என மதர்த்த கண்கள்,
அஞ்சன நிறம் ஓ? அண்ணல் வண்ணம் ஓ? அறிதல் தேற்றாம். - 1.20.15
1217 - திலகம் தீட்டுதல்
மொய் வளர் குவளை பூத்த முளரியின் முளைத்த முந்நாள்
மெய் வளர் மதியின் நாப்பண் மீன் உண்டேல் அனையது ஏய்ப்ப,
வையக மடந்தைமார்க்கும், நாகர் கோதையர்க்கும், வானத்
தெய்வ மங்கையர்க்கும் மேலாம் திலகம் அத்து ஐ திலகம் செய்தார். - 1.20.16
1218 - பல மலர்களைச் சூட்டுதல்
சின்ன பூ, செருகும் மென் பூச், சேகரப் போது, கோது இல்
கன்னப் பூக், கஞல, மீது கற்பகக் கொழுந்து மான
மின்னப், பூம் சுரும்பும் வண்டும் மிஞிறும் தும்பிகளும் பம்பும்
புன்னைப் பூம் தாது மானும் பொன் பொடி, அப்பிவிட்டார். - 1.20.17
1219 - பிராட்டிக்குக் காப்பிடுதல்
நெய் வளர் விளக்கம் ஆட்டி, நீரொடு பூவும் தூவித்,
தெய்வமும் பராவி, வேத பாரகர்க்கு ஈந்து செம் பொன்,
ஐயவி நுதலில் சேர்த்தி, ஆய் நிற அயினி சுற்றிக்,
கை வளர் மயில் அனாளை வலம் செய்து, காப்பும் இட்டார். - 1.20.18
1220 - சீதையின் அழகைக்கண்டு மகளிரும் காமுறுதல் ((1220-1221))
கஞ்சம் அத்து களிக்கும் இன் தேன் கவர்ந்து உணும் வண்டு போல,
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம் அருளினாள் அழகை மாந்தித்,
தம் சொற்கள் குழறித், தம் தம் தகை தடுமாறி நின்றார்;
மஞ்சர்க்கும் மாதரார்க்கும் மனம் என்பது ஒன்றே அன்றே? - 1.20.19
1221 - இழை குலாம் முலையினாளை
இடை உவா மதியின் நோக்கி,
மழை குலாம் ஓதி நல்லார்
களி மயக்குற்று நின்றார்,
உழை குலாம் நயனம் அத்து ஆர் மாட்டு,
ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த,
அழகு எலாம் ஒருங்கு ஏ கண்டால்
யாவர் ஏ ஆற்ற வல்லார் ? - 1.20.20
1222 - சீதையின் தோற்றம்
சங்கு அம் கை உடைமையாலும், தாமரைக் கோயிலாலும்,
எங்கு எங்கும் பரந்து வேறு வேறு உள்ளத்தின் எழுதிற்று என்ன,
அங்கு அங்கே தோன்றலாலும், அருந்ததி அனைய கற்பின்
நங்கையும் நம்பி ஒத்தாள்; நாம் இனிப் புகல்வது என் ஓ? - 1.20.21
1223 - தோழிமார் சீதையைச் சூழ்தல்
பரந்த மேகலையும், கோத்த
பாதம் சாலகம் உம், நாகச்
சிரம் செய் நூபுரமும், வண்டும்,
சிலம்பொடு சிலம்பி ஆர்ப்பப்,
புரந்தரன் கோல் கீழ் ஆனோர்,
அரம்பையர் புடைசூழ்ந்து என்ன,
வரம்பு அறு சும்மைத் தீம் சொல்
மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார். - 1.20.22
1224 - சீதை நடந்து செல்லுதல்
சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றி,
வந்து அடி வணங்கிச் சுற்ற, மணி அணி விதான நீழல்,
இந்துவின் கொழுந்து விண்மீன் இனம் அத்து ஒடும் வருவது என்ன,
நந்தல் இல் விளக்கம் அன்ன நங்கையும் நடக்கல் உற்றாள். - 1.20.23
1225 - சீதை நடையின் வருணனை ((1225-1228))
வல்லியை உயிர்த்த நில மங்கை, இவள் பாதம்
மெல்லிய உறைக்கும் என அஞ்சி, வெளி எங்கும்
பல்லவம் மலர்த் தொகை பரப்பினள் எனத், தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள். - 1.20.24
1226 - தொழும் தகைய மெல் நடை தொலைந்து களி அன்னம்,
எழுந்து இடை விழுந்து அயர்வது என்ன, அயல் எங்கும்
கொழுந்து உடைய சாமரை குலாவ, ஒர் கலாபம்
வழங்க நிழல், மின்ன வரும் மஞ்ஞை என வந்தாள். - 1.20.25
1227 - மண் முதல் அனைத்து உலகின் மங்கையருள் எல்லாம்
கண்மணி எனத் தகைய கன்னி எழில் காண,
அண்ணல் மரபில் சுடர் அருத்தி ஒடு, தான் அவ்
விண் இழிவது ஒப்பது ஒர் விதான நிழல் வந்தாள். - 1.20.26
1228 - கற்றை விரி பொன் கடை மயிர்த் துறு கலாபம்
சுற்றும் மணி புக்க இழை, மிக்கு இடை துவன்றி,
வில் தவழ, வாள் நிமிர, மெய் அணிகள் மின்னச்,
சிற்றிடை நுடங்க, ஒளிர் சீறடி பெயர்த்தாள். - 1.20.27
1229 - சீதை மண்டபத்தை அடைதல்
பொன்னின் ஒளி, பூவின் வெறி, சாந்து பொதி சீதம்,
மின்னின் நிழல் அன்னவள் தன் மேனி ஒளி மான,
அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாண,
மன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள். - 1.20.28
1230 - சீதையின் எழிலை யாவரும் காணுதல்
சமைத்தவரை இன்மை மறை தானும் எனலாம் அச்
சுமைத் திரள் முலைத் தெரிவை தூய் வடிவு கண்டார்.
அமை திரள் கொள் தோளியரும், ஆடவரும், எல்லாம்
இமைத்திலர் உயிர்த்திலர்கள் சித்திரம் எனத் தாம். - 1.20.29
1231 - சீதையைக் கண்ட இராமனது மகிழ்ச்சி
அன்னவளை, அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,
கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்
உன் உயிர் நிலைப்பது ஒர் அருத்தி ஒடு, உழைத்து ஆண்டு,
இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான். - 1.20.30
1232 - சீதையைக் கண்ட இராமன் வியப்பு
நறத் துறை முதிர்ச்சி உறு நல் அமிழ்து பில்குற்று,
அறத்தின் விளைவு ஒத்து, முகடு உந்தி, அருரு உய்க்கும்,
நிறத் துவர் இதழ்க் குயில், நினைப்பின் இடை அல்லால்,
புறத்தும் உளதோ? என மனத்து ஒடு புகன்றான். - 1.20.31
1233 - வசிட்டன் மகிழ்ச்சி
'எங்கள் செய் தவத்தினில் இராமன் என வந்தான்,
சங்கு இன் ஒடு சக்கரம் உடைத் தனி முதல் பேர்,
அங்கண் அரசு ஆதலின், அவ் அல்லி மலர் புல்லும்
மங்கை இவள் ஆம்' என வசிட்டன் மகிழ்வு உற்றான். - 1.20.32
1234 - தயரதன் மகிழ்ச்சி
துன்று புரி கோதை எழில் கண்டு, உலகு சூழ் வந்து
ஒன்று புரி கோல் ஒடு தனித் திகிரி உய்ப்பான்,
'என்றும் உலகு எழும் அரசு, எய்தி உளன் ஏனும்,
இன்று திரு எய்தியது எனக்கு' என நினைத்தான். - 1.20.33
1235 - இராமன் முதலிய சிலர் தவிர ஏனையோர்
சீதையை வணங்குதல்
நைவளம் நவிற்றும் மொழி நண்ண வரலோடும்,
வையம் நுகர் கொற்றவனும் மாதவரும் அல்லார்,
கைகள் தலை புக்கன, கருத்து உளதும் எல்லாம்
தெய்வம் எனல் உற்ற, உடல் சிந்தை வசம் அன்று ஓ ? - 1.20.34
1236 - சீதை தன் தந்தையருகில் அமர்தல்
மாதவனை முன் கொள வணங்கி, நெடு மன்னன்
பாத மலரைத் தொழுது, கண்கள் பனி சோரும்
தாதை அருகு இட்ட தவிசில் தனி இருத்தாள்,
போதினை வெறுத்து அரசர் பொன் மனை புகுந்தாள். - 1.20.35
1237 - சீதையைக் கண்ணுற்ற கோசிகனது வியப்பு
அச்சு என நினைத்த முதல் அந்தணன் நினைந்தான்,
'பச்சை மலை ஒத்த படிவத்து அடல் இராமன்,
நச்சு உடை வடிக் கண் மலர் நங்கை இவள் என்றால்,
இச் சிலை கிடக்க, மலை ஏழையும் இறான் ஓ!' - 1.20.36
1238 - சீதை இராமனைக் காணுதல்
எய்ய வில் வளைத்ததும் இறுத்ததும் உரைத்தும்,
மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,
ஐயனை அகத்து வடிவே அல புறத்தும்
கைவளை திருத்துபு கடைக்கணின் உணர்ந்தாள். - 1.20.37
1239 - சீதையின் மகிழ்ச்சி ((1239-1240))
கரும் கடை நெடும் கண் ஒளி ஆறு, நிறை கண்ணப்
பெரும் கடலின் மண்ட, உயிர் பெற்று இனிது உயிர்க்கும்
அரும் கலன் அணங்கு அரசி, ஆர் அமிழ்து அனைத்தும்
ஒருங்கு உடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள். - 1.20.38
1240 - கணம் குழை கருத்தின் உறை கள்வன் எனல் ஆனான்
வணங்கு வில் இறுத்தவன் எனத் துயர் மறந்தாள்.
அணங்கு உறும் அவிஞ்சை கெட, விஞ்சையின் அகம்பாடு
உணர்ந்து, அறிவு முற்று பயன் உற்றவரை ஒத்தாள். - 1.20.39
1241 - மணநாளைத் தயரதன் வினவுதல்
கொல் உயர் களிற்று அரசர் கோமகன் இருந்தான்,
கல்வி கரை உற்ற முனி, கௌசிகனை,' மேலோய்!
வல்லி பொரு சிற்றிடை மடந்தை மண நாளாம்
எல்லையில் நலத்த பகல் என்று? உரை செய்க' என்றான். - 1.20.40
1242 - திருமணம் நாளை யெனல்
'வாளை உகளக், கயல்கள் வாவி படி, மேதி
மூளை முதுகைக் கதுவ மூரிய வரான் மீன்,
பாளை, விரியக் குதிகொள், பண்ணை வள நாடா!
நாளை' என, உற்ற பகல் நல் தவன் உரைத்தான். - 1.20.41
1243 - தயரதன் தன் மாளிகையை அடைதல்
சொற்ற பொழுது அத்து, அரசர் கை தொழுது எழத், தன்
ஒற்றை வயிரச் சுரி கொள் சங்கின் ஒலி பொங்கப்,
பொன் தட முடிப் புது வெயில் பொழிதரப் போய்,
நற்றவர் அனுச்சை கொடு, நல் மனை புகுந்தான். - 1.20.42
1244 - கதிரவன் மறைவு
அன்னம் அரிதில் பிரிய, அண்ணலும் அகன்று, அப்
பொன்னின் நெடு மாடவரை புக்கனன், மணிப்பூண்
மன்னவர் பிரிந்தனர்கள், மா தவர்கள் போனார்,
மின்னு சுடர் ஆதவனும் மேருவில் மறைந்தான். - 1.20.43
21. கடிமணப் படலம் (1245 -1348)
1245 - சனகன் வரவேற்பால் யாவரும் மகிழ்தல்
இடம் படு புகழ்ச் சனகர் கோன் இனிது பேணக்,
கடம் படு களிற்று அரசர் ஆதி இடை கண்டோர்,
தடம் படு புயத்த சிறு தம்பியர்கள் காறும்,
உடம் பொடு துறக்கம் நகர் உற்றவரை ஒத்தார். - 1.21.1
1246 - சீதாதேவியின் நிலை
தேடு அரு நலத்த புனல் ஆசை தெறல் உற்றார்,
மாடு ஓர் தடம் உற்று, அதனை எய்தும் வகை காணார்,
ஈடு அழிவு உறத் தளர்வொடு ஏமுறுவர் அன்றே?
ஆடக வளைக் குயிலும் அ நிலையள் ஆனாள். - 1.21.2
1247 - சீதை இரவொடு கூறல்
'உரவு ஏதும் இலார் உயிர் ஈதும் எனார்
கரவே புரிவார் உளரோ? கதிரோன்
வரவே எனை ஆள் உடையான் வருமே
இரவே! கொடியாய் விடியாய்' எனும் ஆல். - 1.21.3
1248 - மனத்தொடு கூறல்
'கரும் நாயிறு போல்பவர் காலொடு போய்
வரும் நாள் அயலே வருவாய், மனனே !
பெரும் நாள் உடனே பிரியாது உழல்வாய்,
ஒரு நாள் தரியாது ஒழிவார் உளர் ஓ?' - 1.21.4
1249 - அன்றிலொடு கூறல்
கனை ஏழ் கடல் போல் கரு நாழிகை தான்
வினையேன் வினையால் விடியாவிடின், நீ,
தனியே பறவாய், தகவு ஏதும் இலாய்,
பனை மேல் உறைவாய்! பழி பூணுதி ஓ?' - 1.21.5
1250 - நிலவொடு கூறல்
'அயில் வேல் அனல் கால்வன ஆம் நிழல் ஆய்
வெயில் ஏ என நீ விரிவாய், நிலவு ஏ!
செயிர் ஏதும் இலார், உடல் தேய்வுறுவார்,
உயிர் கோள் உறுவார் உளர் ஓ? உரையாய்!' - 1.21.6
1251 - தென்றலொடு கூறல்
'மன்றல் குளிர் வாசம் வயங்கு அனல் வாய்,
மின் தொத்து நிலா நகை, வீழ் மலயக்
குன்றில் குலமா முழையில் குடிவாழ்,
தென்றல் புலியே! இரை தேடுதி ஓ?' - 1.21.7
1252 - உருவெளித் தோற்றம்
'தெருவே திரிவார் ஒரு சேவகன் ஆர்
இரு போதும் விடார், இது என்னை கொல் ஆம்?
கரு மா முகில் போல்பவர், கன்னியர் பால்
வருவார் உளரோ குல மன்னவர் ஏ?' - 1.21.8
1253 - இரவு நீட்டித்ததுகுறித் திரங்கல்
'தெருளா வினை; தீயவர் சேரலர் தோள்;
அருளா நெறி ஓடும் அவா அது ஓ;
கருள் ஆர் கடலோ கரை காண அரிது ஆல்,
இருள் ஆனதுதான், எனை ஊழி கொலாம்?' - 1.21.9
1254 - தேவியின் வருத்த மிகுதி
'பண்ணே ஒழியா, பகலோ புகுதாது,
எண் ஏ தவிரா, இரவோ விடியாது,
உள் நோ ஒழியா, உயிர் ஓ அகலா,
கண்ணே துயிலா; இதுவோ கடன் ஏ?' - 1.21.10
1255 - கடலை நோக்கி இரங்குதல்
'இடையே வளை சோரா, எழுந்து, விழுந்து,
அடல் ஏய் மதனன் சரம் அஞ்சினை ஓ?
உடல் ஓய்வு உற நாளும் உறங்கலை ஆல்;
கடலே! உரை, நீயும் ஒர் கன்னி கொல் ஆம்?' - 1.21.11
1256 - கவிக்கூற்று
என இன்னன பன்னி, இருந்து உளைவாள்,
துனி உன்னி நலம் கொடு சோர்வு உறு கால்,
மனை தன்னின் வயங்குறும் வைகு இருள் வாய்
அனகன் நினைகின்றன யாம் அறைவாம். - 1.21.12
1257 - இராமன் நினைகின்றவை ((1257-1262))
'முன் கண்டு முடிப்பு அரு வேட்கை இன் ஆல்,
என் கண் துணை கொண்டு இதயம் அத்து எழுதிப்,
பின் கண்டும், ஒர் பெண் கரை கண்டிலென் ஆல் ;
மின் கண்டவர் எங்கு அறிவார் வினை ஏ?' - 1.21.13
1258 - 'திருவே அனையாள் முகமே! உயிரின்
கருவே! களியே விளை காம விதைக்கு
எருவே! மதியே! இது என் செய்தவா?
ஒருவேன் ஒடு நீ உறவு ஆகலை ஓ?' - 1.21.14
1259 - 'கழியா உயிர் உந்திய, காரிகை தன்
விழி போல வளர்ந்தது, வீகிலது ஆல்;
அழி போர் இறைவன் பட அஞ்சியவன்
பழி போல வளர்ந்தது பாய் இருளே.' - 1.21.15
1260 - 'நினையாய் ஒருகால், நெடிதோ நெறிதான்?
வினவாதவர் பால் விடை கொண்டிலை ஓ?
புன மான் அனையார் ஒடு போயின என்
மனனே! எனை நீயும் மறந்தனையோ?' - 1.21.16
1261 - 'தன் நோக்கு எரி கால் தகை வாள் அரவின்
பல் நோக்கினது என்பது பண்டு கொல் ஆம்?
என் நோக்கினும் நெஞ்சினும் என்றும், உளார்
மெல் நோக்கினதே கடுவல் விடம் ஏ.' - 1.21.17
1262 - 'வல்லார் புனை மாளிகை வார் பொழில் ஓடு
எல்லாம் உள ஆயினும், என் மனமோ,
கல்லோ எனும் நெஞ்சொடு கன்னியர் ஆம்
மெல் ஓதியர் தாம் விளையாடு இடமே.' - 1.21.17
1263 - மணமுரசறைதல்
வானவர் பெருமானும் மனம் நினைவினன் ஆகத்,
'தேன் நகு குழலாள் தன் திருமண வினை நாளை;
பூ நகு மணி வாசம் புனை நகர் அணிவீர்' என்று,
ஆனையின் மிசை ஆணை அணி முரசு அறைவித்தான். - 1.21.19
1264 - நகரமாந்தர் நன்முயற்சி
முரசு அறைதலும், மான முதியரும், இளையோரும்,
விரை செறி குழலாரும், விரவினர் விரைகின்றார்,
உரை செறி கிளையோடும் உவகையின் உயர்கின்றார்,
கரை தெரிவு அரிது ஆகும் இரவு ஒரு கரை கண்டார். - 1.21.20
1265 - கதிரவன் வருகை
அஞ்சன ஒளியானும், அலர் மிசை உறை வாளும்,
எஞ்சல் இல் மணம் நாளைப் புணர்குவர் எனலோடும்,
செஞ் சுடர் இருள் கீறித் தினகரன் ஒரு தேர் மேல்
மஞ்சனை அணி கோலம் காணிய என வந்தான். - 1.21.21
1266 - நகரமாந்தர் செயல் ((1266-1281))
தோரணம் நடுவாரும், தூண் உறை பொதிவாரும்,
பூரண குடம் எங்கும் புனை துகில் புனைவாரும்,
கார் அணி நெடு மாடம் கதிர் மணி அணிவாரும்,
ஆரண மறை வாணர் கு இன் அமுது அடுவாரும். - 1.21.22
1267 - அன்னம் மெல் நடையாரும், மழ விடை அனையாரும்,
கன்னி நல் நகர் வாழை கமுகொடு நடுவாரும்,
பன் அரு நிரை முத்தம் பரியன தெரிவாரும்,
பொன் அணி அணிவாரும், மணி அணி புனைவாரும். - 1.21.23
1268 - சந்தனம் அகில் நாறும் சாந்து ஒடு தெரு எங்கும்
சிந்தினர் திரிவாரும், செழு மலர் சொரிவாரும்,
இந்திர தனு நாணும் எரி மணி நிரை மாடத்து
அந்தம் இல் விலை ஆரக் கோவைகள் அணிவாரும். - 1.21.24
1269 - தளம் கிளர் மணி காலத் தவழ் சுடர் உமிழ் தீபம்,
இளம் குளிர் முளை ஆர் நல் பாலிகை இனம் எங்கும்,
விளிம்பு பொன் வகை நாற வெயிலொடு நிலவு ஈனும்
பளிங்கு உடை உயர் திண்ணைப் பத்தியின் வைப்பாரும். - 1.21.25
1270 - மந்தரம் மணி மாடம் முன்றிலின் வயின் எங்கும்
அந்தம் இல் ஒளிர் முத்தின் அகல் நிறை ஒளி நாறி,
இந்திரன் நெடு வானம் ஈன் அலர்குவது என்னப்,
பந்தரின் நிழல் வீசப், படர்வெயில் கடிவாரும். - 1.21.26
1271 - வயிரம் மின் ஒளி ஈனும் மரகத மணி வேதிச்
செயிர் அற ஒளிர் தீபம் சிலதியர் கொணர்வாரும்,
வெயில் விரவிய பொன்னின் மிடை கொடி மதி தோயும்
எயிலினில் நடுவாரும், அகில் எரி இடுவாரும். - 1.21.27
1272 - பண்டியில் நிறை வாசப் பனி மலர் கொணர்வாரும்,
தண்டலை இலையோடு கனி பல தருவாரும்,
குண்டலம் வெயில் வீசக் குரவைகள் புரிவாரும்,
உண்டை கொள் மத வேழத்து ஓடைகள் அணிவாரும். - 1.21.28
1273 - கலவைகள் புனைவாரும், கலை நல தெரிவாரும்,
மலர் குழல் மலைவாரும், மதி முகம் மணி ஆடித்
திலதம் முன் இடுவாரும், சிகழிகை அணிவாரும்,
இலவு இதழ் பொலி கோலம் எழில் பெற இடுவாரும். - 1.21.29
1274 - தப்பின மணி காசும் சங்கமும் மயில் அன்னார்
ஒப்பனை புரி போதும், ஊடலின் உகு போதும்,
துப்பு உறழ் இள வாசச் சுண்ணமும், உதிர் தாதும்,
குப்பைகள் என வாரிக் கொண்டனர் களைவாரும். - 1.21.30
1275 - மன்னவர் வருவாரும், மறையவர் நிறைவாரும்,
இன் இசை மணி யாழின் இசை மது நுகர்வாரும்,
சென்னியர் திரிவாரும், சிலதியர் செறிவாரும்,
கன்னலின் மண ஓலைக் கடிகைகள் தெரிவாரும். - 1.21.31
1276 - கணிகையர் தொகுவாரும், கலை பல பயில்வாரும்,
'பணி, பணி' எனலோடும், பல இரு நில மன்னர்
அணி நெடு முடி ஒன்று ஒன்று அறைதலின் உகும் அம்பொன்
மணி மலை தொக மன்னன் வாயிலின் மிடைவாரும். - 1.21.32
1277 - கேடகம் வெயில் வீசக், கிளர் அயில் நிலவு ஈனக்,
கோடு உயர் நெடு விஞ்சைக் குஞ்சரம் அது போல
ஆடவர் திரிவாரும், அரிவையர் களி கூரும்
நாடகம் நவில்வாரும், நகை உயிர் கவர்வாரும். - 1.21.33
1278 - கதிர் மணி ஒளி காலக் கவர் பொருள் தெரியா ஆறு
எதிர் எதிர் சுடர் விம்முற்று எழுதலின், இளையோரும்
மது விரி குழலாரும், மதில் உடை நெடு மாடம்
அது இது என ஓரார், அலமரல் உறுவாரும். - 1.21.34
1279 - தேர் மிசை வருவாரும், சிவிகையில் வருவாரும்,
ஊர்தியில் வருவாரும், ஒளி மணி நிரை ஓடைக்
கார் மிசை வருவாரும், கரிணியில் வருவாரும்,
பார் மிசை வருவாரும், பண்டியில் வருவாரும். - 1.21.35
1280 - முத்து அணி அணிவாரும், மணி அணி முனிவாரும்,
பத்தியின் நிமிர் செம் பொன் பலகலன் மகிழ்வாரும்,
தொத்து உறு தொழில் மாலை சுரி குழல் அணிவாரும்,
சித்திரம் நிரை தோயும் செம் துகில் புனைவாரும். - 1.21.36
1281 - விடம் நிகர் விழியாரும், அமுது எனும் மொழியாரும்,
கிடை புரை இதழாரும், கிளர் நகை ஒளியாரும்,
தடம் முலை பெரியாரும், தனி இடை சிறியாரும்,
பெடை அன நடையாரும், பிடி என வருவாரும். - 1.21.37
1282 - பல செல்வம் உம் நிறைந்து மணநாள் சிறத்தல்
உள் நிறை நிமிர் செல்வம் ஒரு துறை செல என்றும்
கண் உறல் அரிது, என்றும் கருதுதல் அரிது, அம்மா!
எண் உறு சுடர் வானத்து இந்திரன் முடி சூடும்
மண் உறு திரு நாள் ஒத்தது அம் மண நாளே. - 1.21.38
1283 - தயரதன் மணமண்டப மடைதல் ((1283-1284))
கரை தெரிவு அரியது, கனகம் வேய்ந்தது,
வரை என உயர்ந்தது, மணியின் செய்தது,
நிரை வளை மண வினை நிரப்பும் மண்டபம்,
அரசர் தம் அரசனும் அணுகல் மேயினான். - 1.21.39
1284 - வெண் குடை இள நிலா விரிப்ப, மின் எனக்
கண் குடை இன மணி வெயிலும் கான்றிடப்,
பண் குடை வண்டினம் பாட, ஆடல் மா
மண் குடை தூளி விண் மறைப்ப, ஏகினான். - 1.21.40
1285 - முரசம் முதலியன ஆர்த்தல்
மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன,
சங்குகள் முரன்றன, தாரை போர் எனப்
பொங்கின, மறையவர் புகலும் நான் மறை
கங்குலின் ஒலிக்கும் மா கடலும் போன்றவே. - 1.21.41
1286 - தயரதனோடு சென்ற அரசர்கள்
பரந்த தேர் களிறு பாய் புரவி பண்ணையில்
தரம் தரம் நடந்தன தானை வேந்தனை
நிரந்தரம் தொழுது எழும் நேமி மன்னவர்
புரந்தரன் புடை வரும் அமரர் போன்றனர். - 1.21.42
1287 - அனைவரும் முறையாக வருதல்
அனையவன் மண்டபம் அணுகி அம் பொனின்
புனை மணி ஆதனம் பொலியத் தோன்றினான்
முனைவரும் மன்னரும் முறையின் ஏறினார்
சனகனும் தன் கிளை தழுவ ஏறினான். - 1.21.43
1288 - மண்டபம் பொன்மலையை ஒத்தல்
மன்னரும், முனிவரும், வான் உளோர்களும்,
அன்னம் மெல் நடை அணங்கு அனைய மாதரும்,
துன்னினர் துவன்றலில், சுடர்கள் சூழ்வரும்
பொன் மலை ஒத்தது அப் பொரு இல் கூடமே. - 1.21.44
1289 - மண்டபம் அண்டகோளத்தை ஒத்தல்
புயல் உள மின் உள, பொரு இல் மீன் உள,
இயல் மணி இனம் உள, சுடர் இரண்டு உள,
மயன் முதல் திருத்திய மணி செய் மண்டபம்
அயன் முதல் திருத்திய அண்டம் ஒத்தது ஏ. - 1.21.45
1290 - மண்டபம் மாலின் வயிற்றை ஒத்தல்
எண் தவ முனிவரும் இறைவர் யாவர் உம்
அண்டரும் பிறரும் புக்கு அடங்கிற்று; ஆதலின்,
மண்டபம், வையமும் வானும் வாய்மடுத்து
உண்டவன் மணி அணி உதரம் ஒத்ததே. - 1.21.46
1291 - கவிக் கூற்று
தராதலம் முதல் உலகு அனைத்தும் தள் உற
விராவின, குவிந்தன, விளம்ப வேண்டுமோ?
அரா அணை துறந்து போந்து அயோத்தி எய்திய
இராகவன் செய்தியை இயம்புவாம் அரோ. - 1.21.47
1292 - இராமபிரான் திருமஞ்சனமாடல்
சங்கு இனம் தவழ் கடல் எழில் தந்தன
சிங்கல் இல் அரு மறை தெரிந்த தீர்த்தங்கள்
கங்கையே முதலிய கலந்த நீரினால்
மங்கல மஞ்சனம் மரபின் ஆடியே. - 1.21.48
1293 - திருமண் தரித்தல்
என்றும் நான்முகன் முதல் யாரும் யாவையும்
நின்ற பேர் இருளினை நீக்கி நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே. - 1.21.49
1294 - ஆதியஞ்சோதியை அடிவணங்கல்
கோது அறு தவத்துத் தன் குலத்து உளோர் தொழும்
ஆதி அம் சோதியை அடி வணங்கினான்
காது இயல் கயல் விழிக் கன்னிமார்களை
வேதியர்க்கு அரு மறை விதியின் நல்கியே. - 1.21.50
1295 - கலவைச்சாந்தணிதல்
அழிவரு தவத்தின் ஓடு அறத்தை ஆக்குவான்
ஒழிவு அரும் கருணை ஓர் உருவு கொண்டு என
எழுதரு வடிவு கொண்டு இருண்ட மேகத்தைத்
தழுவிய நிலவு எனக் கலவை சாத்தியே. - 1.21.51
1296 - சுழியம் சூடல்
மங்கல முழு நிலா மலர்ந்த திங்களைப்
பொங்கு இரும் கரும் கடல் பூத்தது ஆம் எனச்
செங்கிடைச் சிகழிகைச் செம் பொன் மாலையும்
தொங்கலும் துயல்வரச் சுழியம் சூடியே. - 1.21.52
1297 - இருகுழைக் காட்சி
ஏதம் இல் இரு குழை இரவு நன் பகல்
காதல் கண்டு உணர்ந்தன கதிரும் திங்களும்
சீதைதன் கருத்தினைச் செவியின் உள் உறத்
தூது சென்று உரைப்பன போன்று தோன்றவே. - 1.21.53
1298 - வீரபட்டம் சூடல்
கார் விடக் களம் உடைக் கணிச்சி வானவன்
வார் சடைப் புடையின் ஓர் மதி மிலைச்சத் தான்
சூர் சுடர்க் குலம் எலாம் சூடினான் என
வீரபட்டம் அத்து ஒடு திலதம் மின்னவே. - 1.21.54
1299 - முத்தாரம் அணிதல்
சக்கரம் அத்து அயல் வரும் சங்கம் ஆம் என
மிக்கு ஒளிர் கழுத்து அணி தரள வெண் கொடி
மொய்க் கருங் குழலினாள் முறுவல் உள் உறப்
புக்கன நிறைந்து மேல் பொடித்த போன்ற வே. - 1.21.55
1300 - தோள்வளை தரித்தல்
பந்தி செய் வயிரங்கள் பொறியின் பாடு உற
அந்தம் இல் சுடர் மணி அழலில் தோன்றல் ஆல்
சுந்தரத் தோள் அணி வலயம் தொல்லை நாள்
மந்தரம் சுற்றிய அரவை மானும் ஏ. - 1.21.56
1301 - முத்துவடங்கள் தரித்தல்
கோவை இன் பெரு வட முத்தம் கோத்தன
காவல் செய் தடக் கையின் நடுவண் காந்துவ
மூவகை உலகுக்கும் முதல்வன் நாம் என 1
ஏவரும் பெரும் குறி இட்ட போன்றவே. - 1.21.57
1302 - கடகம் தரித்தல்
மாண்ட பொன் மணி அணி வலயம் வந்து எதிர்
வேண்டினர்க்கு உதவுவான் விரும்பிக் கற்பகம்
ஈண்டு தன் கொம்பு இடை ஈன்றது ஆம் எனக்
காண் தகு தடக் கையில் கடகம் மின்னவே. - 1.21.58
1303 - நவமணிமாலை அணிதல்
தேன் உடை மலர் மகள் திளைக்கும் மார்பினில்
தான் இடை விளங்கிய தகையின் ஆரந்தான்
மீன் ஒடு சுடர் விட விளங்கும் மேகம் அத்து
வான் இடு வில் என வயங்கிக் காட்டவே. - 1.21.59
1304 - உத்தரீயக் காட்சி
நணுகவும் நிமிரவும் நடக்கும் ஞானத்தர்
உணர்வினின் ஒளி திகழ் உத்தரீயம் தான்
தணிவு அரும் கருணை தன் கழுத்தில் சாத்திய
மணி உமிழ் கதிர் என மார்பில் தோன்ற ஏ. - 1.21.60
1305 - முப்புரிநூலின் தோற்றம்
மேவு அரும் சுடர் என விளங்கும் மார்பின் நூல்
ஏவரும் தெரிந்து இனிது உணர்மின் ஈண்டு எனத்
தேவரும் முனிவரும் தெரிக்கலா முதல்
மூவரும் தான் என முடித்தது ஒத்ததே. - 1.21.61
1306 - உதரபந்தனத் தோற்றம்
சுற்றும் நீள் தமனியச் சோதி பொங்க, மேல்
ஒற்றை மா மணி உமிழ் உதர பந்தனம்,
மற்றும் ஓர் அண்டமும் அயனும் வந்து எழப்
பொன் தடம் தாமரை பூத்த போன்றதே. - 1.21.62
1307 - வெண்ணிறப் பட்டுச் சாத்தல்
மண் உறு சுடர் மணி வயங்கித் தோன்றிய
கண் உறு கருங் கடல் அதனைக் கை வளர்
தண் நிறப் பால் கடல் தழீஇயது ஆம் என
வெண் நிறப் பட்டு ஒளி விளங்கச் சாத்தி ஏ. - 1.21.63
1308 - உடைவாள் அணிதல்
சலம் வரு தரளமு உம் தயங்கும் நீலமும்
அலம் வரு நிழல் உமிழ் அம் பொன் கச்சு இன் ஆல்
குலம் வரு கனக வான் குன்றை நின்று உடன்
வலம் வரு கதிர் என வாளும் வீக்கி ஏ. - 1.21.64
1309 - உடைவாளின் பக்கத்தில் குஞ்சங்களைத்
தொங்கவிடுதல்
முகை விரி சுடர் ஒளி முத்தின் பத்தி வான்
தொகை விரி பட்டிகைச் சுடரும் சுற்றிடத்
தகை உடை வாள் எனும் தயங்கு வெய்யவன்
நகை இள வெயில் எனத் தொங்கல் நாற்றி ஏ. - 1.21.65
1310 - கிம்புரி அணிதல்
காசொடு கண் நிழல் கஞலக் கைவினை
ஏசு அறு கிம்புரி எயிறு வெண் நிலா
வீசலின் மகரவாய் விளங்கு வாள் முகம்
ஆசையை ஒளிகளால் அளந்து காட்ட ஏ. - 1.21.66
1311 - சிலம்பும் கழலும் அணிந்தமை
இனிப் பரந்து உலகினை அளப்பது எங்கு? எனத்
தனித்தனி தடுப்பன போலும் சால்பின
நுனிப்பு அரும் நுண் வினைச் சிலம்பு நோன் கழல்
பனிப்பு அரும் தாமரைப் பாதம் பற்ற ஏ. - 1.21.67
1312 - இன்னணம் ஒளிர்தர இமையவர்க்கு எலாம்
தன்னையே அனையது ஓர் கோலம் தாங்கினான்
பன்னக மணி விளக்கு அழலும் பாயலுள்
அன்னவர் தவத்தினால் அனந்தல் நீங்கினான். - 1.21.68
1313 - இராமபிரான் கொண்ட திருக்கோலச் சிறப்பு
செப்ப அரிதெனல்
முப் பரம் பொருளிற்கு உள் முதலை மூலத்தை
இப் பரம் துடைத்தவர் எய்தும் இன்பத்தை
அப்பனை அப்பினுள் அமுதம் தன்னையே
ஒப்பனை ஒப்பனை உரைக்க ஒண்ணும் ஓ. - 1.21.69
1314 - இராமபிரான் தானஞ் செய்தபின் திருத்தேர் ஏறுதல்
பல் பதினாயிரம் பசுவும் பைம் பொனும்
எல்லை இல் நிலனொடு மணிகள் யாவையும்
நல்லவர்க்கு உதவினான், நவிலும் நால் மறை
செல்வர்கள் வாழ்த்து உறத் தேர் வந்து ஏறினான். - 1.21.70
1315 - இராமபிரான் ஏறிய தேரின் சிறப்பு (1315-1316)
பொன் திரள் அச்சது, வெள்ளிச் சில்லி புக்கு
உற்றது, வயிரத்தின் உற்ற தட்டது,
சுற்று உறு நவம் மணி சுடரும் தோற்றத்தது,
ஒற்றை ஆழிக் கதிர்த் தேரொடு ஒத்ததே. - 1.21.71
1316 - நூல் வரும் தகையன நுனிக்கும் நோன்மைய
சால் பெரும் செவ்விய தருமம் ஆதிய
நாலையும் அனையன புரவி நான்கு ஒரு
பாலமை புணர்ந்தன பக்கம் பூண்டவே. - 1.21.72
1317 - இராமபிரான் தேரேறிச் செல்லுதல்
அனையது ஓர் தேரினில் அருணன் நின்று என
பனி வரு மலர்க் கண் அப் பரதன் கோல் கொளக்,
குனி சிலைத் தம்பி பின் கூட, ஏனையன்
இனிய பொன் கவரி கால் இயக்க, ஏகினான். - 1.21.73
1318 - இராமபிரானது அழகின் மேம்பாடு
அமைவு அரு மேனியான் அழகின் ஆயதோ?
கமை உறு மனம் அத்து இன் ஆல் கருத வந்ததோ?
சமைவு உற அறிந்திலம் தக்கது ஆகுக
இமையவர் ஆயினார் இங்கு உளாரும் ஏ. - 1.21.73
1319 - தேவர்களின் ஆனந்தக் கூத்து
வரம்பு அறும் உலகினை வலிந்து மாய்வு இன்றித்
திரம் பயில் அரக்கர்தம் வருக்கம் தேய்வு இன்று
நிரம்பியது எனக் கொடு நிறைந்த தேவரும்
அரம்பையர் குழாம் அத்து ஒடு உம் ஆடல் மேயினார். - 1.21.75
1320 - மிதிலை நகர மகளிர் செயல் (1320-1321)
சொரிந்தனர் மலர் மழை சுண்ணம் தூவினர்
விரிந்து ஒளிர் காசு பொன் தூசு வீசினர்
பரிந்தனர் அழகினைப் பருகினார் கொல் ஆம்
தெரிந்திலர் திருநகர் மகளிர் செய்கையே. - 1.21.76
1321 - வள்ளலை நோக்கிய மகளிர், மேனியின்
எள் அரும் பூண் எலாம் இரிய நிற்கின்றார்;
உள்ளன யாவையும் உதவிப் பூண்டவும்
கொள்ளையில் கொள்க எனக் கொடுக்கின்றார் இன் ஏ. - 1.21.77
1322 - இராமபிரான் மணமண்டபம் சேர்தல்
எஞ்சல் இல் உலகத்து உள்ள எறி படை அரச வெள்ளம்,
குஞ்சரக் குழாம் அத்து இல் சுற்றக் கொற்றவன் இருந்த கூடம்
வெம் சினத் தனு வலானும், மேரு மால் வரையில் சேரும்
செம் சுடர்க் கடவுள் என்னத் தேர் இடைச் சென்று சேர்ந்தான். - 1.21.78
1323 - இரதம் ஆண்டு இழிந்த பின்னர் இரு மருங்கு இரண்டு கையும்
பரதனும் இளைய கோவும் பரிந்தனர் ஏந்தப் பசும் தார்
வரதனும் எய்தி மைதீர் மாதவர்த் தொழுது நீதி
விரத மெய்த் தாதை பாதம் வணங்கி மாடு இருந்த வேலை. - 1.21.79
1324 - சீதை மணமண்டபஞ் சார்தல்
சிலை உடைக் கயல் வாள் திங்கள்
ஏந்தி ஓர் செம் பொன் கொம்பர்
முலை இடை முகிழ்ப்பத் தேர் மேல்
முன் திசை முளைத்தது அன்னாள்
அலை கடல் பிறந்து பின்னை
அவனியில் தோன்றி மீள
மலை இடை உதிக்கின்றாள் போல்
மண்டபம் அதனில் வந்தாள். - 1.21.80
1325 - வானவர் வியத்தல்
நன்றி வானவர் எலாம் இருந்த நம்பியைத்
துன்று இரும் கருங் கடல் துவைப்பத் தோன்றிய
மன்றல் அம் கோதையாள் மாலை சூட்டிய
அன்றினும் இன்று உடைத்து அழகு என்றார் அரோ. - 1.21.81
1326 - திருமணச் சிறப்பு
ஒலி கடல் உலகினில் உம்பர் நாகர் இல்
பொலிவது மற்று இவள் பொற்பு என்றால், இவள்
மலிதரு மணம் படு திருவை வாயினால்
மெலிதரும் உணர்வினேன் என் விளம்புகேன். - 1.21.82
1327 - திருமணம் காணத் தேவர் வருகை
இந்திரன் சசியொடும், எய்தினான், இளம்
சந்திரமௌலியும் தையலாள் உடன்
வந்தனன், மலர் அயன் வாக்கினாள் உடன்
அந்தரம் புகுந்தனன், அழகு காணவே. - 1.21.83
1328 - வசிட்டன் வருதல்
நீந்தரும் கடல் என நிறைந்த வேதியர்
தோய்ந்த நூல் மார்பினர் சுற்றத் தொல் நெறி
வாய்ந்த நல் வேள்விக்கு வசிட்டன் மை அற
ஏய்ந்தன கலப்பை ஓடு இனிதின் எய்தினான். - 1.21.84
1329 - திருமணச் சடங்கு தொடங்குதல்
தண்டிலம் விரித்தனன், தருப்பை சாத்தினன்,
மண்டலம் விதி முறை வகுத்து, மெல் மலர்
கொண்டவை சொரிந்து, எரி குழும மூட்டினன்
பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். - 1.21.85
1330 - சீதாராமர்கள் மணத்தவிசு ஏறுதல்
மன்றலின் வந்து மணத் தவிசு ஏறி
வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்,
ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். - 1.21.86
1331 - இராமபிராற்குச் சீதையைச் சனகன்
தாரை வார்த்தளித்தல்
கோமகன் முன் சனகன் குளிர் நல் நீர்
பூ மகளும் பொருளும் என நீ என்
மா மகள் தன்னொடு மன்னுதி என்னாத்
தாமரை அன்ன தட கையின் ஈந்தான். - 1.21.87
1332 - அப்போது நிகழ்ந்த வாழ்த்து ஒலிகள்
அந்தணர் ஆசி அரும் கலம், அன்னார்
தந்த பல்லாண்டு இசை, தார் முடி மன்னர்
வந்தனை மாதவர் வாழ்த்து ஒலி போல,
முந்திய சங்கம் முழங்கின மாது ஓ. - 1.21.88
1333 - வானவர் முதலியோர் மலர் மழை பொழிதல்
வானவர் பூ மழை மன்னவர் பொன் பூ
ஏனையர் தூவும் இலங்கு ஒளி முத்தம்
தான் நகு நாள் மலர் என்று இவை தம்மால்
மீன் நகு வானின் விளங்கியது இப்பார். - 1.21.89
1334 - பாணிக்கிரகணம்
வெய்ய கனல் தலை வீரனும் அந்நாள்
மை அறு மந்திரம் முற்றும் வழங்கா
நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தான்
தையல் தளிர் கை தடக்கை பிடித்தான். - 1.21.90
1335 - தீவலம் செய்தல்
இடம் படு தோளவன் ஓடு இயை வேள்வி
தொடங்கிய வெம் கனல் சூழ்வரு போதில்
மடம் படு சிந்தையள் மாறு பிறப்பின்
உடம்பு உயிரைத் தொடர்கின்றதை ஒத்தாள். - 1.21.91
1336 - அம்மி மிதித்து அருந்ததி காணல்
வலம் கொடு தீயை வணங்கினர் வந்து
பொலம் புரி நூலவர், செய் பொருள் முற்றி
இலங்கு ஒளி அம்மி மிதித்து எதிர் நின்ற
கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டாள். - 1.21.92
1337 - நன்மனை புகுதல்
மற்று உள செய்வன செய்து, மகிழ்ந்தார்
முற்றிய மாதவர் தாள் முறை சூடிக்
கொற்றவனைக் கழல் கும்பிடலோடும்
பொன் தொடி கைக் கொடு பொன் மனை புக்கான். - 1.21.93
1338 - மகிழ்ச்சி யாரவாரம்
ஆர்த்தன பேரிகள், ஆர்த்தன சங்கம்,
ஆர்த்தன நால் மறை, ஆர்த்தனர் வானோர்,
ஆர்த்தன பல் கலை, ஆர்த்தன பல்லாண்டு,
ஆர்த்தன வண்டு இனம், ஆர்த்தன அண்டம். - 1.21.94
1339 - மணமகன் தாயர் மூவரையும் வணங்கல்
கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்
தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கா
ஆயதன் அன்னை அடித் துணை சூடித்
தூய சுமித்திரை தாள் தொழலோடும். - 1.21.95
1340 - மணமகள் அம்மூவரையும் வணங்கல்
அன்னமும் அன்னவர் அம் பொன் மலர்த் தாள்
சென்னி புனைந்தனள் சிந்தை உவந்தார்
கன்னி அருந்ததி காரிகை காணா
நல் மகனுக்கு இவள் நல் அணி என்றார். - 1.21.96
1341 - தாயரின் பெரு மகிழ்ச்சி
சங்க வளைக் குயிலைத் தழி நின்றார்,
அங்கணன் கு உரியார் உளராவார்
பெண்கள் இனிப் பிறர் ஆர் உளர் என்றார்
கண்கள் களிப்ப மனங்கள் களிப்பார். - 1.21.97
1342 - பெண்ணின் பரிசு வகைகள்
எண் இல கோடி பொன் எல்லை இல் கோடி
வண்ண அரும் கலம் மங்கையர் வெள்ளம்
கண் அகல் நாடும் ஒடு காசு உயர் தூசும்
பெண்ணின் அணங்கு அனையாள் பெறுக என்றார். - 1.21.98
1343 - நூல் கடல் அன்னவர் சொல் கடன் நோக்கி
மால் கடல் அன்ன மனத்தவள் ஓடு உம்
கால் கடல் போல் கருணைக் கடல் பண்டைப்
பால் கடல் அன்னது ஒர் பாயல் அணைந்தான். - 1.21.99
1344 - திருமணவேள்வி நிறைவேறுதல்
பங்குனி உத்தரம் ஆன பகல் போது
அங்கண் இருக்கினில் ஆயிரம் நாமச்
சிங்கம் மணத் தொழில் செய்த திறத்தால்
மங்கல அங்கி வசிட்டன் வளர்த்தான். - 1.21.100
1345 - வள்ளல் தனக்கு இளையோர்கள் தமக்கும்
எள்ளல் இல் கொற்றவன் எம்பி அளித்த
அள்ளல் மலர்த் திரு அன்னவர் தம்மைக்
கொள்ளும் எனத் தமர் ஓடு குறித்தான். - 1.21.101
1346 - கொய்ந் நிறை தாரன் குசத்துவசப்பேர்
நெய்ந் நிறை வேலவன் மங்கையர் நேர்ந்தார்
மைந் நிறை கண்ணியர் வான் உறை நீரார்
மெய்ந்நிறை மூவரை மூவரும் வேட்டார். - 1.21.102
1347 - வேட்டவர் வேட்ட பின் வேந்தனும் மேல் நாள்
கூட்டிய சீர்த்தி கொடுத்திலன் அல்லால்
ஈட்டிய மெய் பொருள் உள்ளன எல்லாம்
வேட்டவர் வேட்டவை வேண்டு அளவு ஈந்தான். - 1.21.103
1348 - ஈந்து அளவு இல்லது ஒர் இன்பம் நுகர்ந்தான்,
ஆய்ந்து உணர் கேள்வி அரும் தவரோடும்
வேந்தனும் அந் நகர் வைகினன், மெள்ளத்
தேய்ந்தன நாள் சில; செய்தது உரைப்பாம். - 1.21.104
1.22. பரசுராமப் படலம் (1349-1398)
1349 - கோசிகன் தவம்புரியச் செல்லுதல்
தான், ஆவது ஒர் வகையே, நனி சனகன் தரு தயலும்
நானாவித வருபோகமும் நுகர்கின்ற அ நாள் வாய்,
ஆனா மறை நெறி ஆசிகள் முனி கோசிகன் அருளிப்,
போனான், வடதிசைவாய் உயர் பொன் மால் வரை புக்கான். - 1.22.01
1350 - தயரதன் தன் நகர்க்குப் பயணமாதல்
அ போதினில் முடி மன்னவன்
அணி மா நகர் செலவே,
'இ போது நம் அனிகம் தனை
எழுக' என்று இனிது இசையாக்,
கைப் போதகம் நிகர் காவலர்
குழு வந்து அடி கதுவ,
ஒப்பு ஓது அரு தேர் மீதினில்
இனிது ஏறினன் உரவோன். - 1.22.02
1351 - தயரதன் அயோத்தி நோக்கிச் செல்லுதல்
தன் மக்களும் மருமக்களும்
நனி தன் கழல் தழுவ,
மன் மக்களும் அயல் மக்களும்
வயின் மொய்த்திட, மிதிலைத்
தொல் மக்களும் மனம் உக்கு உயிர்
பிரிவு என்பது ஒர் துயரின்
வன்மக் கடல் புக, உய்ப்பது ஒர்
வழி புக்கன்னன் மறவோன். - 1.22.03
1352 - இராமன் பிராட்டியொடும் தம்பியருடனும் செல்லுதல்
முன்னே நெடு முடி மன்னவன்
முறையில் செல, மிதிலை
நன் மா நகர் உறைவார் மனம்
நனி பின் செல, நடுவே
தன் நேர் புரைதரு தம்பியர்
தழுவிச் செல, மழை வாழ்
மின் நேர் புரை இடையாள் ஒடும்
இனிது ஏகினன் வீரன். - 1.22.04
1353 - தயரதன் கெட்ட நிமித்தங்கள் கண்டு நிற்றல்
ஏகும் அளவையின், வந்தன வலமும் மயில், இடமும்
காகம் முதலிய முந்திய தடை செய்வன கண்டான்,
நாகம் அனன், இடை இங்கு உளது இடையூறு என நடவான்,
மாகம் அணி அணி தேர் ஒடு நின்றான் நெறி வந்தான். - 1.22.05
1354 - நிமித்திகன் இடையூறு நிகழ்ந்து நீங்குமெனல்
நின்றே நெறி உணர்வான் ஒரு நினைவாளன் ஐ அழையா,
'நன்று ஏ? பழுது உளதோ? நடு உரை நீ நயம்' என்னக்,
குன்றே புரை தோளான் எதிர், புள்ளின் குறி கொள்வான்'
'இன்றே வரும் இடையூறு, அது நன்றாய்விடும்' என்றான். - 1.22.06
1355 - பரசுராமனது வரவு ((1355-1363))
என்னும் அளவினில், வானகம் இருள் கீறிட, ஒளியாய்
மின்னும்படி புடை வீசிய சடையான், மழு உடையான்,
பொன்னின் மலை வருகின்றது போல்வான், அனல் கால்வான்,
உன்னும் தழல் விழியான், உரும் அதிர்கின்றது ஒர் உரையான். - 1.22.07
1356 - கம்பித்து அலை எறி நீர் உறு கலம் ஒத்து உலகு உலையத்
தம்பித்து, உயர் திசை யானைகள் தளரக், கடல் சலியா
வெம்பித் திரிதர, வானவர் வெரு உற்று இரிதர, ஓர்
செம் பொன் சிலை தெறியா, அயில் முக வாளிகள் தெரிவான். - 1.22.08
1357 - 'விண் கீழ் உற என்றோ? படி மேல் கீழ் உற என்று ஏ?
எண் கீறிய உயிர் யாவையும் யமன் வாய் இட என்றே ?
புண் கீறிய குருதிப் புனல் பொழிகின்றன புரையக்,
கண் கீறிய கனலான் முனிவு யாது?' என்று அயல் கருத. - 1.22.09
1358 - போரின் மிசை எழுகின்றது ஒர் மழுவின் சிகை புகையத்,
தேரின் மிசை மலை சூழ்வரு கதிரும் திசை திரிய,
நீரின் மிசை வடவை கனல் நெடுவான் உற முடுகிப்,
பாரின் மிசை வருகின்றது ஒர், படி வெம் சுடர் படர, - 1.22.101
1359 - பாழிப் புயம் உயர் திக்கு இடை அடையப் புடை படர் அச்
சூழிச் சடை முடி விண் தொட, அயல் வெண் மதி தோற்ற,
ஆழிப் புனல் எரி கால் நிலம் ஆகாயமும் அழியும்
ஊழிக் கடை முடிவில் திரி உமை கேள்வனை ஒப்ப. - 1.22.11
1360 - அயிர் துற்றிய கடல் மா நிலம் அடையத் தனி படரும்
செயிர் சுற்றிய படையான், அடல் மற மன்னவர் திலகன்,
உயிர் உற்றது ஒர் மரம் ஆம் என, ஓர் ஆயிரம் உயர் தோள்
வயிரப் பணை துணியத் தொடு வடிவாய் மழு உடையான். - 1.22.12
1361 - நிருபர்க்கு ஒரு பழி பற்றிட, நில மன்னவர் குலமும்
கரு அற்றிட, மழு வாள் கொடு களை கட்டு, உயிர் கவரா,
இருபத்தொரு படிகால், எழு கடல் ஒத்து அலை எறியும்
குருதிக் குரை புனலில் புக முழுகித் தனி குடைவான். - 1.22.13
1362 - கமை ஒப்பது ஒர் தவமும், சுடு கனல் ஒப்பது ஒர் சினமும்,
சமையப் பெரிது உடையான் எதிர் தள்ளுற்று, இடை தளரும்
அமையம் அத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை சீறாச்
சிமையக் கிரி உருவத் தனி வடி வாளிகள் தெரிவான். - 1.22.14
1363 - சையம் புக, நிமிர் அக்கடல் தழுவும்படி சமைவான்,
மையின் உயர் மலை நூறிய மழுவாளவன் வந்தான்;
ஐயன் தனை அரிதில் தரும் அரசன், அது கண்டான்,
'வெய்யன் வர நிபம் என்னை கொல்?' என வெய்துறும் ஏல்வை. - 1.22.15
1364 - பரசுராமனை இராமன் யாரெனக் கருதல்
பொங்கும் படை இரியக், கிளர் புருவம் கடை நெரிய,
வெம் கண் பொறி சிதறக், கடிது உரும் ஏறு என விடையாச்
சிங்கம் என, உயர் தேர் வரு குமரன் எதிர் சென்றான்;
அங்கண் அழகனும்,' இங்கு இவன் ஆரோ?' எனும் அளவில் - 1.22.16
1365 - தயரதன் வணங்குதல்
அரைசன், அவன் இடை வந்து இனிது
ஆராதனை புரிவான்,
விரைசெய் முடி படி மேல் உற
அடி மேல் உற விழலும்,
கரை சென்றிலன், அனையான் நெடு
முடிவின் கனல் கால்வான்,
முரைசின் குரல் பட, வீரனது
எதிர் நின்று இவை மொழிவான். - 1.22.17
1366 - இராமனிடம் பரசுராமன் கூறியது
'இற்று ஓடிய சிலையின் திறம்
அறிவென்; இனி யான் உன்
பொன் தோள் வலி நிலை சோதனை
புரிவான் நசை உடையேன்,
செற்று ஓடிய திரள் தோள் உறு
தினவும் சிறிது உடையேன்,
மற்று ஓர் பொருள் இலை, இங்கு இது என்
வரவு என்றனன் உரவோன். - 1.22.18
1367 - தயரதன் அபயம் வேண்டுதல் ((1367-1371))
அவன் அன்னது பகரும் அளவையின்,
மன்னவன் அயர்வான்,
'புவனம் முழுவதும் வென்று ஒரு
முனிவற்கு அருள் புரிவாய்
சிவனும் அயன் அரியும் அலர்,
சிறு மானிடர் பொருள் ஓ?
இவனும், எனது உயிரும் உனது
அபயம் இனி' என்றான். - 1.22.19
1368 - 'விளிவார் விளிவது தீ வினை விழைவார் உழை அன்றே?
களியால் இவன் அயர்கின்றன உளவோ? கனல் உமிழும்
ஒளிவாய் மழு உடையாய்! பொர உரியார் இடை அல்லால்
எளியார் இடை வலியார் வலி என் ஆகுவது?' என்றான். - 1.22.20
1369 - "நனி மாதவம் உடையாய்! இது பிடி நீ' என நல்கும்
தனி நாயகம் உலகு ஏழையும் உடையாய்! இது தவிராய்;
பனி வார் கடல் புடை சூழ் படி நரபாலரை அருளா,
முனிவு ஆறினை, முனிகின்றது முறையோ?" என மொழியா. - 1.22.21
1370 - 'புறம் நின்றவர் இகழும்படி
நடுவின்தலை புணராத்
திறன் நின்று உயர் வலி என்பது ஒர்
அறிவின் தரு செயலோ?
அறன் நின்றதன் நிலை நின்று உயர்
புகழ் ஒன்றுவது அன்றே
மறன் என்பது? மறவோய்!
இது வலி என்பது வலி ஓ?' - 1.22.22
1371 - 'சலத்தோடு இயைவு இலன் என் மகன்;
அனையான் உயிர் தபும் ஏல்,
உலத்தோடு எதிர் தோளாய் ! எனது
உறவோடு உயிர் உகுவேன்
நிலத்தோடு, உயர் கதிர்வான் உற;
நெடியாய்! உனது அடியேன்
குலத்தோடு அற முடியேல்;
இது குறை கொண்டனன்! என்றான். - 1.22.23
1372 - தயரதன் மனம் வெம்புதல்
என்னா, அடி விழுவானையும் இகழா, எரி விழியாப்,
பொன்னார் கலை அணிவான் எதிர் புகுவான் நிலை உணராத்,
தன்னால் ஒரு செயல் இன்மையை நினையா, உயிர் தளரா,
மின்னால் அயர்வு உறும் வாள் அரவு என, வெய்து உறல் உற்றான். - 1.22.24
1373 - பரசுராமன் சிவனார் வில்லின் வரலாறு கூறுதல் ((1373-1379))
மானம் உடை முடி மன்னவன் மதி சோர்வு உறல் மதியான்,
தான் அ நிலை உறுவான் உறு வினை உண்டு அது தவிரான்,
'ஆனம் உடை உமை அண்ணலை, அந்நாள் உறு சிலைதான்
ஊனம் உளது, அதன் மேல் நிலை கேள் நீ' என உரைப்பான். - 1.22.25
1374 - 'ஒரு கால் வரு கதிர் ஆம் என ஒளி கால்வன, உலையா
வரு கார் தவழ் வட மேருவின் வலி சால்வன, வையம்
அருகா வினை புரிவான் உளன், அவனால் அமைவன ஆம்,
இரு கார்முகம் உள, யாவையும் ஏலாதன மேல் நாள்.' - 1.22.26
1375 - 'ஒன்றினை உமையாள் கேள்வன்
உவந்தனன்; மற்றை ஒன்றை,
நின்று உலகு அளந்த நேமி
நெடிய மால் நெறியில் கொண்டான்;
என்று இஃது உணர்ந்த விண்ணோர்,
'இரண்டினும் வன்மை எய்தும்
வென்றியது யாவது?' என்று,
விரிஞ்சனை வினவ அந்நாள்." - 1.22.27
1376 - "சீரிது தேவர் தங்கள்
சிந்தனை!' என்பது உன்னி,
வேரி அம் கமலத் தோனும்
இயைவது ஓர் விநயம் தன்னால்,
யாரினும் உயர்ந்த மூலத்து
ஒருவராம் இருவர் தம்மை,
மூரி வெம் சிலை மேல் இட்டு
மொய் அமர் மூட்டி விட்டான்." - 1.22.28
1377 - 'இருவரும் இரண்டு வில்லும் ஏற்றினர், உலகம் ஏழும்
வெருவரத், திசைகள் பேர, வெம் கனல் பொங்க, மேல்மேல்
செரு மலைகின்ற போழ்தில், திரிபுரம் எரித்த தேவன்,
வரிசிலை இற்றது ஆக, மற்று அவன் முனிந்து மன்னோ.' - 1.22.29
1378 - 'மீட்டும் போர் தொடங்கும் வேலை,
விண்ணவர் விலக்க, வல் வில்
நீட்டினன் தேவர் கோன் கை
நெற்றியில் கண்ணன்; வெற்றி 378
காட்டிய கரிய மாலும்,
கார்முகம் அதனைப் பாரில்
ஈட்டிய தவத்தின் மிக்க
இரிசிகன் கு ஈந்து போனான்.' - 1.22.30
1379 - 'இருசிகன் எந்தைக்கு ஈய, எந்தையும் எனக்குத் தந்த
வரி சிலை இது நீ நொய்தின் வாங்குதி ஆயின், மன்ன!
குரிசில்கள் நின்னொடு ஒப்பார் இல்லை; யான் குறித்த போரும்
புரிகிலென் நின்னோடு; இன்னும் புகல்வது கேட்டி!' என்றான். - 1.22.31
1380 - பரசுராமன் தான் வந்த காரணம் கூறுதல் ((1380-1382))
'ஊன வில் இறுத்த மொய்ம்பை
நோக்குவது ஊக்கம் அன்று ஆல்,
மானவ மற்றும் கேளாய்,
வழிப் பகை உடையன் நும்பால்,
ஈனம் இல் எந்தை சீற்றம்
நீக்கினான் என்ன, முன் ஓர்
தானவன் அனைய மன்னன்
கொல்ல, யான் சலித்து, மன்னோ,' - 1.22.32
1381 - 'மூ எழு முறைமை பாரில்
முடி உடை வேந்தை எல்லாம்,
மேவு எழு மழுவின் வாயால்
வேர் அறக் களைகட்டு அன்னார்
தூ எழு குருதி வெள்ளத்
துறை இடை, முறையின் எந்தைக்கு
ஆவன கடன்கள் நேர்ந்தேன்,
அரும் சினம் அடக்கிப் போந்தேன்' - 1.22.33
1382 - 'உலகு எலாம் முனிவற்கு ஈந்தேன்,
உறு பகை ஒடுக்கிப் போந்தேன்,
அலகு இல் மா தவங்கள் செய்து, ஓர்,
அருவரை இருந்தேன், ஆண்டைச்
சிலையை நீ இறுத்த ஓசை
செவி உறச், சீறி வந்தேன்
மலைகுவன், வல்லை ஆயின்,
வாங்குதி வில்லை' என்றான். - 1.22.34
1383 - இராமன் வில்லை வளைத்தது
என்றனன்; என்ன, நின்ற
இராமனும் முறுவல் எய்தி,
நன்று ஒளிர் முகத்தன் ஆகி,
'நாரணன் வலியின் ஆண்ட
வென்றி வில் தருக' என்னக்
கொடுத்தனன், வீரன் கொண்டான்!
துன்று இரும் சடையோன் அஞ்சத்
தோள் உற வாங்கிச் சொல்லும். - 1.22.35
1384 - தன் அம்புக்கு இலக்கு யாது என இராமன் வினாவல்
'பூதலத்து அரசை எல்லாம்
பொன்றுவித்தனை என்றாலும்,
வேத வித்து ஆய மேலோன்
மைந்தன் நீ, விரதம் பூண்டாய்,
ஆதலில் கொல்லல் ஆகாது;
அம்பு இது பிழைப்பது அன்று ஆல்,
யாது இதற்கு இலக்கம் ஆவது?
இயம்புதி விரைவின்' என்றான். - 1.22.36
1385 - பரசுராமன் இராமனைத் துதித்தல் ((1385-1386))
'நீதியாய்! முனிந்திடேல்; நீ இங்கு யாவர்க்கும்
ஆதி, யான் அறிந்தன் என், அலங்கல் நேமியாய்!
வேதியா! இறுவது ஏ அன்றி, வெண் மதிப்
பாதியான் பிடித்த வில் பற்றப் போதும் ஓ?' - 1.22.37
1386 - 'பொன் உடை வனை கழல், பொலம் கொள் தோளினாய்!
மின் உடை நேமியான் ஆதல் மெய்ம்மையால்,
என் உளது உலகினுக்கு இடுக்கண்? யான் தந்த
உன்னுடை வில்லும் உன் உரத்துக்கு ஈடு அன்று ஆல்.' - 1.22.38
1387 - பரசுராமனது தவம் இராமன் அம்புக்கு இலக்கமாதல்
'எய்த அம்பு, இடை பழுது எய்திடாமல் என்
செய்தவம் யாவையும் சிதைக்க ஏ' எனக்,
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி மீண்டது ஏ. - 1.22.39
1388 - பரசுராமன் விடைபெற்றுச் செல்லுதல்
'எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக!
மண்ணிய மணி நிற வண்ண! வண் துழாய்க்
கண்ணிய! யாவர்க்கும் களைகண் ஆகிய,
புண்ணிய! விடை' எனத் தொழுது போயின் ஆன். - 1.22.40
1389 - இராமன் தயரதன் துயரைத் தீர்த்தல்
அழிந்து அவன் போனபின், அமலன், ஐயுணர்வு
ஒழிந்து, தன் உயிர் உலைந்து, உருகும் தாதையைப்
பொழிந்த பேர் அன்பினால் தொழுது முன்பு புக்கு,
இழிந்த வான் துயர்க் கடல் கரை நின்று ஏற்றினான். - 1.22.41
1390 - தயரதனது பெருமகிழ்ச்சி
வெளிப்படும் உணர்வினன், விழுமம் நீங்கி ஏ,
தளிர்ப்புறு மத கரித் தானையான், இடைக்
குளிப்பு அரும் துயர்க் கடல் கோடு கண்டவன்,
களிப்பு எனும் கரை இலாக் கடலுள் ஆழ்ந்தனன். - 1.22.42
1391 - தயரதன் ஆனந்தக் கண்ணீர் சொரிதல்
பரிவு அறு சிந்தை அப் பரசுராமன் கை
வரி சிலை வாங்கி ஓர் வசையை நல்கிய
ஒருவனைத் தழுவி நின்று, உச்சி மோந்து, தன்
அருவி அம் கண் எனும் கலசம் ஆட்டினான். - 1.22.43
1392 - தயரதன் மகிழ்ந்து கூறுதல்
'பொய்ம்மை இல் சிறுமையில் புரிந்த ஆண் தொழில்,
மும்மையின் உலகினால் முடிக்கல் ஆவது ஓ?
மெய்ம்மை இச் சிறுவனே, வினை செய்தோர்களுக்கு
இம்மையும் மறுமையும் ஈயும்!' என்றனன். - 1.22.44
1393 - இராமன் வில்லை வருணனிடம் தந்து
அயோத்தியை அடைதல்
பூ மழை பொழிந்தனர் புகுந்த தேவருள்,
வாம வேல் வருணனை,' மான வெம் சிலை
சேமி' என்று உதவித், தன் சேனை ஆர்த்து எழ
நாம நீர் அயோத்தி மா நகரம் நண்ணினான். - 1.22.45
1394 - தயரதன் பரதனைக் கேகய நாட்டிற்கு அனுப்புதல் ((1394-1395))
நண்ணினர், இன்பத்து வைகும் நாள் இடை,
மண் உறு முரசு இனம் வயங்கு தானையான்,
அண்ணல் அப் பரதனை நோக்கி, ஆண் தகை
எண் அரும் தகையது ஓர் பொருள் இயம்புவான். - 1.22.46
1395 - 'ஆணை நின் தன் முது தாதை ஐய! நிற்
காணிய விழைவது ஓர் கருத்தன் ஆதலால்,
கேணியில் வளை முரல் கேகயம் புகப்,
பூண் ஒளிர் மார்ப! நீ போதி' என்றனன். - 1.22.47
1396 - பரதன் கேகய நாடு செல்லுதல்
ஏவலும், இறைஞ்சிப் போய்; இராமன் சேவடிப்
பூவினைச் சென்னியில் புனைந்து போயினான்,
ஆவி அங்கு அவன் அலது இல்லை ஆதலால்,
ஓவலில் உயிர் பிரிந்து உடல் சென்று என்ன ஏ. - 1.22.48
1397 - கேகய நாட்டை அடைதல்
உளை விரி புரவித் தேர் உதாசித்து என்று எணும்
வளை முரல் தானையான் மருங்கு போதப் போய்,
இளையவன் தன்னொடும் ஏழு நாள் இடை,
நளிர் புனல் கேகயநாடு நண்ணினான். - 1.22.49
1398 - கவிக்கூற்று
ஆனவன் போன பின், அரசர் கோ மகன்
ஊனம் இல் பேர் அரசு உய்க்கும் நாள் இடை,
வானவர் செய்த மா தவம் உண்டு ஆதலால்,
மேல் நனி நிகழ்ந்தன விளம்புவாம் அரோ ! - 1.22.50
This file was last updated on 1 May 2012.
.